For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

73. அவை அஞ்சாமை

By Staff
Google Oneindia Tamil News

வகையறிந்து வல்லமை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.

(721)

விளக்கம்:

சொற்களின் தொகை பற்றி அறிந்த தூய அறிவாளர்கள், அவையின் தன்மையை அறிந்து, வலியவர் அவையிலே வாய் சோர்ந்து எதனையும் பேசமாட்டார்கள்.


கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.

(722)

விளக்கம்:

கற்றவர்களுள் கற்றவர்கள் எனப் புகழப்படுகின்றவர்கள், கற்றவர் அவையின் முன், தாம் கற்றதை அவர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு எடுத்துச் சொல்லக் கூடியவர்களே ஆவர்.


பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.

(723)

விளக்கம்:

போர்களத்தின் நடுவே அஞ்சாமல் சென்று சாவையும் ஏற்பவர்கள் பலர்; ஆனால் , கற்றோர் அவையிலே சென்று பேசக்கூடிய அஞ்சாமை உடையவர்கள் மிகமிகச்சிலரே.


கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.

(724)

விளக்கம்:

தாம் கற்றவைகளைக் கற்றோர்கள் மனங்கொள்ளும் படியாகச் சொல்லி, தம்மிலும் மிகுதியாக கற்றவர்களிடம், தாமும் எஞ்சிய மிகுதியை கேட்டுக் கொள்ளல் வேண்டும்.


ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு.

(725)

விளக்கம்:

அவையினருக்கு அஞ்சாமல், அங்கே எழும் கேள்விகளுக்கு விடை சொல்லும் பொருட்டு, அதற்கு வேண்டிய நூல்களைப் பொருள்நயம் அறிந்து கற்றுக் கொள்ளல் வேண்டும்.


வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

(726)

விளக்கம்:

அஞ்சாமை இல்லாதவர்க்கு அவர் ஏந்தியுள்ள வாளினால் என்ன பயன்? நுட்பமான அறிவுடையவர் அவையிலே பேச அஞ்சுபவர்க்கு அவர் நூலறிவாலும் பயன் இல்லை.


பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.

(727)

விளக்கம்:

பகைவர் நடுவிலே புகுந்த, பேடியின் கையிலே உள்ள கூர்மையான வாள் பயன்படாததைப் போல, அவையிலே பேசுவதற்கு அஞ்சுகிறவன் நூலறிவும் பயன்படாது.


பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.

(728)

விளக்கம்:

நல்லவர்கள் அவையிலே, அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி நல்ல பொருள் பற்றிப் பேசத் தெரியாதவர்கள் பலவகையான நூல்களைக் கற்றவரானாலும் பயன் இல்லாதவரே.


கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லார் அவையஞ்சு வார்.

(729)

விளக்கம்:

தாம் பல நூல்களைக் கற்று அறிந்திருந்தாலும், நல்லறிவு உடையவர்கள் அவையிலே பேச அஞ்சுபவர்கள் கல்லாதவரினும் கடைப்பட்டவர்கள் ஆவர்.


உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.

(730)

விளக்கம்:

அவைக்கு அச்சமடைந்து, தாம் கற்றவற்றை அவையினர் ஏற்கும் வண்ணம் சொல்ல முடியாதவர்கள், அறிவுள்ளவரே ஆயினும், அறிவற்றவர்களுக்கே சமமானவர்கள்.

அதிகாரங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X