சூப்பர் மவுண்டன்கள்.! இமயமலையை விட 4 மடங்கு பெரியதாம்.. என்னவெல்லாம் ஸ்பெஷல் தெரியுமா
வாஷிங்டன்: நமது பூமி பல ஆச்சரியங்களை உள்ளடக்கிய ஒன்று. பெர்முடா முக்கோணம் தொடங்கி நமது பூமியில் உள் பல்வேறு விஷயங்கள் இன்னும் கூட மர்மமாகவே உள்ளது.
பூமியின் மர்மங்களுக்கு விடை தெரிந்து கொள்ள நாமும் பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறோம். அப்போது பூமி குறித்து நம் பல விஷயங்களை புதிதாகத் தெரிந்து கொள்கிறோம்.
ஏழுமலையானை திருப்பதியில் மட்டுமில்லை... தமிழகத்திலும் தரிசிக்க முடியும்.. அமையப்போகும் 4 கோவில்கள்!
உலகில் தற்போது இருக்கும் சிகரங்களில் மிக உயரமானது எது என்று கேட்டால் அனைவருக்கும் இதற்கான பதில் தெரியும். எவரெஸ்ட் சிகரம் தான் உலகிலேயே மிகவும் உயரமான சிகரம்.
எவரெஸ்ட்
இமயமலைத் தொடரில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரம் 8,848 மீட்டர் உயரம் கொண்டது. ஆனால், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டம் முழுக்க கூட மலைத்தொடர்கள் பரவி இருந்தன. இவை இமயமலையை விடப் பல மடங்கு நீலம் கொண்டதாக இருந்ததாகவும் இவை நமது பூமியின் பரிணாம வளர்ச்சிக்குப் பெரியளவில் உதவியாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் பூமியின் வரலாறு முழுக்க இதுபோன்ற சூப்பர் மலைகள் இருந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
சூப்பர் மலைகள்
இதுபோன்ற சூப்பர் மலைகள் சுமார் 8,000 கிலோமீட்டர்கள் வரை நீண்டு இருந்தன. இது இமயமலைத் தொடர் (2,300 கிலோமீட்டர்) நீளத்தை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாகும். இது போன்ற மலைத் தொடர்கள் வரலாற்றில் இரண்டு முறை தோன்றியுள்ளது. முதலில் 2,000 முதல் 1,800 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பும்: இரண்டாவது முறை 650 முதல் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பும் இதுபோன்ற இரண்டு சூப்பர் மலை தொடர்கள் தோன்றியுள்ளன. நமது பூமியில் ஏற்பட்ட இரண்டு முக்கியமான பரிணாம வளர்ச்சிக் காலங்களுக்கும் இந்த சூப்பர் மலைத்தொடர்களுக்கும் இடையே தொடர்பு உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அரிய கனிமங்கள்
இது தொடர்பாக எர்த் அண்ட் பிளானட்டரி சயின்ஸ் லெட்டர்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், குறைந்தளவு லுடீடியம் உலோகத்தை கொண்ட சிர்கானின் தடயங்களையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த சிர்கான் உயர்ந்த மலைகளின் அடித்தளத்தில் மட்டுமே காணப்படும் அரய கனிமம் ஆகும். அதி தீவிர அழுத்தம் ஏற்படும் போது இந்த அரிய கனிமங்கள் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இமயமலையை விட பெரியது
இந்த இரண்டு நிகழ்வுகளுக்கு இடையில் வேறு சூப்பர் மலைத்தொடர்கள் உருவாகி இருக்க வாய்ப்பில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஜியா ஜூஜூ என்ற ஆய்வாளர் கூறுகையில். "இன்று இந்த இரண்டு சூப்பர்மலைகளைப் போல் எந்த மலைத்தொடரையும் நம்மால் பார்க்க முடியாது. உயரம் மட்டுமில்லை நீளத்திலும் இவை இமயமலையை விட சுமார் 3 அல்லது 4 முறை பெரியது" என்று அவர் தெரிவித்தார்.
2 சூப்பர்மவுண்டன்கள்
இதில் முதல் சூப்பர்மவுண்டன் நுனா சூப்பர்மவுண்டன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் இருந்து தான் முதற்கட்ட தாவரங்கள் மற்றும் விலங்குகள் தோன்றியதாகக் கூறப்படுகிறது. அதேபோல இரண்டாவது சூப்பர் மவுண்டன் டிரான்ஸ்கோண்ட்வானன் சூப்பர்மவுண்டன் என்று அழைக்கப்படுகிறது. இதே காலகட்டத்தில் தான் பூமியில் முதன்முதலில் பெரிய அளவிலான விலங்குகள் தோன்றியதாகவும் கூறப்படுகிறது.
இடைப்பட்ட காலம்
இதுபோன்ற சூப்பர் மலைத்தொடர்கள் அரிக்கப்பட்ட போது, அவை கடல்களுக்கு பாஸ்பரஸ் மற்றும் இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்களை வழங்கியதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அதேபோல ஆரம்பக்காலத்தில் பூமியின் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் பெரியளவில் இல்லை. 1,800 முதல் 800 மில்லியன் ஆண்டுகளுக்கு இடையில் கிரகத்தில் பரிணாம வளர்ச்சி விகிதம் குறைந்ததற்கு இந்த சூப்பர்மலைகள் இல்லாததே காரணம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.