நூற்றாண்டு விழா: மு.வ. நினைவு தபால் தலை வெளியிட கபில் சிபலிடம் கோரிக்கை
கோவை: டாக்டர் மு.வ.நூற்றாண்டு விழாயொட்டி அவரது நினைவாக தபால் தலை வெளியிடுமாறு பி.ஆர்.நடராஜன் எம்.பி. மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபிலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் கபில் சிபலுக்குஅனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது,
டாக்டர் மு.வரதராசனார் (1912-1974) ஒரு சிறிய தாலுகா அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றி, பின்பு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக 1971ம் ஆண்டு முதல் 1974ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தவர்.
தமிழ் பண்டிதராக இருந்த அவர் தமிழ் வித்துவானாக உயர்ந்தார். மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கிய ஆராய்ச்சியில் முதல் பி.எச்.டி. பட்டம் பெற்றவர். 83 புத்தகங்களை எழுதி உள்ளார். இதில் தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூல் சாகித்ய அகாடமியால் வெளியிடப்பட்டுள்ளது. இது வரை 28 பதிப்புகளை அந்த நூல் கண்டுள்ளது.
அவர் 1949ம் ஆண்டு உலகப்புகழ் பெற்ற மறைநூலான திருக்குறளுக்கு எழுதிய விளக்க உரை நூல் தற்போது 210க்கும் மேற்பட்ட முறை மறுபதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழறிஞர் மு.வ. அவர்களின் சாதனைகளைப் பற்றி முழுவதுமாக கூற இந்த சிறிய கடிதத்தின் பக்கங்கள் போதுமானது அல்ல.
இந்த நிலையில் அவரது நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் பத்மஸ்ரீ பொள்ளாட்சி ந.மகாலிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மு.வ. அவர்களின் நூற்றாண்டு விழா துவக்க நாளான 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் தேதி மத்திய அரசின் சார்பில் தமிழறிஞர் மு.வரதராசனார் அவர்களது நினைவு தபால் தலை வெளியிடுவதே சரியானதாக இருக்கும் என்று இந்த குழு முழுமனதுடன் கருதுகிறது. எனவே அவரது நினைவாக தபால் தலை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications