மரண யோகத்தை மாற்றும் அமிர்த பௌர்ணமி... களத்திர தோஷம், மாங்கல்ய தோஷத்தில் இருந்து தப்பிப்பது எப்படி
சித்ரா பௌர்ணமியன்று சித்ரகுப்தனை வழிபடுவதன் மூலம் நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவத்தில் இருந்து விடுபடலாம்.
காரைக்குடி: ஒருவரது ஜாதகத்தில் இருக்கும் மரணயோகம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திரதோஷம், கால சர்ப்ப தோஷம் போன்றவற்றில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்று ஜோதிட சூட்சுமத்தை கூறியுள்ளார் ஜோதிடர் பெர்னாட்ஷா.
இளம் வயதில் நடக்கும் மரணங்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. கோர விபத்துக்களால் பறிபோகும் உயிர்கள் ஆயிரக்கணக்கானவை. இறுதி நாட்கள் வரை இணைந்து வாழவேண்டிய தம்பதிகள் இடையிலேயே அறுத்துக் கொண்டு செல்கிறார்கள்.
திருமணமாகி பல ஆண்டுகள் கடந்தும் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இதயம் கருகிப்போன இளம் தம்பதிகள் ஏராளம். சித்திரை மாத பௌர்ணமி அன்று இரவு அம்பாளை மனமுருகி வேண்டினால் இப்படிப்பட்ட இன்னல்களில் இருந்து தப்பிக்கலாம் என்று "ஜோதிடமும் சித்தர்களும்" என்ற தலைப்பில் சிங்கம் புணரி வாத்தியார் ஐயா கோவிலில் ஆன்மீக உரையாற்றிய ஜோதிடரும் கவிஞருமான பெர்னாட்ஷா குறிப்பிட்டார்.
மண வாழ்க்கையில் மகிழ்ச்சியற்ற நிலை... விவாகரத்துக்கு ஜோதிட ரீதியான காரணங்கள்
சித்தர் ஐயா அபிஷேகம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரியில் ஜீவசமாதி அடைந்து அருள் பாலித்துக் கொண்டிருப்பவர் சித்தர் முத்துவடுகேசனார். பரந்து விரிந்த இடத்தில் ஆலயம் எழுப்பி ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்றும் சித்தர் ஐயாவுக்கு அபிஷேகம் நடத்துகிறார்கள்.
சித்ரா பவுர்ணமி
சுற்றுவட்டார மக்கள் மட்டுமல்லாமல் பல மாவட்டங்களிலும் இருந்து பௌர்ணமியன்று இந்த ஆலயத்திற்கு வந்து தங்கி நள்ளிரவில் நடக்கும் அபிஷேகத்தை கண்டுகளித்து செல்கிறார்கள் பெருவாரியான பக்தர்கள்.
அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், நீதியரசர்கள், வழக்கறிஞர்கள், தொழில் அதிபர்கள் போன்ற பிரபலமானவர்கள் இந்த ஆலயத்திற்கு வருவது சிறப்பு.
சித்திர குப்தன்
இந்த ஆலயத்தின் பொறுப்பாளர் திருமாறன் வேண்டுகோளுக்கிணங்க பௌர்ணமிக்கு முதல் நாள் நடந்த அபிஷேக விழாவில் ஜோதிடர் பெர்னாட்ஷா சுமார் ஒன்றரை மணி நேரம் ஆன்மீக உரை நிகழ்த்தினார்.
பார்வதி தேவியார் வரைந்த சித்திரத்தில் இருந்து உயிர் பெற்றவர்தான் சித்திரகுப்தன். இவர்தான் எமதர்மராஜாவின் பிரதிநிதியாக இருந்து நம்முடைய பாவ புண்ணிய கணக்குகளை எழுதுகிறார்.
சித்ரா பவுர்ணமி வழிபாடு
சித்ரா பௌர்ணமியன்று சித்ரகுப்தனை வழிபடுவதன் மூலம் நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவத்தில் இருந்து விடுபடலாம். கடந்த பிறவியில் செய்த கர்மாவின் பாதிப்புகளையும் கடக்கலாம் என்று குறிப்பிட்டார். மேலும், சித்ரா பௌர்ணமி அன்று காலையில் ஒரு தர்ப்பைப் புல்லையும் சித்தரத்தையையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை இரண்டும் பூஜை சாமான்கள் விற்கும் கடையில் கிடைக்கும்.
பரிகாரம்
தர்ப்பைப் புல்லை ஒரு தாயத்து அளவிற்கு மடித்து அதோடு சித்தரத்தையையும் சேர்த்து ஒரு மஞ்சள் நூலால் கட்ட வேண்டும். பூஜையறையில் விளக்கேற்றி தூப தீபங்கள் காட்டி இஷ்டதெய்வத்தை வழிபாடு செய்த பின்னர் இந்த காப்பை கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் இதை அணிந்து கொள்ளலாம். பௌர்ணமி திதி முடிந்தபின்னர் இதை கழட்டி பூஜை அறையில் வைத்து விட வேண்டும். சில நாட்கள் கடந்த பின்னர் அது காய்ந்து போகும். பிறகு அதை எடுத்து ஒரு மிக்ஸியில் அல்லது அம்மியில் அல்லது இடிகல்லில் வைத்து நுணுக்க வேண்டும்.
சனிக்கிழமை ராகு காலத்தில் பூஜை
ஒரு சனிக்கிழமை காலையில் 9 முதல் 10.30 மணிக்குள் ராகுகால நேரத்தில் இந்தப் பொடியை தண்ணீரில் கலக்கி தலை முதல் கால்வரை ஊற்றி நன்றாக நீராட வேண்டும். அதன் பின்னர் அவரவர் குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வங்களையும் வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டின் மூலமாக ஒருவரது ஜாதகத்தில் இருக்கும் மரணயோகம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திரதோஷம், கால சர்ப்ப தோஷம் போன்றவற்றில் இருந்து தப்பிக்கலாம் என கவிஞர் பெர்னாட்ஷா கூறினார்.
சித்தர்கள் யார்
நீர் மேல் நடக்கலாம், நெருப்பையும் திண்ணலாம்,
நெடியபெரு வேங்கையை கட்டியே தழுவலாம்,
பார்மீது மணலை சமைத்து பட்சமென உண்ணலாம்.
என்று உலகுக்கு உணர்த்திய சித்தர்கள் பஞ்சபூதங்களை வென்றவர்கள்.
நமது மரபணுக்களின் மறு பிம்பமாக இருக்கின்ற ராகு கேது போன்ற பாம்புகளை மாலையாக போட்டு விளையாடக் கூடியவர்கள்.
அப்படிப்பட்ட சித்தர்களின் கருணைப் பார்வை நம் மீது விழுந்தால் பட்டமரம் துளிர்க்கும். காய்ந்த மரம் காய் காய்க்கும். மலட்டு தம்பதிகளுக்கு கூட மழலைப் பாக்கியம் உண்டாகி வம்சம் விருத்தி அடையும் என்று அவர் விளக்கினார்.சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சித்தரின் பெருமைகளை கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.
பௌர்ணமியில் பூஜை
கோயில் நிர்வாகி திருமாறன் அவர்கள் இறுதியாக நன்றி கூறினார். கோயில் அறங்காவலர் திரு. ரமேஷ், ஆன்மீகச் செம்மல் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர். ஆலய சன்னதியில் கவிஞருக்கு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கி மரியாதை செய்தார்கள். மேலும் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று வருகை தந்து சித்தரின் பெருமைகளையும் ஜோதிட சூட்சமங்களையும் பக்தர்களுக்கு விளக்கிக் கூறவேண்டும் என்று அன்போடு வேண்டிக் கொண்டார்கள்.
பக்தர்கள் வழிபாடு
சித்தரை தரிசிக்க வருகின்ற பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தினர் அன்னதானம் அளிக்கிறார்கள். பெருவாரியான பக்தர்கள் பௌர்ணமி திதி முழுவதையும் சித்தர் ஆலயத்திலேயே கழிக்கிறார்கள். நள்ளிரவு 12 மணியளவில் சித்தருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஆலயத்தில் அமர்ந்து ஆண்களும் பெண்களும் சித்தர் பாடல்களை பாராயணம் செய்தனர். இரவு ஒரு மணி அளவில் சித்தரின் அபிஷேக விழா பக்தர்களின் பரவச பாடல் ஒலிகளோடு நிறைவுபெற்றது.