விக்ரமனுக்கு ஆதரவாக டைரக்டர் நவீன் வெளியிட்ட பதிவு.. பழைய பதிவை வைத்து கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைய இருக்கும் நேரத்தில் இறுதிப் போட்டியாளராக இருக்கும் விக்ரமனுக்கு ஆதரவாக டைரக்டர் நவீன் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே பல பிரபலங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமன் ஜெயிக்க வேண்டும் என ஆதரவாக பதிவு வெளியிட்டு வருகின்றனர்.
டைரக்டர் நவீன் தற்போது விக்ரமனுக்கு வெளியிட்ட பதிவுக்கும் ஏற்கனவே சீசன் இரண்டில் சென்ராயனுக்கு வெளியிட்ட பதிவிற்கும் உள்ள வித்தியாசத்தை குறித்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

கடைசி நேரம் ஆதரவு
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைய என்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. நாளையோடு இந்த நிகழ்ச்சி முடிவடைய இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் தற்போது மூன்று போட்டியாளர்கள் மட்டுமே இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றனர். இவர்களில் யார் ஜெயிப்பார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் உள்ளே இருக்கும் மூன்று போட்டியாளர்களுக்கும், அவர்களை சார்ந்தவர்களும் அவர்களை பிடித்து போனவர்களும் தங்களுடைய ஆதரவுகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இதுவரைக்கும் அமைதியாக இருந்த பிரபலங்கள் கூட கடைசி நேரத்தில் தங்களுடைய ஆதரவை பகிங்கரமாக தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்களின் குற்றசாட்டு
அந்த வகையில் தான் ஆரம்பத்தில் இருந்து தனக்கு கட்சியிலிருந்து எந்த ஆதரவும் வராது என்று விக்ரமன் கூறி இருந்த நிலையில், அவருக்கு கடைசி நேரத்தில் அவர் உறுப்பினராக இருக்கும் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவிக்க அவரைத் தொடர்ந்து, எம்எல்ஏ ஆதரவு தெரிவிக்க அரசியல் பிரமுகர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்று விக்ரமனுக்கு எதிராக இருக்கும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்து கூறிவரும் நிலையில், அசீமுக்கும் PR ஆதரவு இருக்கிறது என்று விக்ரமன் ரசிகர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்த நிலையில் விக்ரமனுக்கு ஆதரவாக டைரக்டர் நவீன் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

டைரக்டர் நவீன் பதிவு
டைரக்டர் நவீன் ஒரு இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும், நடிகராகவும் இருந்து வருகிறார். இவர் இதுவரைக்கும் மூடர்கூடம் எனும் திரைப்படத்தை இயக்கியும், தயாரித்தும், நடித்தும் இருக்கிறார். இந்த நிலையில் இவர் கடைசி நேரத்தில் விக்கிரமனுக்கு ஆதரவாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், "வெகுஜன மக்களை பெரிதும் சென்றடைய கூடிய ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியை பகுத்தறிவு கருத்துக்கள் பேசி ஆக்கபூர்வமாக பயன்படுத்தி இருக்கும் தோழர் விக்ரமனுக்கு வாழ்த்துக்கள். அவர் நோக்கம் நிறைவேறியதாகவே நான் கருதுகிறேன், இதுவே வெற்றிதான் அறத்தின் வெற்றி! அறம் வெல்லும்" என்று பதிவு வெளியிட்டிருக்கிறார்.

பழசை கிளறும் நெட்டிசன்கள்
இந்த நிலையில் ஏற்கனவே டைரக்டர் நவீன் பிக் பாஸ் தமிழ் சீசன் 2ல் சென்ராயன் கலந்து கொண்டிருக்கும்போது அவருடைய வெளியேற்றத்தின்போது அவர் வெளியிட்ட பதிவையும் நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதில் "வாடா தம்பி சென்றாயா. வந்து பொழப்ப பாரு. பிக் பாஸ் என்னும் மூடர் கூடத்தில் இருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதை குறித்து பிக் பாஸை பற்றி அப்போ இருந்த கருத்து இப்போது மாறிவிட்டதா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப, எல்லா நிலையிலும் எல்லாருடைய மனதும் ஒரே போல இருக்காது. சில மாற்றங்கள் சிலவற்றை பிடிக்க வைத்து விடுகிறது என்று நவீனுடைய ரசிகர்கள் அவருக்கு சப்போர்ட்டாக கருத்து கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications