குரு பெயர்ச்சி 2022: குரு தரும் ஹம்ச, கஜகேசரி யோகங்கள் உங்க ஜாதகத்தில் இருக்கா..பதவிகள் தேடி வரும்
குரு பகவான் கருணைக்கடல், நீதிமான், களங்கமற்றவர் குருபகவான். கற்பக விருட்சம் போல் பக்தர்களுக்கு வரங்களை வாரி வழங்குபவர்.
சென்னை: ஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை வராது. குருவின் அருள் இருந்தால் செல்வம் செல்வாக்கு தேடி வரும். பதவியும் பட்டங்களும் வீடு தேடி வரும். அதிர்ஷ்டம் அளவில்லாத அளவில் இருக்கும். குரு பெயர்ச்சி நிகழ்ந்துள்ள இந்த நேரத்தில் குரு தரும் யோகங்களைப் பார்க்கலாம்.
நம் கை விரல்களில் ஆள்காட்டி விரல் குரு விரல் என்றும் அதன் அடியில் உள்ள மேடு குருமேடு என்றும் அழைக்கப்படும். அந்த மேட்டில் வளையம் போன்ற அமைப்பு உள்ளவர்கள் உயர்ந்த உன்னத பதவி, செல்வாக்கு, சொல்வாக்கு கொண்டவர்களாய்த் திகழ்வார்கள். தனகாரகன் புத்திரகாரகன் வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் கஷ்டம் வர வாய்ப்பு இல்லை. குடும்பமும் நல்ல முறையில் இருக்கும்.
"ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்
தீதிலாதொரு முன்றிலே துரியோதனன் படைமாண்டதும்
இன்மை யெட்டினில் வாலி பட்டமிழந்ததும்
ஈசனரொரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டதும்
தர்மபுத்திரர் நாலிலே வனவாசம் போனதும்
சத்தியமாமுனி யாறிலே இருக்கையில் தளை பூண்டதும்
வன்மையுற்றிட ராவணன் முடி பன்னிரண்டில் விழ்ந்ததும் என்று குரு பெயர்ச்சி பழம் பாடல்"மேற்கண்ட பலன்கள் அப்படியே நடக்கும் என்பது உறுதியில்லை.
இப்படி பண்றாங்களே! சென்னை வரும் மோடியிடம்.. பற்ற வைக்கபோகும் கமலாலயம்.. தப்பு தப்பு! சிக்கலில் திமுக
குருபகவான் பயோடேட்டா
காசியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பதினாயிரம் தேவ வருடங்கள் அதை நியமத்துடன் பூஜித்து ஈசனால் ஜீவன் எனும் பெயரால் அழைக்கப்பட்டு தேவேந்திரனுக்கே குருவாகும் வரத்தையும் பெற்றவர் குருபகவான் என காசிகாண்டம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுராசார்யார், வாகீசர், பீதாம்பரர், யுவர், த்ரிலோகேசர், லோகபூஜ்யர், கிரகாதீசர், தயாகரர், நீதிகாரகர், தாராபதி, கிரஹபீடாபஹாரகர், ஸௌம்யமூர்த்தி என பல்வேறு பெயர்கள் குருவிற்கு உண்டு. குருபகவானின் மனைவி தாரை. மகன்கள் பரத்வாஜர், யமகண்டன், கசன்.அன்னப்பறவையும் யானையும் குருவின் வாகனங்களாகத் திகழ்வதாக புராணங்கள் கூறுகின்றன. தனுசு ராசிக்கும் மீன ராசிக்கும் தலைவரான குருவிற்கு தானியங்களில் கடலையும் ரத்தினங்களில் புஷ்பராகமும் மலர்களில் முல்லையும் சமித்தில் அரசும் சுவைகளில் இனிப்பும் உலோகங்களில் தங்கமும் சித்ரான்னங்களில் தயிர்சாதமும் உரியவை. குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை குரு பகவானின் நட்சத்திரங்கள்.
