செவ்வாய் தரும் தோஷங்களும் யோகங்களும் - எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்
ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் வலுவான நிலையில் இருந்தால் அது யோகத்தையும், தசா புத்தியில் நன்மையையும் தருகிறது. செவ்வாய் வலிமையானவராக இருந்தால் உடம்பில் வேகமான ரத்த ஓட்டம் இருக்கும் சுறுசுறுப்பானவராக இருப்பார். செவ்வாய் பலம
சென்னை: நவகிரகங்களில் செவ்வாய் கிரகம் பாவ கிரகமாக இருந்தாலும் சுப கிரகங்களின் பார்வை சேர்க்கை இருந்தால் அது நன்மையே செய்யும். செவ்வாய் தோஷம் பலரது வாழ்க்கையில் திருமணம் நடைபெறுவதில் தடையை ஏற்படுத்துகிறது. ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் வலுவான நிலையில் இருந்தால் அது யோகத்தையும், தசா புத்தியில் நன்மையையும் தருகிறது. செவ்வாய் வலிமையானவராக இருந்தால் உடம்பில் வேகமான ரத்த ஓட்டம் இருக்கும் சுறுசுறுப்பானவராக இருப்பார். செவ்வாய் பலம் குன்றியிருந்தால் நோய்கள் தாக்கும் விபத்துக்கள் ஏற்படும்.
ஜாதகத்தில் சந்திரனும் செவ்வாயும் இணைவது சந்திர மங்கள யோகம். சந்திரன் வளர்பிறை சந்திரனோடு சேர்ந்து இருந்தால் செவ்வாய் தசை சந்தோசமாக போகும். செவ்வாய் பூமி காரகன். வீடு நிலம் வாங்கலாம். வீடு நிலம் கட்டிடம் கட்டலாம். வருமானம் லாபத்தை தரும்.
ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்து செவ்வாய் திசை ஒருவருக்கு நடந்தால் தைரியம் அதிகரிக்கும். சகோதரரால் நன்மைகள் நடக்கும். செவ்வாய் ரத்தத்திற்கு காரகம். சுபத்துவம் பெற்ற செவ்வாய் மருத்தவம், பொறியியல் படிக்க செவ்வாய் உதவி செய்வார். சீருடை அணியும் அதிகாரம் மிக்க பதவியை தருவார். ஐபிஎஸ், ஐஎப்எஸ் பணியை தருவார். செவ்வாய் வலிமை குன்றியிருந்தால் சாதாரண போலீஸ் வேலை செய்வார்.
ஆண் தன்மையுள்ள கிரகமான செவ்வாய், கடகம், சிம்மம், தனுசு, மீனம் லக்னங்களில் பிறந்தவர்களுக்கு நன்மையை மட்டுமே செய்வார். நட்பு கிரகங்கள் நன்மை மட்டுமே செய்யும். செவ்வாய் இவர்களுக்கு நண்பர். தன்னுடைய திசையில் நன்மை செய்வார். மேஷம், விருச்சிகம் லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் கோபப்படுத்துவார். தனக்கு தானே எதிரியாகிறார்.
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு விருச்சிகம் எட்டாமிடம். விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு மேஷ லக்னம் ஆறாவது இடம் கடன் நோய் உள்ள இடம் எனவேதான் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏழு ஆண்டுகளில் சாதக பாதகங்களைத் தருவார் செவ்வாய் பகவான்.
ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் நீசம் பெற்றிருந்தாலோ, பாவ கிரகங்களின் சேர்க்கை பெற்றாலோ, பாவிகளின் பார்வையால் பலம் குன்றியிருந்தால் நோய்கள் தாக்கும். ஒரு வீட்டில் அடிக்கடி தீ விபத்து ஏற்படும், ஒருவருக்கு வெட்டுக்காயம் அடிக்கடி வரும். இதற்குக் காரணம் செவ்வாய் பலம் குன்றி இருப்பதுதான். மின்சாதனங்கள் அடிக்கடி பழுதாகும்.
