3. நீத்தார் பெருமை
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
(21)
விளக்கம்:
வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைபிடித்து, ஆசையைத் துறந்தவர்களின் பெருமையைப் போற்றிச் சிறப்பித்துச் சொல்வதே நூல்களின் சிறப்பாகும்.
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கோண் டற்று.
(22)
விளக்கம்:
உலகப் பற்றுக்களை விட்டொழித்தவரின் பெருமையை அளந்து சொல்வதானால், உலகில் இதுவரை இறந்தவர்களைக் கணக்கெடுப்பது போலதாகும்.
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
(23)
விளக்கம்:
இப்பிறவி, மறுபிறவி என்னும் இரண்டின் கூறுகளையும் தெரிந்து, இவ்வுலகில் அறநெறியை மேற்கொண்டு வாழ்பவர்களின் பெருமையே உயர்ந்ததாகும்.
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
(24)
விளக்கம்:
அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிற யானைகளை அடக்கிக் காப்பவன் எவனோ, அவனே மேன்மையான சொர்க்கத்திற்குச் செல்ல தகுதியானவன்.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு உளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
(25)
விளக்கம்:
ஐம்புலன்கள் மூலமாக எழுகின்ற ஆசைகளை தவிர்த்தவனுடைய வலிமைக்கு, அகன்ற வானுலகின் தலைவனான இந்திரனே போதிய சான்று ஆவான்.
செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
(26)
விளக்கம்:
செய்வதற்கு அரியதாக உள்ள செயலை செய்து முடிப்பவரே பெரியவர். அப்படிச் செய்ய இயலாதவர் சிறியவர்.
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
(27)
விளக்கம்:
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படுகின்ற ஐந்தின் வகைகளையும் தெரிந்து நடப்பவனிடமே உலகம் உள்ளது.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
(28)
விளக்கம்:
நிறைவான மொழிகளையே சொல்லும் சான்றோரின் பெருமையை, உலகத்தில் நிலையாக விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
(29)
விளக்கம்:
நல்ல குணம் என்கிற குன்றின்மேல் ஏறிநின்ற சான்றோரால், சினத்தை ஒரு கணம் கூட வைத்துக கொள்ள முடியாது.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுக லான்.
(30)
விளக்கம்:
எல்லா வகையான உயிருக்கும் செம்மையான அருளை மேற்கொண்டு நடப்பதானால், அந்தணர் எனப்படுவோர் அறவோர் என்றழைக்கப்படுகிறார்.