For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

65. சொல்வன்மை

By Staff
Google Oneindia Tamil News

நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.

(641)

விளக்கம்:

நாவன்மை என்னும் சிறப்பைப் பெற்றிருப்பது ஒரு தனிச் சிறப்பாகும், அந்தச் சிறப்பு மற்றெந்தச் சிறப்பினுள்ளும் அடங்காத ஒரு சிறந்த சிறப்புமாகும்.


ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.

(642)

விளக்கம்:

மேன்மையும் கெடுதியும் பேச்சினாலேயே வருவதனால் சொல்லிலே சோர்வு உண்டாகதபடி எப்போதும் ஒருவன் தன்னைக் காத்துப் பேணி வருதல் வேண்டும்.


கேட்டார்ப் பிணிக்கும் தகைவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.

(643)

விளக்கம்:

கேட்பவர் உள்ளத்தைப் பிணிக்கும் தன்மை உயைவாயும், பகைவரும் கேட்பதற்கு விருப்பப்படும் வகையிலும் சொல்லப்படுவதே சிறந்த சொல்வன்மை ஆகும்.


திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கும் இல்.

(644)

விளக்கம்:

கேட்பவரது மனப்பான்மையை அறிந்தே எந்தச் சொல்லையும் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்வதை விட மேலான அறமும் பொருளும் யாதும் இல்லை.


சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

(645)

விளக்கம்:

தாம் சொல்ல நினைத்த சொல்லை வெல்லக் கூடிய மற்றொரு சொல் இல்லை என்பதை நன்றாக அறிந்த பின்பே, அந்தச் சொல்லை யாவரும் சொல்ல் வேண்டும்.


வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றோர் கோள்.

(646)

விளக்கம்:

தாம் சொல்லும்போது பிறர் விரும்புமாறு சொல்லிப் பிறர் சொல்லும்போது அதன் பயனை அறிந்து ஏற்றுக் கொள்ளுதலே, மேன்மையில் குற்றமற்றவரது கொள்கை.


சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

(647)

விளக்கம்:

சொல்வன்மை உடையவன், சொற்சோர்வு இல்லாதவன், சபைக்கு அஞ்சாதவன், ஆகிய ஒருவனைப் பேச்சில் வெல்லுவது என்பது எவருக்குமே அருமையாகும்.


விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

(648)

விளக்கம்:

கருத்தை நிரல்படக் கோத்து, இனிய முறையில் சொல்வதற்கு வல்லவர்களைப் பெற்றால், இவ்வுலகம் அவர்கள் ஏவியதைக் கேட்டு, விரைந்து தொழில் செய்யும்.


பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.

(649)

விளக்கம்:

குறைவில்லாத சில சொற்களாலே தம் கருத்தை விளக்கிச் சொல்வதற்கு அறியாதவர்களே, பல சொற்களைச் சொல்வதற்கு, எப்போதும் விரும்புவார்கள்.


இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.

(650)

விளக்கம்:

தாம் கற்றவைகளைப் பிறரும் அறியும்படியாக விளக்கிச் சொல்லத் தெரியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தும் மனம் வீசாத மலரைப் போன்றவர்கள் ஆவர்.

அதிகாரங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X