குலசை தசரா விழா: முத்தாரம்மனை தரிசிப்போம்... நம்பிக்கையுடன் மாலை போடும் பக்தர்கள்
லசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்காக ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி, முத்தாரம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தவண்ணம் உள்ளனர்.
தூத்துக்குடி: குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்காக ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி, முத்தாரம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர். கொரோனா நோய் தொற்று பயம் காரணமாக, கோவில் அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு மாலை அணிவிக்கவில்லை. பக்தர்கள் தாங்களே துளசி மாலையை அணிந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து விரதத்தை தொடங்கினர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினத்தில் உள்ளது புகழ்பெற்ற ஞானமூர்த்திசுவரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவில். ஆண்டு தோறும் இங்கு நடைபெறும் தசரா திருவிழா உலகப் புகழ்பெற்றதாகும். பக்தர்கள் இத்திருவிழாவிற்காக சுமார் ஒரு மண்டல காலம் விரதம் இருந்து தசரா திருவிழாவின் போது பல்வேறு வேடங்களை அணிந்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம்.

குலசை தசரா திருவிழாவை காண்பதற்காகவே, தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் இருந்தும் பார்வையாளர்களும், பக்தர்களும் வருவது வழக்கம். இந்த ஆண்டு தசரா திருவிழா வரும் அக்டோபர் 26ஆம் தேதி நடைபெறுகிறது.
கடந்த மார்ச் மாத இறுதியில், கொரோனா நோய் தொற்று நாடு முழுவதும் பரவியதை அடுத்து, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் மூட மத்திய அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து, அனைத்து மதவழிபாட்டு தலங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டு, தினசரி நடைபெறும் பூஜைகள் மட்டுமே தடங்கலின்றி நடைபெற்று வந்தன.
மதுரையில் கடந்த மே மாதத்தில் நடைபெற்ற சித்திரை திருவிழா கூட பக்தர்கள் அனுமதியின்றியே நடைபெற்றது. இதை பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே தரிசித்தனர். தற்போது கொரோனா நோய் தொற்று படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டு வருவதாலும், வரும் மாதங்களில் தொடர்ச்சியாக கோவில் திருவிழாக்கள் வருவதாலும், அனைத்து மதவழிபாட்டுத் தலங்களையும் திறப்பதற்கும், பக்தர்கள் சமூக இடைவெளியோடு சுவாமி தரிசனம் செய்யவும் அனுமதியளித்தது. ஆனாலும் சில கோவில்களில் ஆன்லைன் மூலமாக முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணி மூலத் திருவிழாவையும் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக முன் அனுமதி பெற்றே தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வழக்கம் போல் வரும் அக்டோபர் 26ஆம் தேதி நடைபெறுமா? அப்படியே நடைபெற்றாலும் பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதிக்கப்படுவார்களா? என்ற கேள்வி அனைத்து பக்தர்களின் மத்தியில் எழுந்துள்ளது.

தசரா திருவிழா நடைபெறும் என்ற நம்பிக்கையில், தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் பல்வேறு வேஷங்களை அணியும் பக்தர்கள் தற்போதே விரதம் இருக்கத் தொடங்கி விட்டனர். இதற்காகவே, ஏராளமான பக்தர்கள் குலசேகரபட்டினம் கடலில் புனித நீராடி, முத்தாரம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தவண்ணம் உள்ளனர்.
வழக்கமாக விரதம் இருக்கும் பக்தர்கள் மாலை அணிவது வழக்கம். ஆனால், கொரோனா நோய் தொற்று பயம் சாதாரணமாக, கோவில் அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு மாலை அணிவிக்கவில்லை. இதனால், பக்தர்கள் பெரும்பாலானோர் தாங்களே துளசி மாலையை அணிந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து விரதத்தை தொடங்கினர்.
விரதம் இருக்கும் பக்தர்கள், தங்களின் ஊர்களில் உள்ள கோவில்களின் அருகிலேயே அறை அமைத்து தங்கி உள்ளனர். விரத நாட்களில் நாள்தோறும் ஒரு வேளை மட்டுமே பச்சரிசி உணவு உண்டு குலசை முத்தாரம்மன் புகழ்பாடி வழிபட்டு வருகின்றனர்.

இதுபற்றி கருத்து கூறிய மாதவன்குறிச்சி ஈஸ்வரி தசரா குழு நிர்வாகி கருப்பசாமி, குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வழக்கமாக இந்த ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும் என்ற நம்பிக்கையோடு, எங்கள் ஊரில் பக்தர்கள் விரதம் இருந்து வருகிறோம்.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஒருவேளை தசரா திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் வர அனுமதி மறுக்கப்பட்டால், உள்ளூரிலேயே உள்ள கோவிலிலேயே காப்பு கட்டி, வேடம் அணிந்து எங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவோம். இருந்தாலும், தசரா திருவிழாவுக்கு முன்பே அம்மன் கொரோனா நோய் தொற்றை முற்றிலும் அழித்து, விழா சிறப்பாக நடைபெறும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications