பாடம் கற்காத மலேசியா அரசு!
அண்மையில் பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி அரசாங்கம் மோசமான தோல்வியை சந்தித்த போதிலும் அதன் அமைச்சர்கள் இன்னும் தொடர்ந்து மக்களிடம் பொய் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அந்தத் தோல்வியிலிருந்து எந்தப் பாடத்தையும் அவர்கள் கற்றுக் கொள்ளவில்லையா? அறிவுக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டு நம்மை அவமதிக்கும் போக்கை அவர்கள் எப்போது நிறுத்தப் போகிறார்கள்? ஒவ்வொரு முறையும் ஒரு தேசிய முன்னணி அமைச்சர் வாய் திறக்கும்போதும் ஏதாவது பொய் சொல்லுகிறார்கள் அல்லது மனம் நோகும்படி பேசுகிறார்கள்.
மக்கள் ஓசை தமிழ் நாளிதழை தடைசெய்ய அரசாங்கம் முடிவு செய்ததற்கான காரணம் அது இன நல்லிணக்க வரம்பு முறைகளை மீறியதுதான் என உள்துறை அமைச்சர் சைட் அமிட் அல்பார் கூறியிருக்கலாம்.
பிரதமரின் மருமகன் இண்ட்ராப் தலைவர்களையும் ஆதரவாளர்களையும் 'நடைபாதை குரங்குகள்" என கூறியது மத நல்லிணக்கத்திற்கு மருட்டலான செய்கை அல்லவா? “எங்களுக்கு ஊடக வழிகாட்டிகள் இருக்கின்றன நாங்கள் விருப்பம்போல் அச்சக பர்மிட்டுக்களை ரத்துச்செய்ய முடியாது. மக்கள் ஓசை பர்மிட்டை நாங்கள் ரத்து செய்யவில்லை ஆனால் அதனை புதுப்பிப்பதில்லை என முடிவு செய்திருக்கிறது" என்று சைட் அமிட் கூறுகிறார்.
“ரத்து செய்யப்பட்டது" என்பதற்கும் “தொடர அனுமதி வழங்கப்படவில்லை" என்பதற்கும் என்ன வேறுபாடு?
பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சியினரின் செய்திகளுக்கு மக்கள் ஓசை நாளிதழ் சற்று அதிகமாக இடம் கொடுத்திருந்தது உண்மைதான். அதற்காக அவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்திய சமூகம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. தேசிய முன்னணி அரசாங்கம் பல பொய் வாக்குறுதிகளையும் தீவிரமான தவறுகளையும் செய்து கொண்டுதான் இருக்கிறது. அதன் தலைக்கனம் குறையவில்லை.
தேர்தலில் கடுமையாக வீழ்ந்த பின்னரும் தொடர்ந்து வாக்குறுதிகளை அவர்கள் அள்ளி வீசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் பாடம் கற்றிருப்பர்கள் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் இல்லை. தொடர்ந்து இந்திய சமூகத்திற்கு சினம் ஊட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்தப்போக்கு தொடர்ந்தால் தேசிய முன்னணி தொடர்ந்து இருக்குமா என்பது கேள்விகுறிதான்.
-ஜோசுவா புருஷோத்தமன்([email protected])