முன்னே செல்வது..- சிறுகதை
-குகன்
ஒவ்வொருவராக ஓட்டு வீட்டுக்குள் சென்று அழுதுக்கொண்டு இருந்தனர். சந்தானம், சென்பகம் அப்பொது தான் பார்வதி வீட்டுக்குள் நுழைகிறார்கள். பார்வதியின் சடலத்தை பார்த்ததும் சென்பகம் அழத் தொடங்கிவிட்டாள்.
“மகாராசி எப்படி வாழ்ந்தா... அவளுக்கு இப்படி ஒரு சாவா வரணும்..."
ஊரே பார்வதியின் மரணத்திற்காக அனுதாபப்பட்டது. சந்தானம் மட்டும் பார்வதி வாழ்ந்த வாழ்க்கை நினைவில் ஓட்டிக்கொண்டு இருந்தான்.
சந்தானமும் சென்பகமும் பார்வதியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள். பார்வதியின் கணவர் ரங்கநாதன் அரசாங்க வேலை செய்துக் கொண்டு இருந்தார். ரங்கநாதன் பார்வதியை மகாராணிப் போல் நடத்தினான். பார்வதி, ரங்கநாதனதின் மகன் சுரேஷ் கல்லூரி படிப்பு முடித்து வேலை தேடிக்கொண்டு இருக்கிறான். தனக்கு பிறகு தன் மகன் எல்லாம் செய்வான் என்று வீட்டை தன் மகன் பெயரில் எழுதி வைக்கிறான் ரங்கநாதன்.
பார்வதி பணியாரம் செய்து சந்தானம் வீட்டுக்கு கொடுக்க சொல்லி ரங்கநாதனிடம் கொடுத்து அனுப்பினாள்.
ரங்கநாதன்: “என் பொண்டாட்டி பணியாரம் பண்ணறதுல...யாராலையும் அவள அடிச்சிக்க முடியாது." தன் மனைவியின் பெருமையை சொல்லி கொண்டு இருந்தான்.
சந்தானம்: “என் பொண்டாட்டி பணியாரம் பண்ணா...என்டா சாப்பிட்டோம்னு சொல்லி நம்மல நாமே அடிச்சிக்கமா இருக்க முடியாது" என்றான்.
இரண்டு குடும்பத்தினரும் நல்ல நண்பர்கள் போல் இருந்தனர். காலத்தில் கோலமாய் ரங்கநாதன் மாரடைப்பில் இறந்து விடுகிறான். ரங்கநாதனின் மரணத்திற்காக வந்த உதவி தொகை எல்லாம் சுரேஷ் திருமண செலவுக்காக செலவு செய்கிறாள் பார்வதி.
வெளிநாட்டில் வேலைக் கிடைப்பதற்காக சுரேஷ் பார்வதியிடம் பணம் கேட்டான். பார்வதியிடம் பணம் இல்லாததால் ,பார்வதியின் தன் மகன் எதிர்காலத்தை கருதி வீட்டு பத்திரத்தை கொடுக்கிறாள். சுரேஷ் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து வெளிநாட்டு வேலைக்கு பணம் கட்டுகிறான். தன் மகன் தன்னை வெளிநாட்டில் அழைத்து செல்வான் என்ற கனவில் இருந்தாள் பார்வதி.
வெளிநாட்டில் வேலை கிடைத்தவுடன் பாஸ்போட்டுக்காக தன் மனைவிக்கும், தனக்கும் மட்டும் ஏற்பாடு செய்துக் கொண்டு இருந்தான்.
பார்வதி சுரேஷ்யிடம்
“ஏன்டா... எனக்கு பாஸ்போட் எடுத்தியா...."
“இல்லம்மா... முதல்ல நானும் என் பொண்ணாட்டியும் போரோம்... அப்புறம் நான் வந்து உன்ன கூட்டிக்கிட்டு போரேன்..."