குருவினால் ஏற்படும் நன்மைகள்
ஜாதகத்தில் குரு இருக்கும் ராசி.லக்னம் ஆகியவை பொருத்தும் ஜன்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களில் கோசாரத்தில் வரும் பொழுது நன்மையே செய்வார் அதே நடக்கும் தசா நாதனை கோசார குரு பார்க்கும் காலமும் யோக பலன்களே நடக்கும். கோச்சாரத்தில் சுற்றி வரும் கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று சேரும் பொழுதும் யோகத்தையே செய்யும். அதே போல கோச்சார குரு ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களை குரு தொடர்பு கொள்ளும் பொழுது குருபகவானால் நன்மையே நடக்கும். குரு பகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9ம் இடங்களை பார்வையிடுவார் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
குரு தரும் யோகங்கள்
ராசி, அம்சத்தில் பலம் பெற்ற குரு அமர்ந்து விட்டால் அந்த ஜாதகருக்கு அந்த பலமே போதுமானது. கௌரவம், செல்வாக்கு, பட்டம், பதவிகள் தானாகவே தேடி வரும். ஆன்மிக விஷயங்களில் ஜாதகர் ஆத்மார்த்தமாக ஈடுபடுவார். குரு பகவான் திருவருள் பெற்றால் மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்ற அனைத்தையும் பெறலாம். சந்திரனுக்கு குரு 1, 5, 9ஆம் வீட்டில் குரு காணப்பட்டால் 'குருச்சந்திர யோகம்' உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் புகழ் மிக்கவர்களாகவும் நல்ல அந்தஸ்து படைத்தவர்களாகவும் இருப்பர்.
ஹம்ச யோகம் தரும் குருபகவான்
சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு உச்சம் பெற்றிருந்தால், 'ஹம்சயோகம்' உண்டாகிறது. நல்ல உடலமைப்பையும், ஒழுக்கமான வாழ்க்கையும் ஏற்றவர்களாக இந்த யோகத்தில் பிறந்தவர்கள் இருப்பர். குருபகவான் செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தாலும், குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் 'குரு மங்கள யோகம்' உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் வீடு, இடம், வாகனம் போன்றவற்றை அதிகம் வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
கஜகேசரி யோகம் தரும் பலன்
சந்திரன் இருக்கும் ராசியில் இருந்து குரு கேந்திரத்தில் அதாவது 4, 7, 10 ஆகிய இடங்களில் அமர்ந்திருந்தால் கஜகேசரி யோகம் உருவாகும். இப்போது கோச்சார ரீதியாக குருபகவான் மீன ராசியில் பயணிப்பதால் மீனம், மிதுனம், தனுசு, கன்னி ஆகிய ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகம் அமைந்துள்ளது. இந்த யோகத்தினால், செல்வம், செல்வாக்கு, சொல்வாக்கு, வீடு, வாகனம், உயர் பதவி பெற்று மதிப்பும் மரியாதையுமாக வாழலாம்.
அதே போல குருவுக்கு சந்திரன் 6, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் சகட யோகம் உருவாகிறது. வாழ்க்கை வண்டிச் சக்கரம் போல, இன்பமும், துன்பமும் கலந்திருக்கும். ஒரு தொகை செலவழிந்த பிறகே மற்றொரு தொகை வந்து சேரும்.
குருவின் தசா காலம்
குரு தசை 16 வருடங்கள் கொண்டது. குரு தசை ஒருவருக்கு நடக்கும் போது 16 ஆண்டுகள் அவரை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு நல்லது கெட்டதை நடத்தி வைப்பார் குரு பகவான். ஜோதிடத்தில் முழு சுப கிரகம் எனும் அமைப்பையும் பெருமையும் பெற்ற ஒரே கிரகம் இதுவே. வாழ்வின் ஆதாரமான தனம், குழந்தை வரம் இரண்டையும் அளிக்கக் கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு ஒருவரே.