ஆனி மாத பூஜை..சபரிமலை கோயில் நடை திறப்பு.. 19ஆம் தேதிவரை பக்தர்கள் தரிசிக்க அனுமதி
சபரிமலை ஐயப்பன் கோவில் ஆனி மாத பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பத்தனம் திட்டா: கேரளாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆனி மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. கோவில் நடை ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூன் 19 ஆம் தேதி வரை திறக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் ஒரு மண்டலம் விரதமிருந்து இருமுடிக்கட்டி பெருவழி, சிறுவழி ஆகிய பாதைகள் வழியே சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். பிற கோயில்கள் போல சபரிமலை ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது.

ஒவ்வொரு தமிழ் மாதம் தொடங்கிய நாள் முதல் 5 நாட்கள் வரை சபரிமலை ஐயப்பன் கோவில் மாதாந்திர பூஜைக்காக திறக்கப்படுவது வழக்கம். அதன்படி வைகாசி கடைசி நாளான இன்று நடை திறக்கப்பட்டு ஆனி மாத பூஜை நடத்தப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தகவல் தெரிவித்திருந்தது.
கேரளாவிலுள்ள மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும் சபரிமலை. மஹிஷி என்ற பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என வழங்கப்படுகிறது.
மலைகளுக்கு இடையே சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு எல்லா மதத்தினரும் வரவேற்கப்படுகிறார்கள். இது ஆண்டு முழுவதும் திறந்திருப்பதில்லை. இந்த கோவில் மண்டல பூஜை, மகர விளக்கு, விஷூ மற்றும் மலையாள மாதத்தின் முதல் நாட்களில் மட்டும் திறந்திருக்கும்.
முன்பாக கடந்த ஜூன் 10 ஆம் தேதி பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு பூஜைகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அன்று இரவு 10.30 மணிக்கு மீண்டும் நடை அடைக்கப்பட்டது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று மாலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
இதன்பின் தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், வழக்கம்போல் இணையத்தள முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் உடனடி தரிசன முன்பதிவு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில் நடை ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூன் 19 ஆம் தேதி வரை திறக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோயிலுக்கு தரிசனம் செய்ய முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்கு முன் கோவிட் நெகடிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டியது கட்டாயம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications