ஜித்தா இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபோரம் நடத்திய குழந்தை வளர்ப்பு சிறப்பு நிகழ்ச்சி!
சவூதி அரேபியா: ஜித்தா இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபோரம் (JIFF) நடத்திய குழந்தை வளர்ப்பு சிறப்பு நிகழ்ச்சி கடந்த 4ம் தேதி இரவு ஷரபிய்யாஹ் இம்பாலா வில்லாவில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் மக்கள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.
முன்னதாக திருமறை வசனங்களை ஓதி சகோதரர் அப்துல் கபூர் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். பின்னர் ரபீக் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். ஃபோரத்தின் பணிகள் குறித்த அறிமுகவுரையை அதன் மக்கள் தொடர்பாளர் சல்மான் அவர்கள் நிகழ்த்தினார்.
ஜித்தாவில் ஜேஐஎப்எப் செய்து வரும் பல்வேறு சமூகநலப் பணிகளைப் பற்றி அவர் எடுத்துரைத்தார். ஹாஜிகளுக்கான சேவை, மருத்துவ விழிப்புணர்வு முகாம்கள், இலவச மருத்துவப் பரிசோதனை, ஜித்தாவில் ஆதரவற்று நிற்கும் இந்தியர்களுக்கு உரிய உதவிகளைச் செய்தல் போன்ற பல்வேறு பணிகளை ஜேஐஎப்எப் செய்து வருவதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக "குழந்தை வளர்ப்பு" என்ற தலைப்பில் ஜேஐஎப்எப் தலைவர் அல்-அமான் அவர்கள் ‘Presentation' வடிவத்தில் தன் உரையை வழங்கினார். குழந்தைகள் மனோநிலையை எதார்த்தமாக விளக்கிய அவர், குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு என்பது இன்றியமையாதது என்றார். கருவில் இருகின்றபோதே குழந்தைகள் சில விஷயங்களை தாயின் மூலம் உணர்ந்து கொள்வதாகவும், அவர்கள் தவறான போக்கினை கடைப்பிடிப்பதற்கு பெற்றோர்களின் கவனக் குறைவே காரணம் என்றும் அழகாக எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து, "ஹுப்புர் ரசூல்" என்ற தலைப்பில் நபிகளாரின் வாழ்கையைப் பற்றி சகோதரர் கே.ஐ.எம்.ஷரீப் அவர்கள் சிறப்பாக உரையாற்றினார். வரலாற்று உதாரணங்களோடு அண்ணலாரின் வாழ்வினை அவர் திறன்பட விளக்கினார்.
குழந்தைகளுக்குத் தனியாக திருக்குர்ஆன் ஓதுதல், ஊக்கப் பயிற்சிகள் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்சியில் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த திரு. மல்லப்பன் மற்றும் பொறியாளர் அப்துல் வதூத் அவர்களுக்கு ஜேஐஎப்எப்-ன் சார்பாக நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாக ஷேக் அப்துல்லாஹ் அவர்கள் நன்றியுரையினை நவில, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியினை பஷீர் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியின் சாராம்சம்: நிகழ்ச்சியின் இறுதியில் கலந்து கொண்ட பெண்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, டாக்டர் பரிமளா (ஷிபா மருத்துவமணை) நிகழ்ச்சி முடிந்தபின், தங்கள் உடல் பிரச்னைகள் குறித்து பெண்களில் பலர் தனிமையில் மருத்துவரிடம் ஆலோசனைகள் பல பெற்று பயனடைந்தனர்.
அனைவருக்கும் கருத்துப் படிவம் கொடுத்து நிகழ்ச்சி குறித்து அவர்களின் கருத்துகள் எழுதி வாங்கப்பட்டன. கலந்து கொண்ட அனைவரும் இந்த இனிய மாலை நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக அகமகிழ்வுடன் கூறினர். ஜேஐஎப்எப்-ன் தன்னார்வத் தொண்டர்கள் நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை மிக நேர்த்தியாகச் செய்திருந்தனர்.