கேரளாவில் அதி தீவிர மழை.. இடுக்கி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!. மக்களுக்கு எச்சரிக்கை
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று அதி தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், இடுக்கி, கொல்லம், திருவனந்தபுரம், பத்தினம்திட்டா ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுள்ளது. மேலும் மக்களும் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளா உள்பட மேற்கு கடற்கரை மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது.
பருவமழை தொடங்கியதில் இருந்தே பல்வேறு இடங்களிலும் கன மழையானது தொடர்ந்து பெய்து வருகிறது.

கேரளாவில் கனமழை
இதனால் பல்வேறு நகரங்கள் தண்ணீரில் மிதந்து வருகிறது. இதில், கேரளாவிலும் சமீபத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்நிலைகளிலும் தொடர்ந்து தண்ணீரின் அளவு அதிகரித்து வருவதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மலைப்பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்படுகிறது. இதில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழைக்கு 15 பேர் உயிரிழந்தனர்.

மிக கனமழை பெய்யும்
அதன்பின்னர் கடந்த வாரம் பெரிய அளவில் மழை பெய்யாவிட்டாலும் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வந்தது. இதில் கடந்த 2 நாட்களாக கேரளாவில் மீண்டும் மழை அதிகளவில் பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று அதிதீவிர மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இடுக்கி, திருவனந்தபுரம், கொல்லை மற்றும் பத்தினம்திட்டா ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

4 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட்
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கருதி அந்த 4 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதி தீவிர மழை பெய்யும் என்பதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், எனவே மலைப்பகுதியில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தயார் நிலையில் மீட்பு பணி
மேலும் இந்த நேரத்தில் ஆற்றுப்பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் எனவும், தேவையில்லாத விஷயத்திற்கு வெளியில் வரவேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாநில மீட்பு படையினரும் இந்த மாவட்டங்களில் தயார் நிலையில் இருந்து வருகின்றனர். மேலும் கேரள அரசின் கோரிக்கையை அடுத்து அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையிலிருந்து 5பேர் குழு கொண்ட 125 பேர் கேரளாவின் மேற்கண்ட மாவட்டங்களில் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications