துபாய் தமிழ்ச் சங்கத்தில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்
துபாய்: துபாய் தமிழ்ச் சங்கம் சார்பில் தேசப்பிதா காந்தியடிகளின் 140வது பிறந்த நாள் மற்றும் பாரதியார் நினைவு தின விழா ஆகியவை 2ம் தேதி சிறப்பாக நடத்தப்பட்டன.மாலை ஷார்ஜா ஸ்டார் சர்வதேசப் பள்ளி அரங்கில் நடந்த நிகழ்ச்சியின் துவக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்தினை சந்திரா கீதா கிருஷ்ணன் மற்றும் சீதா லட்சுமி பாடினர். தமிழ்மொழி வாழ்த்தினை பிரீத்தி பாடினார்.
பொருளாளர் கீதா கிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினர்கள் டாக்டர் சுப்புலட்சுமி பாலா மற்றும் ஈடிஏ அஸ்கான் நலத்துறை மேலாளர் முஹைதீன் பாட்சா ஆகியோருக்கு துணைப்பொருளாளர் சுந்தர் மற்றும் அவரது துணைவியார் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்பு நல்கினர். மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பேராசிரியர் கலந்தர் தனது உரையில் காந்தியடிகளின் வாழ்வில் நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தார். காந்தியடிகளின் எளிமையான வாழ்வினையும், மேலும் தன்னம்பிக்கையுடன் மனம் தளராது உழைத்து வாழ்வில் உயர்நிலையினை அடைந்த உத்தமரை நாம் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்றார்.
ஈடிஏ அஸ்கான் நலத்துறை மேலாளர் முஹைதீன் பாட்ஷா தனது உரையில் தான் இருப்பது அமீரகமா அல்லது தமிழ் விளையாடும் மதுரை மாநகரமா என வியப்பு மேலிடும் வண்ணம் இந்நிகழ்வு இருந்ததாகக் குறிப்பிட்டார்.
குழந்தைகள் ஒவ்வொருவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் நிகழ்வில் பங்கேற்றது மிகுந்த மகிழ்வினையளிக்கிறது. பெற்றோர்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட்டு அவர்களது தேவைகளை அறிந்து செயல்பட வேண்டும். தேவையினைக் குறைத்து மகிழ்வுடன் வாழ வேண்டும் என்றார்.
துபாய் தமிழ்ச் சங்கத்தின் அனைத்து நிகழ்வுகளுக்கும் தன்னால் இயன்ற அனைத்து ஒத்துழைப்புகளையும் நல்குவதாகத் தெரிவித்தார்.
டாக்டர் சுப்புலட்சுமி பாலா தனது உரையில் பல்வேறு தமிழ் அமைப்புகள் இருந்தாலும் இந்திய கன்சுலேட் அங்கீகாரத்துடன் செயல்பட்டு வரும் துபாய் தமிழ்ச் சங்கத்தின் பணி முக்கியத்துவம் வாய்ந்த்தாக இருந்து வருகிறது.
இதன் பணிகள் மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன். பாரதியாரை நினைவு கூறும் விதமாக பாரதியார் வேடமணிந்த சிறுவனை நிகழ்ச்சியில் அமர வைத்திருந்தது இந்நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டுவதாக இருந்தது என்றார்.
திருக்குறளை மிருதுளா, ஸ்ரியா, ஹம்ஷினி மற்றும் பதமஸ்ரீ ஆகியோர் வாசித்து அதன் விளக்கவுரையினை வழங்கினர்.
காந்தியடிகள் குறித்த உரையினை அம்ருதா கிரியும், பாரதியார் குறித்த உரையினை கோபிகாவும் வழங்கினார்.
துபாய் தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள அடையாள அட்டையினை நிறுவன புரவலர் லியாக்கத் அலி முதலாவதாக சுரேஷ் கிருஷ்ணாவுக்கு வழங்கினார். அடையாள அட்டை குறித்த விபரங்களை கமிட்டி உறுப்பினர் விஜயேந்திரன் அறிமுகப்படுத்திப் பேசினார்.
பாரதியாரின் பாடலான பாடு பாடு பாரதப் பண்பாடு எனும் பாடலுக்கு சுமிதா, திவ்யஸ்ரீ, பிரித்தி, நேஹா, காவ்யா பிரபலனும், நிற்பதுவும், நடப்பதும் எனும் பாடலுக்கு வசுந்தரா, லோதிகா, ஆர்யா ஆகியோரும் நடனம் ஆடினர்.
மாணவ, மாணவியரின் கணித அறிவுத்திறனை சோதிக்கும் அபாகள் குறித்த உரையினை கீதா ஸ்வாமிநாதன், காவ்யா மற்றும் நேஹாவுடன் வழங்கினார்.
தமிழ் மொழியின் அவசியம் குறித்து பிரியா சிவகுமார் உரை நிகழ்த்தினார். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சி குறித்த மேலதிக புகைப்படங்களை
http://www.facebook.com/album.php?aid=40197&id=1207444085&l=25e348cc4e எனும் வலைத்தளத்தில் காணலாம்.
இறுதியில் உலக அமைதிக்கான சிறப்புப் பிரார்த்தனையினை முருகன் நடத்தினார். நிகழ்ச்சியினை மீரா கிரி தொகுத்து வழங்கினார். விஜயேந்திரனின் நன்றியுரைக்குப் பின்னர் நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
நிகழ்ச்சி சிறப்புற நடைபெற துபாய் தமிழ்ச் சங்க நிறுவன புரவலர் ஏ. லியாக்கத் அலி வழிகாட்டுதலில் துபாய் தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் சி. ஜெகன் நாதன் தலைமையிலான குழுவினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.