மார்கழி அமாவாசை மூல நட்சத்திரத்தில் அவதரித்த அனுமன் - விரதமிருந்து வணங்கினால் கஷ்டங்கள் நீங்கும்
மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர். இந்த ஆண்டு நாளை மறுதினம் ஜனவரி 2ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
மதுரை: மார்கழி மாதம் அமாவாசையில் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர். தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஆலயங்களில் ஜனவரி 2ஆம் தேதி ஞாயிறுக்கிழமை ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
ராமாயண காவியத்தில் ஈடு இணையற்ற இடத்தைப் பிடித்தவர் அனுமன். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர் ராமபிரானின் சேவகன் அனுமனை அவதரித்த நாளில் வணங்கினால் தொல்லைகள் தீரும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
அஞ்சனை மைந்தன், வாயுபுத்திரன் அனுமன் சிரஞ்சீவியாக இந்த மண்ணில் இருக்கிறார். ராம நாமம் கேட்கும் இடங்களில் அஞ்சநேயர் அமர்ந்திருப்பார் என்று நம்பப்படுகிறது.
Exclusive: நேற்று பெய்தது போலவே இன்றும் சென்னையில் பேய்மழை பெய்யுமா? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன பதில்
மூல நட்சத்திரம்
திதிகளில் புண்ணியமான திதி அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூலநட்சத்திரம். சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன். அந்த தினம் அனுமன் ஜெயந்தியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
மார்கழி மாதத்தில் அனுமன் அவதாரம்
தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மட்டும் ஹனுமான் ஜெயந்தி மார்கழி மாதம், அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று அனைத்து அனுமான் கோயில்களிலும் வைணவக் கோயில்களிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பிற மாநிலங்களில் வைகாசி மாதம் வளர்பிறை தசமி திதியன்று அனுமன் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா ஜனவரி 2ஆம் தேதி ஞாயிறுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
சிவன் விஷ்ணு ஆசி கிடைக்கும்
அனுமன் சிவனின் அம்சம், ராமரின் சிஷ்யர். எனவேதான் அனுமன் ஜெயந்தி நாளில் ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். அனுமன் சர்வ தேவதா சக்திகளின் அம்சம். புத்தி, பலம், கீர்த்தி, தைரியம், மனோபலம் போன்றவற்றை அருளுபவர்.
ராம நாமத்திற்கு கட்டுப்படும் அனுமன்
பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர் எங்கும், எதிலும் அடங்குவதில்லை. ராமா என்ற இரண்டு எழுத்தில் மட்டும் கட்டுண்டு கிடக்கிறார். அவர் அவதரித்த நாளில் ராம நாமம் ஜெபிக்கலாம். அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க வேண்டும். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே பருகி விரதம் இருக்க வேண்டும். அன்று நாள் முழுவதும் ஸ்ரீராமஜெயம் எழுதுவது நல்ல பலன்களை அளிக்கும்.
சங்கடங்கள் நீங்கும்
அனுமன் ஜெயந்தி நாளில் ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயுபுத்ராய தீமஹி, தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்' என்ற அனுமன் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து சகல பாவங்களில் இருந்தும் கஷ்டங்களில் இருந்தும் நிவர்த்தி பெறலாம்.