கேரளாவில் ஆர்எஸ்எஸ் அலுவலகம் மீது திடீர் குண்டு வீச்சு.. பதற்றம்.. போலீஸ் தீவிர விசாரணை
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பையனூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம் மீது இன்று அதிகாலை வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இதில் அலுவலகத்தில் ஜன்னல் கண்ணாடி உடைந்த நிலையில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. பினராயி விஜயன் முதல்வராக உள்ளார்.
கண்ணூர் மாவட்டம் பையனூரில் ஆர்எஸ்எஸ் அலுவலம் உள்ளது. இங்கு அவ்வப்போது நிர்வாகிகள் ஆலோசனை நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் குண்டுவீச்சு
இந்நிலையில் இன்று அதிகாலையில் பையனூர் ஆர்எஸ்எஸ் அலுவலகம் மீது திடீரென்று வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் அந்த அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம், காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கண்விழித்தனர். அவர்கள் சம்பவம் குறித்து ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணை
இதையடுத்து சம்பவ இடத்துக்கு ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், போலீசார் சென்றனர். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை துவக்கினர். அதிகாலை 1.30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வெடிகுண்டை ஆர்எஸ்எஸ் அலுவலகத்தின் உள்ளே வீசி சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வழக்குப்பதிவு
இந்த பகுதியில் ஏற்கனவே பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் இடையே வன்முறை, மோதல்கள் நடந்த வரலாறு உள்ளது. குறிப்பாக 2010-2016 க்கு இடையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பாஜக கண்டனம்
இதுபற்றி பாஜகவை சேர்ந்த டாம் வட்காம் கூறுகையில், ‛‛இந்த தாக்குதல் துரதிர்ஷ்டவசமானது. இத்தகைய தாக்குதலை கட்டுப்படுத்துவதில் மாநில அரசு தவறிவிட்டது. இதற்கு முன்பு ஆர்எஸ்எஸ்ஸை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தற்போது அலுவலகம் மீது குண்டு வீசப்பட்டுள்ளது. இதில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications