அழகர்கோவில் ஆடி திருவிழா கொடியேற்றம் - கோவில் வளாகத்தில் தேரோட்டம்.. தரிசனத்திற்கு அனுமதி
அழகர் கோவிலில் ஆடி பிரம்மோற்சவத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. தேரோட்டம் கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெறும் என்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை: கள்ளழகர் கோவிலில் ஆடி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. வரும் 24ஆம் தேதி கோவில் வளாகத்தில் தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருவிழா நடைபெறும் நாட்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென் மாவட்ட மக்களின் குலதெய்வமாக விளங்கும் கூடிய கள்ளழகர் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்குப் பின்னர் வைகாசியில் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த மண்டபத்தில் தேவியர்களுடன் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆடி மாதம் 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவும் தேரோட்டமும் பிரச்சித்தி பெற்றது.
ஆடி மாதத்திற்கு என்னென்ன சிறப்புகள் - அம்மன் அருள் கிடைக்க விரதம் இருங்க
தேரோட்டம் நிகழ்ச்சியில் தென் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை வழிபட்டு செல்வது வழக்கம். கடந்த கொரோனா பரவல் காரணமாக கோவில் வளாகத்திலேயே திருவிழா நடைபெற்றது தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டும் கோவில் வளாகத்திலேயே திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளழகர் கோவில்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வருகிற இன்று முதல் 26ஆம் தேதி வரை ஆடி திருவிழா கோவிலின் உள் பிரகார வளாகத்தில் பக்தர்கள் இன்றி நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி ஆடி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றம் நடைபெறும் நேரத்தில் பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
அலங்கார வாகனங்களில் அழகர்
தினமும் மாலையில் அன்னம்,சிம்மம், அனுமார்,கருடன்,சேஷ, யானை, குதிரை போன்ற வாகனங்களில் கள்ளழகர் என்ற சுந்தரராசப்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தரிசனத்திற்கு மட்டும் அனுமதி
இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. திருவிழா நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும் , மாலை 3.30 மணி முதல் 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வரும் 24ஆம் தேதி தேரோட்டம் கோவில் வளாகத்தில் தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடு வெட்டி பொங்கல் வைக்க தடை
தீர்த்தவாரியுடன் ஆடி திருவிழா நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் மறு உத்தரவு வரும் வரை கோவில் வளாகத்திற்குள் பக்தர்கள் தங்குவதற்கும், நூபுர கங்கை தீர்த்தத்தில் குளிப்பதற்கும், கிடாய் வெட்டி பொங்கல் வைப்பதற்கும் தடை நீடிக்கும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி கோவில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.