4. அறன் வலியுறுத்தல்
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்துனூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
(31)
விளக்கம்:
அறமானது சிறப்பைத் தரும். செல்வத்தையும் தரும். ஆகையால் அறத்தைவிட உயிருக்கு ஆக்கம் தருவது வேறு எதுவுமில்லை என்கிறார் வள்ளுவர்.
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
(32)
விளக்கம்:
அறநெறியொடு வாழ்வதைக் காட்டிலும் உயிருக்கு நன்மையானதும் இல்லை. அறநெறியைப் போற்றாமல் மறத்தலைக் காட்டிலும் கேடானதும் இல்லை.
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
(33)
விளக்கம்:
நம்மாலே முடிந்த வகைகளில் எல்லாம், முடியக் கூடிய வழிகளில் எல்லாம், அறச் செயலை இடைவிடாமல் தொடர்ந்து செய்து வருதல் வேண்டும்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.
(34)
விளக்கம்:
தன் மனத்திடத்துக் குற்றம் இல்லாதவனாகுதல் என்னும் அவ்வளவே அறம் எனப்படும்; மற்றவையெல்லாம் வெறும் ஆரவாரத் தன்மை கொண்டவை
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
(35)
விளக்கம்:
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் என்னும் நான்கிற்கும் ஒரு சிறிதும் இடம் தராமல் ஒழுகிவருவதே அறம் ஆகும்.
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
(36)
விளக்கம்:
'பின் காலத்தில் பார்ப்போம்' என்று தள்ளி வைக்காமல், அறத்தை அன்றே செய்க; அது இறக்கும் காலத்திலே அழியாத் துணையாகும்.
அறத்தாறு இதுவென வேண்டா சிலிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
(37)
விளக்கம்:
சிவிகையை (பல்லக்கு) சுமப்பவனோடு, அதனில் செல்பவன் ஆகியோரிடையே , 'அறத்தின் வழி இதுதான்' என்று கூறவேண்டாம்.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
(38)
விளக்கம்:
செய்யத் தவறிய நாள் என்றில்லாமல் ஒருவன் அறம் செய்வானானால், அதுவே வாழ்நாள் முடியும் வழியை அடைக்கும் கல்லாகும்.
அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.
(39)
விளக்கம்:
அற வாழ்வில் வாழ்வதானால் வருவதே இன்பமாகும்; மற்றைப் பொருளும் இன்பமும் இன்பமாகா; அவற்றால் புகழும் இல்லை.
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
(40)
விளக்கம்:
ஒருவன் தன் வாழ்நாளில் செய்யவேண்டியது எல்லாம் அறமே. அவன் செய்யாமல் காக்க வேண்டியது எல்லாம் பழிச்செயலே.