2023-ல் லோக்சபா மற்றும் அனைத்து மாநில சட்டசபைக்கும் தேர்தல்: பாஜக பகீர் ப்ளான் குறித்து பிசி ஜார்ஜ்
திருவனந்தபுரம்: லோக்சபாவுக்கு 2023-ம் ஆண்டே முன்கூட்டியே தேர்தலை நடத்தவும் அந்த தேர்தலின் போது அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தவும் பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது என்று கேரள ஜனபக்ஷம் கட்சித் தலைவரான பி.சி. ஜார்ஜ் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பி.சி. ஜார்ஜின் கேரள ஜனபக்ஷம் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 7 முறை தாம் வென்ற பூஞ்ஞார் தொகுதியில் தோல்வி அடைந்தார். முன்னதாக கேரளாவில் சர்ச்சை அரசியல்வாதி என பெயர் பெற்றவர் பிசி ஜார்ஜ்.

இந்த நிலையில் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பி.சி. ஜார்ஜ் கூறியுள்ளதாவது: அடுத்த லோக்சபா தேர்தலை பிரதமர் மோடி அறிவிப்பார்.அப்போது அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்கிற அறிவிப்பும் வெளியாகும்.
அனேகமாக 2023-ல் லோக்சபா தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது அப்போதே அனைத்து மாநிலங்களிலும் பொதுத்தேர்தலும் நடைபெறும். பொறுத்திருந்தே பாருங்கள் என்ன நடக்கப் போகிறது என்பதை..
2023 சட்டசபை தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடுவேன். அப்போது வெற்றி பெற்று மீண்டும் எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்குள் நுழைவேன். இதுதான் நடக்கப் போகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் மீண்டும் என் பூஞ்ஞார் தொகுதியில் இருப்பேன். இவ்வாறு பிசி ஜார்ஜ் கூறியிருக்கிறார்.
பிசி ஜார்ஜின் இந்த பேட்டி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதுதான் பாஜகவின் முழக்கம். தற்போதைய நிலையில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு பல மாநிலங்களில் கடும், எதிர்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில்தான் பாஜக முன்கூட்டியே லோக்சபா, சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications