டென்மார்க் அரசு நூலகத்தில் தரங்கம்பாடி வரலாறு... ஆவணப்படுத்தும் தமிழ் மரபு அறக்கட்டளை!
ட்ரென்டன்(யு.எஸ்) : டென்மார்க் அரசு நூலகத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் ஏராளமான தமிழ் ஓலைச் சுவடிகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.
ஃபெட்னா இணை அமர்வில் கலந்து கொண்ட அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் சுபாஷிணி, தான் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி பற்றி விவரித்தார்.
3111 ரூபாய்க்கு விலைபோன தரங்கம்பாடி
கிபி 1600-களில் ரகுநாத நாயக்க மன்னர் தரங்கம்பாடியை 3111 ரூபாய் வருடாந்திர குத்தகைக்கு வணிக நோக்கிற்காக டென்மார்க்குக்கு கொடுத்துள்ளார். அந்த ஆணைக்கான தங்க ஓலைச்சுவடி இன்னும் டென்மார்க் அரசுப் பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதை மின்னாக்கம் செய்துள்ள டாக்டர் சுபாஷிணி,
டென்மார்க் அரசு நூலகத்தில் உள்ள பல ஒலைச் சுவடிகளையும் மின்னாக்கம் செய்துள்ளார். தரங்கம்பாடிக்கு வந்த டேனீஷ்காரர்கள், அங்குள்ள மக்களிடமிருந்து பல தமிழ் ஓலைச் சுவடிகளை வாங்கியுள்ளார்கள். அங்கு வந்த பாதிரிமார்கள், தமிழ் கற்று அன்றைய வாழ்க்கை முறை பற்றியும் கிறித்துவ வேதாமகம் பற்றியும் ஓலைச்சுவடிகள் தங்கள் கைப்பட எழுதியுள்ளார்கள். அவைகளுள் பாதிரியார் சீகன்பால் எழுதிய ஓலைச் சுவடிகள் முக்கியமானதாகும். இவை அனைத்தும் டென்மார்க்கில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஓலைச்சுவடிகள் பற்றிய டாக்குமெண்டரி படம் ஒன்றை ஃபெட்னா விழாவில் டாக்டர் சுபாஷிணி வெளியிட்டார்
புத்தகமாக வெளியிடும் முயற்சி
டென்மார்க் நூலகத்திலும், அரசுப் பெட்டகத்திலும் சிறப்பு அனுமதி பெற்று, இது வரையிலும் 38 தமிழ் கையெழுத்து சுவடி நூல்களின் மின்னாக்கத்தை முடித்துள்ள டாக்டர் சுபாஷிணி, அவற்றை இக்கால தமிழ் வடிவத்தில் நூலாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அவருடைய முயற்சியைப் பாராட்டிய அமெரிக்க தமிழ் ஆர்வலர்கள் இந்த முயற்சிக்கு ஒத்துழைக்க முன் வந்துள்ளனர் . புத்தகமாக வெளியிடுவதற்கு தமிழ்மண் பதிப்பகம் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
இந்த திட்ட செயலாகத்திற்குக் காரணமாக அமைந்த ஃபெட்னா தமிழ் விழாவுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில், விரைவில் நிறைவேற்ற விரும்புவதாக டாக்டர் சுபாஷிணி கூறினார். இந்த ஓலைச் சுவடிகள் மூலம் தரங்கம்பாடி வரலாறு குறித்த பல புதிய தகவல்கள் வெளிவர உள்ளன
ஏன் தமிழ் மரபு அறக்கட்டளை?
தமிழகத்திலும் மலேசியாவிலும் பதிவு செய்யப்பட்டு பதினாறு ஆண்டுகளாக செயல்படும் தமிழ் மரபு அறக்கட்டளை, தமிழ் பாரம்பரியத்தையும் வரலாற்றையும் உள்ளபடியே ஆவணப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுகிறது.
தமிழ் மரபு விழிப்புணர்வு கருத்தரங்கள், தமிழ் மரபு ஒலி ஒளிப்பதிவுகள், மாணவர் மரபு மையம், அரிய ஆவணங்களின் மின்னாக்கப் பட்டறைகள் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு வெளியீடுகளும் சேகரங்களும் உடன் அடங்கும்.
பிரிட்டிஷ் நூலக அரிய தமிழ் நூல்கள் மின்னாக்கம், டென்மார்க் அரச நூலக பாதிரிமார்கள் கையெழுத்துச் சுவடி ஆவணங்கள், தமிழகமெங்கும் ஓலைச்சுவடி தேடும் திட்டம், தலபுராண நூல்கள் சேகரிப்பு திட்டம், வருடாந்திர கருத்தரங்கள், பள்ளி அருங்காட்சியகம், ஆண்டு தோறும் தமிழறிஞர் சிறப்பித்தல் போன்ற எதிர்காலத் திட்டங்களைய்ம் ஃபெட்னா இணை அமர்வில் டாக்டர் சுபாஷிணி அறிவித்தார்.
உலகெங்கும் பாதுகாக்கப்பட்டு, இன்னும் புத்தகமாக வெளிவராத ஆயிரக்கணக்கான
தமிழ் ஓலைச் சுவடிகளில் தரங்கம்பாடி வரலாறு மட்டுமல்லாமல், தமிழர் வரலாறும் ஒளிந்து கிடக்கின்றன. தமிழ் மரபு அறக்கட்டளை போன்ற அமைப்புகள் மூலம் அவை வெளிவந்தால் பெருமளவு வாழ்வழி கதையாகவே உள்ள தமிழர் கலாச்சாரம், வரலாறு பற்றிய ஏராளமான புதிய தகவல்கள் வெளிவரும் என்று நிச்சயமாக நம்பலாம்.
-ஃபெட்னா அரங்கிலிருந்து இர தினகர்