மகாளய அமாவாசை..சதுரகிரி மலைக்கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம் - இருவர் உயிரிழப்பு
விருதுநகர்: புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு மலையேறி சென்ற பக்தர் இருவர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் . இந்த கோயிலானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இக்கோயிலுக்கு மாதந்தோரும் பிரதோஷம் ,அமாவாசை, பௌர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சதுரகிரி கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

சதுரகிரி
இந்நிலையில் புரட்டாசி மாத பிரதோஷம், மஹாலய அமாவாசை முன்னிட்டும்,நவராத்திரி திருவிழாவை முன்னிட்டும் கடந்த 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை மொத்தம் 13 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல கோயில் நிர்வாகம் சிறப்பு அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் நேற்று மகாளய அமாவாசை என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் தவிப்பு
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சென்று கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தனர். பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சதுரகிரி மலைக் கோவிலுக்கு கோயம்புத்தூர் மாவட்டம் சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 46 வயதுடைய கோவிந்தராஜன் என்பவர் மலையேறி செல்லும்போது வனதுர்க்கை அம்மன் கோவில் அருகே மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

2 பேர் மரணம்
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நடராஜ் என்பவர் கோரக்கர் குகை அருகே மூச்சுத் திணறல் ஏற்ப்பட்டு உயிரிழந்தார். இரண்டு பக்தர்களின் உடலை மீட்பு குழுவினர் மீட்டு தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு 5 மணி நேரத்தில் கொண்டு வந்தனர். உடலை சாப்டூர் காவல்துறையினர் பெற்றுக் கொண்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

அடிப்படை வசதி தேவை
சதுரகிரி கோவிவில் எந்தவித மருத்துவ வசதிகளும், அடிப்படை வசதிகளும் இல்லாததால் தொடர்ந்து பக்தர்கள் உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அங்கு மருத்துவ வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications