குலசை தசரா திருவிழா..வீதி உலாவரும் முத்தாரம்மன்.. பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்
சென்னை:குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தினந்தோறும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உலா வரும் அம்மனை காண ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டுள்ளனர். தசரா விழாவை முன்னிட்டு காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். விழாவின் போது, ஊருக்கு உள்ளே, வெளியே எந்த ஒரு பகுதியிலும் ஆபாச நடனங்கள் ஆடுவதற்கும், ஆபாசப்பாடல்கள், சினிமா பாடல்கள் இசைப்பதற்கும், தகாத வார்த்தைகள் உபயோகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருகோவில்தசரா பெருந்திருவிழாவில் நேற்றைய தினம் பார்வதி கோலத்தில் அம்மன் அருள் பாலித்தார். 4ஆம் திருநாளான இன்று இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் மயில்வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்தில் பவனி வந்துபக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
தசரா குழுவினர் வந்து கடலில் புனித நீர் எடுத்து கோவில் வளாகத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்வதும் நடந்து கொண்டிருக்கிறது. விரதம் இருந்து வந்த பக்தர்கள் அதிகாலையில் கடலில் நீராடி, கோவிலுக்கு வந்து, மஞ்சல் கயிற்றினால் ஆனகாப்பு வாங்கி. வலது கையில் கட்டி விரதத்தை தொடர்ந்து வருகின்றனர்.
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கோலாகல கொடியேற்றம்..வேடம் அணிந்த பக்தர்கள்..அக்.5ல் சூரசம்ஹாரம்
காவல்துறை அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்ட மருத்துவத்துறை, போலீஸ் துறை, மின்சாரத்துறை போன்ற பல்வேறு அரசு துறை அதிகாரிகள் குலசேகரன்பட்டினம் நகரம் முழுவதும் வலம் வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 5ஆம் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.
ஆபாச நடனங்களுக்கு தடை
விழாவின் போது, ஊருக்கு உள்ளே, வெளியே எந்த ஒரு பகுதியிலும் ஆபாச நடனங்கள் ஆடுவதற்கும், ஆபாசப்பாடல்கள், சினிமா பாடல்கள் இசைப்பதற்கும், தகாத வார்த்தைகள் உபயோகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளை நடத்த உரிய அனுமதி பெற்று அதனை முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்.
சோதனை சாவடி
குலசேகரன்பட்டினம் மற்றும் உடன்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமிராக்களுடன் தற்காலிக போலீஸ் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு கண்காணித்தும், திறந்த வாகனங்களில் அசாதாரண சூழலில் பக்தர்களை ஏற்றி வந்தால் அந்த வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அச்சுறுத்தும் ஆயுதங்களுக்கு தடை
கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேல், சூலாயுதம், வாள் போன்று உலோகத்தாலான எந்தப் பொருட்களையும் கொண்டு வருவதோ, ஜாதி சின்னங்களுடன் கூடிய உடைகளோ, தொப்பி, கொடிகள், ரிப்பன்கள் ஆகியவை அணிந்துவரவோ, போலீஸ் துறையினர் போன்று சீருடை அணிந்து வேடமிட்டு வரவோ, அதிக சத்தத்துடன் டிரம் அடித்து ஒலி எழுப்பி சுற்றுச் சூழலுக்கு பங்கம் ஏற்படுத்த அனுமதி இல்லை.
பலத்த கண்காணிப்பு
கோவில் மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபடுகின்றனர். வியாபாரிகள் அனுமதியின்றி சாலையோரம் கடைகள் அமைத்து போக்குவரத்துக்கும், பொது அமைதிக்கும் இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் ஒத்துழைப்பு
பக்தர்களை ஏற்றி வரும் தனியார் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஒழுங்காக நிறுத்த வேண்டும். பக்தர்கள் தசரா குழுக்களாக வந்து முக்கிய சந்திப்புகளை கடக்கும் போது, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடைஞ்சல் ஏற்படுத்த கூடாது. இந்த விதிமுறைகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் துறையால் அவ்வப்போது ஏற்படும் சூழ்நிலை மற்றும் நியாயமான தேவைகளுக்காகவும், பக்தர்களின் பொதுநலனுக்காகவும் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பக்தர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.