கத்தார் காயல் மன்றத்தின் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி- கடையநல்லூர் எம்எல்ஏ அபூபக்கர் பங்கேற்பு
கத்தாரில் நடந்த காயல் மன்றத்தின் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கடையநல்லூர் எம் எல் ஏ பங்கேற்றார்.
கத்தார் : கத்தார் காயல் பட்டணம் நல மன்றத்தின் 33வது பொதுக்குழு கூட்டம் மற்றும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி கடந்த வியாழக்கிழமை கத்தார் - தோஹாவில் உள்ள வேம்பநாடு ரெஸ்டாரெண்டில் நடந்தது.
கத்தார் காயல் மன்றத்தின், மன்ற செயலாளர் எம்.என். முஹம்மது சுலைமான் அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தோரை வரவேற்று நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.
மன்றத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களான பாஜுல் கரீம், கே.வி.ஏ.டி ஹபீப் முஹம்மது, முஹம்மது யூனுஸ் மற்றும் மார்க்க அறிஞர் அல் ஹாபிழ் ஸாலிஹ் ஆலிம் ஆகியோர் முன்னிலை வகிக்க, மன்ற தலைவர் மொகுதூம் மீரான் அவர்கள் இக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.
இறைமறை வசனங்கள்
மன்ற உறுப்பினர் ஹாபிழ் மஹ்மூத் லெப்பை இறைமறையின் சில வசனங்களை இனிதே ஓதி துவக்கி வைத்தார். "கவிக்குயில்" ஃபாயிஸ் இனிய பாடலுடன் கூட்டம் ஆரம்பமானது. இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் முஸ்தபா (தலைவர், கத்தர் காயிதே மில்லத் பேரவை) மற்றும் சபீர் அஹமத் (மூத்த தலைவர், கத்தர் லால்பேட்டை ஜமாஅத்) கலந்து கொண்டார்கள்.
சட்டசபை உறுப்பினர் பங்கேற்பு
சிறப்பு விருந்தினராக, தமிழகத்தில் இருந்து கடையநல்லூர் சட்டசபை உறுப்பினர் முஹம்மது அபூபக்கர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவருக்கு நினைவுப் பரிசை மன்ற தலைவர் மொகுதூம் மீரான் வழங்கினார். பின்னர் சிறப்பு அழைப்பாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.
ஒரு நாள் ஊதியம் நன்கொடை
நடப்பு நிகழ்ச்சியில், நகரின் பல்வேறு நலத்திட்டத்திற்காக மன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை நன்கொடையாக வழங்கி சிறப்பித்தார்கள். இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மஃரிப் தொழுகைக்கான அதான் ஒலிக்கப்பட, இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி துவங்கியது. அனைவருக்கும் பேரீச்சம்பழம், வடை வகைகள், குளிர்பான வகைகள், பழ வகைகள் பரிமாறப்பட்டன.
நிகழ்ச்சி ஏற்பாடுகள்
அதற்குப் பிறகான இரண்டாம் அமர்வில், தூத்துக்குடியில் சமீபத்தில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில் உயிர் நீத்த சகோதர சகோதரிகளுக்கு மன்றத்தின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மன்றத்தின் ஆலோசனை குழு உறுப்பினர் பாஜுல் கரீம் நன்றி தெரிவிக்க ஹாஃபிழ் அமீர் சுல்தானின் இனிய பிராத்தனையுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளை துணை தலைவர்கள் முஹம்மத் முஹ்யித்தீன் மற்றும் செய்து முஹிதீன் ஆகியோர் செய்திருந்தனர்.