“ டேய் ! வயசனா காலத்துல நான் எப்படி தனியா இருப்பேன்... என்ன தனியா விடாதேடா... நானும் உன் கூடவே வரேன்..."
“அதெல்லாம் முடியாதுமா... ரொம்ப கஷ்டம்"
சுரேஷ் யார் பேச்சும் கேட்காமல் பார்வதியை முதியோர் இல்லத்தில் சேர்த்து வெளிநாட்டுக்கு செல்கிறான். தன் கணவன் இழந்த சோகம் ஒருபுறம், மகன் பிரிந்து சென்ற கவலை மறுபுறம். இந்த சோகத்திலேயே பார்வதி இறக்கிறாள்.
மூதியோர் இல்லத்தில் இருந்து பார்வதியின் சடலத்தை அடகு வைத்த வீட்டுக்கு எடுத்து வருகிறார்கள். வெளிநாட்டில் இருக்கும் சுரேஷ் வர முடியாத சூழ்நிலையில் இருக்கிறான். தன் தாயின் இறுதி சடங்கை விட அவனுக்கு பணம் தான் முக்கியாக கருதினான்.
சந்தானத்தின் மகன் ராஜாவைக் கூட தன் மகன் போல் நினைத்தாள் பார்வதி. அதனால் சென்பகம் தன் மகன் ராஜாவை பார்வதிக்கு கொல்லி வைக்க சொல்கிறாள். ராஜா பார்வதிக்கு எல்லா இறுதி கடனும் செய்கிறான்.
“நல்லா வாழ்ந்தவ... இப்படி யாரும் இல்லாத அனாதை மாதிரி போராலே..." என்று ஊர் முழுக்க அவளுக்காக அனுதாபப்பட்டது.
சென்பகம் பார்வதிக்காக அனுதாபப்பட சந்தானம் பார்வதியிடத்தில் சென்பகத்தை வைத்து யோசிக்கிறான். நாளை தன் மரணத்தின் பிறகு சென்பகத்திற்கு இதே நிலைமை வந்துவிடுமோ என்று அஞ்சுகிறான். அதனால் பி.எப், இன்சுரன்ஸ், வீடு எல்லாம் சென்பகத்தை நாமினியாக இருக்க எழுதி வைக்கிறான்.
“எதுக்கு எல்லா பேப்பர்ல கையெழுத்து வாங்குனீங்க..."
“சும்மா... உன் பாதுக்காப்புக்காக தான்..."
“இவ்வளவு வருஷமா... எனக்கு பாதுகாப்பா இருந்தீங்க... அப்புறம் வேற எதுக்கு இன்னொரு பாதுகாப்பு..."
“எனக்கு அப்புறம் ... இந்த பேப்பர் உன்ன பாதுக்காக்கும்..."
சென்பகம் வாயடைத்து நின்றாள். எதுவும் பேசவில்லை.
மறுநாள் காலையில் சென்பகத்திற்கு முன்பே சந்தானம் விழிக்கிறான். சந்தானம் சென்பகத்தை பலமுறை எழுப்பி பார்க்கிறான். அவள் எழவில்லை. தன் மகன் ராஜாவை கதறி அழைக்கிறான். ராஜா ஓடி வந்து பார்க்கிறான். ராஜா சென்பகத்தின் நாடி பிடித்து பார்த்ததும், அவள் இறந்ததை அறிகிறான். சந்தானத்தால் சென்பகம் இறந்ததை நம்ப முடியவில்லை. சிறு குழந்தை போல் கதறி அழுகிறான்.
“நான் செத்தா நீ எப்படி வாழனும் நினைச்சேன்.. நீ செத்தா நான் எப்படி வாழ்றதுன்னு நான் ஒரு நாள் கூட நினைச்சு பார்க்கலையே..."
சந்தானத்தின் கதறல் தெருவெல்லாம் எதிரொலிக்கிறது.
-குகன் ([email protected])