தலைமுறை தலைமுறையாக ரத்தத்தில் உண்டாகும் நோய்கள்,ரத்தசோகை, ரத்த புற்றுநோய், கல்லீரல் மூலம் உண்டாகும் நோய், உடல் உணர்வற்று போவது, அதிக உஷ்ணத்தால் உடலில் கொப்பளம் ஏற்படுவது மண்ணீரல் பாதிப்பு, ஆயுதங்களால் உடல் சிதைவு ஏற்படுவது, கெட்டுப்போன உணவால் ஏற்படும் நோய்கள், மருந்துப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு, தவறான சிகிச்சையால் மரணிப்பது போன்ற நோய்களுக்கும் செவ்வாயே காரணகர்த்தாவாக திகழ்கிறார்.
பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் நீச்ச ராசியான கடகத்தில் நின்று இருந்தால், பல நோய்களுக்கு ஜாதகரே மூலக்காரணமாக இருப்பார். செவ்வாய் தனது பகை கிரகங்களான புதன், ராகுவோடு இணைந்து இருந்தால் புற்று நோய்கள் ஏற்படும். நரம்பு பிரச்சினைகள் வரும். இவர்களது சகோதரர்களுடன் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும்.
செவ்வாய் பகை ராசியான மிதுனம், கன்னி ஆகிய ராசிகளில் நின்றிருந்தால், ரத்த சோகை, உடலில் போதுமான ரத்தம் இல்லாமல் இருப்பது, உடல் சோர்வு போன்ற நோய்கள் உண்டாகும். தோல் அரிப்புகள் இருக்கும். புதன் தோல் நோய்களுக்கு காரணகர்த்தா. புதன் அதிபதியாக மிதுனம், கன்னி ராசிகளில் செவ்வாய் இருந்தால் தோல் நோய்கள் வரும். செவ்வாய் பகைக் கிரகமான புதன், ராகு ஆகிய கிரங்களின் நட்சத்திர பாதத்தில் நின்றிருந்தால், தோல் நோய்கள் வரலாம். ரத்தம் ஓட்டம் சீராக இல்லாமல் கை, கால் பிடிப்பு தலைவலி வரக் கூடும்.
பிறந்த ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடத்தில் செவ்வாய் இருந்தால், அந்த ஜாதகர் செய்யும் கெட்ட பழக்க வழக்கத்தால் நோய்கள் வரக்கூடும். தொற்று நோய் தாக்கக்கூடும். செவ்வாய் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களுக்கான அதிபதியுடன் இணைந்து இருந்தாலோ அல்லது இதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ அந்த ஜாதகருக்கு நரம்பு தளர்வு, ரத்தக் குழாய் வெடிப்புகள், இனம் கண்டுபிடிக்க முடியாத நோய்கள் வரக்கூடும். ஜாதகரின் சகோதரர்கள் நம்பிக்கை துரோகம் செய்வார்கள்.
பொதுவாக செவ்வாய் வலுப்பெற்று லக்கினத்தோடு சம்பந்தப்படும் நிலையில் ஜாதகர் மிகவும் கோபக்காரராக இருப்பார். லக்கினத்தில் வேறு பாபக் கிரகங்களும் சேர்ந்தால் மிகவும் கடுமையான வார்த்தைகளைப் பேசுவார். பலம் பெற்ற செவ்வாய் கோபப்படுத்துவார். வலுப் பெற்ற செவ்வாய், ஒருவரை அறுவைச் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற வைப்பார். இதே செவ்வாய் பகை, நீசம் பெற்றிருந்தால் அடிதடி செய்யும் ரவுடி தொழில் செய்ய வைப்பார்.
மேஷ லக்கினத்தில் ஆட்சி பெறும்போது நான்கு, ஏழு, மற்றும் எட்டாமிடங்களைத் தன் சிறப்புப் பார்வைகளால் பார்வையிட்டு நல்ல பலன்களைத் தருவார். லக்கினத்தில் சுப வலுவுடன் இருக்கும் செவ்வாய், ஜாதகருக்கு நல்ல ஆரோக்கியம், உடற்பயிற்சி செய்யும் ஆர்வம், உடலை நல்லமுறையில் பராமரித்தல் ஆகியவற்றை ஜாதகருக்குத் தருவார். மேஷத்துக்கு செவ்வாய் பத்தாமிடத்தில் உச்சம் பெறுகிறார். விருச்சிக லக்கினத்துக்கு ருசக யோகம் அமைந்தால் ஜாதகர் முன்கோபக்காரராகவும், நேர்மையானவராகவும் இருப்பார். செவ்வாய் தசையில் பூமி லாபம், மருத்துவம், விளையாட்டு, ராணுவம் போன்றவற்றில் பணிபுரிந்து பெயரும் புகழும் பெறுவார்.
