லட்சத்தீவு அமைதியை சீர்குலைக்கும் நிர்வாக அதிகாரி.. 93 ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் பிரதமருக்கு கடிதம்
திருவனந்தபுரம்: லட்சத்தீவில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுத்து வரும் பிரபுல் கோடா படேல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற 93 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்தியாவிலேயே க்ரைம் ரேட் மிக குறைவாக உள்ள பகுதி என்றால் அது லட்சத்தீவு தான். நாட்டிலேயே மிகவும் அமைதியாகத் திகழும் பகுதிகளில் ஒன்று லட்சத்தீவு.
பணி நீக்கப்பட்ட 7 மாற்றுத் திறனாளி கணினி ஆசிரியர்கள்.. பணி வழங்க முதல்வரிடம் உருக்கமான கோரிக்கை
ஆனால் கடந்த சில மாதங்களாகவே லட்சத்தீவில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. அங்கு மத்திய அரசின் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பிரபுல் கோடா படேல் தொடர்ந்து சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்து வருகிறார்.
சர்ச்சை நடவடிக்கைகள்
குஜராத்தைச் சேர்ந்த பிரபுல் கோடா படேல், கடந்த ஆண்டு மத்திய அரசின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். பொதுவாக அரசு அதிகாரிகள் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படும் நிலையில், பாஜகவைச் சேர்ந்த பிரபுல் கோடா படேல் நியமிக்கப்பட்ட போதே சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில், கடலோர மக்களின் குடியிருப்புகள் அகற்றுவது, மதுபான பார்களுக்கு அனுமதி அளிப்பது, மாட்டிறைச்சிக்குத் தடை விதிப்பது எனத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
93 ஓய்வு பெற்ற குடிமைப் பணியாளர்கள் கடிதம்
இந்நிலையில், அவர் மீது பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற 93 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். அரசியலமைப்பு நடத்தை குழு என்ற பெயரில் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தாங்கள் எந்தவொரு அரசியல் கட்சியிலும் இல்லை என்றும் நடுநிலைமை மற்றும் இந்திய அரசியலமைப்பு மீது நம்புவதாகவும் அவர்கள் தங்கள் கடிதத்தில் கூறியுள்ளனர். வளர்ச்சி என்ற பெயரில் லட்சத்தீவில் அமைதியைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் இது கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
லட்சத்தீவு நலனுக்கு எதிரான முடிவு
மேலும், அந்தக் கடிதத்தில், "நிர்வாக அதிகாரியின் முடிவுகள் தீவுகளில் உள்ளவர்களின் நலன்களுக்கு எதிரான உள்ளது. அங்குள்ள சுற்றுச்சூழலையும் சமூகத்தையும் இது பாதிக்கிறது. இந்த முடிவுகளை அவர் லட்சத்தீவு மக்களுடன் கலந்து ஆலோசிக்காமல் எடுத்துள்ளார். அந்தத் தீவை ஒரு சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் என்பதற்காக லட்சத்தீவு சமூகம், பொருளாதாரம், மக்கள் ஆகியவை மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
உணவுக் கட்டுப்பாடு
குறிப்பிட்ட மதத்தைக் குறிவைத்து, அவர்களின் உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலும் புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தத் தீவில் உள்ள 96.5% மக்கள் இஸ்லாமியர்கள். விலக்கு பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கப்படுகிறது. இது லட்சத்தீவில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, நிர்வாக அதிகாரியின் சர்ச்சைக்குரிய முடிவுகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் நிர்வாகியை லட்சத்தீவுக்கு நியமிக்க வேண்டும்" என்று அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.