வைரமுத்துவின் படைப்புகள் குறித்த தேசிய கருத்தரங்கம்
கவிஞர் வைரமுத்துவின் படைப்புகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் மதுரையில் நடக்க உள்ளது.
இதுகுறித்து மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கவிஞர் வைரமுத்துவின் படைப்புகள் குறித்த தேசிய அளவிலான படைப்பிலக்கிய கருத்தரங்கம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் சனிக்கிழமை நடக்கிறது.
பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதி உதவியுடன் நடைபெறும் இந்த கருத்தரங்கத்தில் 15 பல்கலைக்கழகங்கள், 105 கல்லூரிகள் பங்கு பெறுகின்றன.
வைரமுத்துவின் பல்வேறு படைப்புகளை ஆய்வு செய்து 368 ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரைகளை சமர்ப்பித்து உள்ளனர். இவற்றை 3 தொகுதிகளாக பிரித்து 2 ஆயிரத்து 716 பக்கங்களில் "வைரமுத்து ஆய்வுக் களஞ்சியம்" என்ற நூலாக கருத்தரங்கில் வெளியிடப்படுகிறது.
காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த விழாவில் கல்லூரியின் செயலாளர் விஜயராகவன் வரவேற்று பேசுகிறார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கற்பக குமாரவேல் தலைமை தாங்குகிறார். மாநில தகவல் அறியும் சட்டத்துறை ஆணையர் பெருமாள்சாமி, கல்லூரியின் துணைத்தலைவர் ராஜகோபால், முதல்வர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
வைரமுத்து ஆய்வுக்களஞ்சியம் நூல்களை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட, டைரக்டர் பாரதிராஜா பெற்றுக் கொள்கிறார். பின்னர் தனது படைப்புகள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசுகிறார்.
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமையில் நடக்கும் நிறைவு விழாவில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தவர்களுக்கு சான்றிதழ்களை வைரமுத்து வழங்குகிறார் என்றார்.