ஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2022: திருமண யோகம், குழந்தை பாக்கியம் யாருக்கு கிடைக்கும்
2022 புத்தாண்டு பிறக்கப்போகிறது. இந்த புத்தாண்டில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: நோய் தொற்று பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகாலமாக எத்தனையோ பேருக்கு திருமணம் நடைபெறுவதில் தடை ஏற்பட்டது. சிலரோ குழந்தை பிறப்பைக் கூட தள்ளி போட்டிருப்பார்கள். இதுதான் வாழ்க்கை என்றாகி விட்டது. கொரோனா உடன் பலரும் வாழ பழகிவிட்டனர். 2022 புத்தாண்டு பிறக்கப் போகிறது. நோய்களும் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கிறது. இந்த பெருந்தொற்று காலத்திலும் எந்த ராசிக்காரர்களுக்கு தடைகளைத் தாண்டி திருமணம் நடைபெறும், குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
காசு பணம் கைநிறைய சம்பாதித்தாலும் திருமண வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும் என்று பலரும் நினைப்பார்கள். சிலருடைய வாழ்க்கை போர்க்களமாக இருக்கும். இந்த ஆண்டு அமைதியும் சந்தோஷமும் ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
பிள்ளைகளால் நிம்மதியிழந்து தவிர்ப்பவர்களுக்கும், புத்திரபாக்கியத்திற்காக எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு குருவின் ஆசியால் இந்த 2022ஆம் ஆண்டு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே. உங்களின் பொருளாதார நிலைமை இந்த சிறப்பாக இருக்கும். கூடவே சுப விரைய செலவுகளும் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும் நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். காதல் திருமணம் கை கூடி வரும். கணவன் மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். குழந்தைக்காக எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். குரு பகவான் சஞ்சாரம் பார்வையால் இல் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும் ஆண்டாக அமைந்துள்ளது. குருபகவானை வழிபட தடைகள் நீங்கி திருமணம் கை கூடி வரும்.
ரிஷபம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, புத்தாண்டு உங்களுக்கு சாதகமான ஆண்டாக அமைந்துள்ளது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். எலியும் பூனையுமாக சண்டை போட்டுக்கொண்டிருந்தவர்கள் இந்த ஆண்டு காதலாகி கசிந்து உருகி நேசிப்பார்கள். திடீர் திருமண யோகம் கை கூடி வரும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கை கூடி வரும். ராசிநான் சுக்கிரனின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக உள்ளது இதனால் நேசத்திற்கு உரிய ஆண்டாக 2022ஆம் ஆண்டு அமைந்துள்ளது.
மிதுனம்
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, உங்களுக்கு 2022ஆம் ஆண்டு கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் திருமண யோகம் கை கூடி வரும். திருமணமான தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் கை கூடி வரும். அஷ்டமத்து சனியால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கும். தடைகளைத் தாண்டி முன்னேற்றம் கிடைக்கும். புதிய காதல் மணியடிக்கும் கடந்த காலங்களில் அதிகம் துன்பங்களை மட்டுமே சந்தித்த உங்களுக்கு இனி இன்பங்களை ருசிக்கப் போகிறீர்கள். ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் வரலாம் கவனம் தேவை.
கடகம்
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, வலிகள் நிறைந்த ஆண்டை எளிதாக கடந்து விட்டீர்கள். உங்கள் ராசிக்கு இந்த ஆண்டு நிறைய அதிர்ஷ்டங்களைத் தரப்போகிறது. குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடிகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவி இடையேயான சண்டைகள் முடிவுக்கு வரும். சுப காரியங்கள் நடைபெறுவதில் தடைகள் ஏற்பட்டாலும் உறவினர்கள் உதவியால் தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். தத்து புத்திர யோகமும் கை கூடி வரும்.
சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே,உங்கள் ராசிக்கு இந்த புத்தாண்டு அதிசயங்களை தரப்போகிறது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பொருளாதார வளமும் அபரிமிதமாக இருக்கும். குருவின் பார்வையால் குடும்ப உறவுகள் குதூகலத்தை தரும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை கூடும். நெருக்கடிகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். திருமண பாக்கியம் கை கூடி வரும். பிள்ளைச்செல்வத்திற்காக தவம் இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் வரம் கிடைக்கும். குருவின் பார்வை குழந்தை பாக்கியம் கிடைக்கச் செய்யும். உணவு விசயத்தில் கவனம் தேவை.
கன்னி
புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, இந்த ஆண்டு நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்திகள் தேடி வரும். மன மகிழ்ச்சியும் நிம்மதியும் தேடி வரும். நோய்களால் துன்பப்பட்ட உங்களுக்கு இனி ஆரோக்கியம் நன்றாக இருக்கும். திறமைகளை வளர்த்துக்கொள்வீர்கள். நிதிச்சிக்கல்கள் நீங்கும் கடன் பிரச்சினை விலகும். மன அழுத்தம் முடிவுக்கு வரும். பிள்ளைகளால் ஏற்பட்டிருந்த சங்கடங்கள் முடிவுக்கு வரும். காதல் கை கூடும். புதுமணத்தம்பதியரின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும் விதமாக புத்தாண்டில் பிள்ளைச் செல்வத்தை வரவேற்க தயாராகுங்கள். அதே நேரத்தில் அவசர முடிவுகளை எடுத்து ஆபத்தில் மாட்டிக்கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகளில் நிதானம் தேவை.