ரிஷப லக்கினத்துக்கு செவ்வாய் ஏழாமிடத்துக்கு அதிபதியாகி விருச்சிகத்தில் ஆட்சி பெற்று செவ்வாய் தோஷம் ஏற்படும். இங்கு ஆட்சி பெறும் செவ்வாய், ஜீவன ஸ்தானமான பத்தாமிடம், லக்கினம், மற்றும் குடும்பஸ்தானமான இரண்டாமிடத்தை பார்வையிடுகிறார்.
கடக ராசியின் பூரண ராஜ யோகாதிபதியான செவ்வாய், இந்த லக்கினத்துக்கு பத்தாமிடமான மேஷத்தில் திக்பலம் பெற்றும், ஏழாமிடத்தில் உச்சம் பெற்றும் இரண்டு இடங்களில் வலுப்பெற்று ருச்சிக யோகம் அளிப்பார். தன் வீட்டில் ஆட்சி பெற்ற நிலையில், தனது இன்னொரு வீட்டையும் பார்க்கும் ஒரே கிரகம் செவ்வாய் மட்டுமே. மேலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது வீட்டைப் பார்க்கும் கிரகம் அந்த பாவத்தை வலுப்படுத்தும் என்பதால், செவ்வாயின் இரண்டு வீடுகளும் இதனால் பலம் பெறும்.
சிம்ம லக்னகாரர்களுக்கு செவ்வாய் ஏழாம் பாவத்தை பார்த்தாலும் கெடுதல் செய்யமாட்டார். காரணம் செவ்வாய் இந்த லக்கினத்துக்கு சுபர் என்பதால் இந்த லக்னத்தில் இருந்து ஏழாம் பாவத்தைப் பார்த்தாலும் திருமண வாழ்வைக் கெடுக்கமாட்டார். நன்மைகளையும் லாபத்தையும் தருவார்.
துலாம் லக்கினத்துக்கு, அதன் லக்கினாதிபதி சுக்கிரனுக்கு செவ்வாய் எதிரி. நான்கில் உச்சம் பெற்றும், ஏழாமிடத்தில் ஆட்சி பெற்றும் ருச்சக யோகத்தைத் தருவார். ஏழாமிடத்தில் ஆட்சி பெறும் நிலையில், அவர் பத்தாமிடத்தையும், லக்கினத்தையும், அவரது வீடான இரண்டாமிடத்தையும் பார்ப்பார். தனது காரகத்துவங்களில் தொழில் அமைத்துத் தருவார். பெரும்பாலும் சீருடை அணியும் துறைகளில் ஜாதகரை பணிபுரிய வைப்பார். இந்த அமைப்பால் ஜாதகருக்கு நிலையான பொருளாதார வசதி, வருமான வாய்ப்பு கிடைக்கும்.
மகர லக்கினத்தில் உச்சம் பெறும் செவ்வாய் ருச்சிக யோகம் அமையப்பெற்றால் ஜாதகர் அவசர புத்திக்காரராக இருப்பார். பொறுமை என்பதே இருக்காது. கடுமையான போக்குடைய அதிகாரியாகத் திகழ்வார். உச்சம் பெற்ற செவ்வாய் சுபர் பார்வை பெறுவது நல்லது. இல்லாவிட்டால், ரொம்ப கடுமையாக சிடுசிடுப்பாக நடந்து கொள்வார். சுபர் பார்வை பெற்றிருந்தால் ஜாதகர் தானிருக்கும் இடத்தில் மற்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்வார்.
கும்ப லக்னத்திற்கு பத்தாமிடமான விருச்சிகத்தில் செவ்வாய் ஆட்சி பலம் பெற்றிருந்தால் இந்த ருசக யோகம சிறப்பானதாக அமைந்திருக்கும். ஜாதகர் ஆளுமைத்திறமை கொண்டவராக புகழ் பெறுவார். காவல்துறை,ராணுவம், மருத்துவதுறையில் சாதனை படைத்தவர்கள் இந்த யோகம் பெற்றவர்கள்தான். பொதுவாக ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் பாதகமான நிலையில் இருப்பவர்கள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தோஷங்கள் நீங்கி பாதிப்புகள் குறைய முருகப்பெருமானை வணங்கலாம்.