கொங்கு மண்டலமும் சேவல் சண்டையும்!
-வடிவேல்
தென் மாவட்டங்களில் பொங்கல் என்றாலே ஜல்லிக்கட்டு விசேஷமானது என்றால் கொங்கு மண்டலத்தில் சேவல் சண்டை பிரபலமாக உள்ளது.
தமிழகத்தில் இளைஞர்களை கவர்ந்த விளையாட்டு என்று எடுத்துக் கொண்டால் ஜல்லிக்கட்டு, கபடி, சிலம்பாட்டம், குதிரை ரேஸ், பைக் ரேஸ் போன்றவைகள் தான் நினைவுக்கு வரும்.
அந்த வகையில், கொங்கு மண்டலத்தில் சேவல் சண்டை என்பது புகழ் பெற்று விளங்குகிறது.
கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், போன்ற மாவட்டங்களில் பல பகுதிகளில் சேவல்களை பந்தயத்திற்காக சண்டையிட வைக்கும் நிகழ்ச்சி தினந்தோறும் நடைபெற்று வருகிறது.
சேவல் 'செலக்ஷன்':
சேவல்கள் இயல்பாகவே ஆக்ரோஷத்துடன் சண்டையிடும் குணம் கொண்டது. அதில் பெரு விடைக் கோழி என்ற ரகத்தை தேர்வு செய்து சண்டைச் சேவலாகவே தனி ஊட்டம் கொடுத்து வளர்த்து வருகின்றனர்.
இச் சேவலை, உயரம், பருமன், கால் உறுதி, கொண்ட பெருவிடைக் கோழி குஞ்சுகளிலிருந்து வலுவான ஆரோக்கியமான அயிட்டங்களை சண்டைக்காகவே தேர்ந்து எடுத்து வளர்த்து வருகின்றனர்.
கிராமங்களில் சண்டை சேவல்களால் வருமானமும், கவுரமும் தேடிவரும் என்பதால், பெற்ற குழந்தைகளை போல கண்ணும் கருத்துமாக இவற்றை வளர்க்கின்றனர்.
பெட்டைக் கோழிகளுடன் இணைந்து கட்டுத் தாரை என்ற பாதுகாப்பான இடங்களில் இச் சேவல்களை கட்டி வைத்து ஆண்மை பாதுகாப்புடன் வளர்த்து வருகின்றனர்.
'ஹெல்த்தி' சாப்பாடு:
இந்த சேவல்களுக்கு கோதுமை, பச்சரிசி, ராகி, கம்பு, போன்ற ஸ்பெஷல் உணவு மட்டுமே கொடுக்கின்றனர்.
இரண்டு சேவல்களை சண்டையிட வைத்து தினசரி யுத்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ரேசுக்கு குதிரைகளை பழக்குவது போன்று இந்த சேவல்களையும் கிணறு, குளம், ஆறு, தொட்டிகளில் நீந்த விட்டு நீச்சல் பயிற்ச்சி கொடுக்கின்றனர். இதனால் சேவலின் கால்கள் மிகவும் வலுப்பெறுகிறது.
பரப்பு, பேடு, மயில், கீறி, வல்லூறு, செவளை, காகம், ஆந்தை, அரளை, புள்ளி, பொன் ரம் - இதெல்லாம் சண்டை சேவல்களின் பல ரகங்கள்.
சேவல் போட்டி நடைபெறும் இடங்களுக்கு, போட்டிக்காக 100 க்கும் மேற்பட்ட சேவல்கள் தினசரி கொண்டு வரப்படுகிறது. சேவல்களின் வலது கால் பின் விரலில் சிறிய கூர்மையான கத்தியை கட்டி விடுகின்றனர்.
கத்தி கட்டும் 'கட்டாலிகள்':
எல்லோராலும் இப்படி கத்தியை கட்ட முடியாது. சிறப்பு பயிற்சி பெற்ற சிலரால் தான் இந்த கத்திகளை கட்ட முடியும். இவர்களுக்கு கட்டாலிகள் என்ற பட்டமும் உண்டு.
சண்டையில் வெற்றி பெறும் சேவலுக்கு வெற்றி என்றும், தோல்வி பெறும் சேவலுக்கு கோட்சை என்றும் பெயர்.
ஒரு சேவல் தனது சேவலுடன் சண்டையிட்டு வெற்றி பெற குறைந்த பட்சம் 5 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை ஆகிறது.
சேவல்கள் சோர்வு அடையும் போது எலுமிச்சை சாறு, குளுக்கோஸ், கோவத்தலை போன்றவற்றை கொடுத்து பலம் ஊட்டுகின்றனர்.
சேவல் சண்டை நடத்தப்படும் இடத்தில் சுமார் 100 லிட்டர் ரத்தமாவது சிந்தி அது யுத்த களம் போல் காட்சி தருகிறது. அந்த ரத்தவாடையே பார்ப்பவர்களை மயக்கம் போட வைத்துவிடும்.
திருச்சி, வெள்ளகோவில், காங்கயம், பொள்ளாச்சி, மூலனூர் , சேலம், வேடசந்தூர், திண்டுக்கல், பழனி, திருநெல்வேலி, போன்ற ஊர்களில் இருந்தும் கேரளா , கர்னாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆயிரக்கணக்கானவர்கள் இரண்டு சக்ர வாகனங்களிலும், ஜீப்களிலும் வந்து இந்த சேவல் யுத்தத்தைப் பார்க்கின்றனர்.
சேவலுக்கு சேவல் சண்டையிடும் இந்த நிகழ்ச்சியை பறவையிடுவது என்றும் அழைக்கின்றனர்.
சேவல் சண்டை நடை பெறும் இடங்களில் பெட்டிங் நடை பெறும். இந்த பெட்டிங் ரூ 500 முதல் துவங்கி அதிகபட்சமாக ரூ 2 லட்சம் வரை கட்டப்படுகிறது. வெற்றி பெற்ற பல சேவல்கள் மூலம் பல லட்ச ரூபாய் கிடைக்கிறது. இதற்காகவே என்று தனியாக புரோக்கர்கள் உள்ளனர். பெட்டிங்கில் பலர் பணத்தை மட்டுமல்லாது நகைகளை கூட இழந்து கொண்டுள்ளனர் என்பது தான் வேதனையான செய்தி.
சேவல் சண்டை நடக்கும் ஏரியாக்களில் போலீஸ் ஸ்டேசனுக்கு போட்டி நடைபெறும் நாள் அன்று ரூ 3000 முதல் 10,000 வரை மாமூலாக கொடுத்து விடுகின்றனர். இதனால் போலீஸார் சேவல் சண்டையின் அகோரங்களைக் கண்டும் காணாமல் இருந்து விடுவார்களாம்.
சேவல்களை வதைக்கும் இத்தகைய விளையாட்டை தடை செய்ய வேண்டும் என ஒரு பக்கம் குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தாலும் கூட, கொங்கு மண்டலம் முழுவதும் சேவல் சண்டை சிறப்பாகவே நடந்து வருகிறது.
-வடிவேல்([email protected])