குரு பெயர்ச்சி பலன் 2023: ஜாகத்தில் குரு சண்டாள யோகம் இருக்கா? மறந்தும் இந்த தவறை செய்யாதீர்கள்
சென்னை: ஜாதகத்தில் குருவும் ராகுவும் இணைந்திருப்பது குரு சண்டாள யோகம். ஒரு ராசியில் குருவும் ராகுவும் இணைந்து கூட்டணி அமைத்திருந்தால் அதனை குரு சண்டாள யோகம் என்று கூறுவர். இப்போது மேஷ ராசியில் குரு பகவான் ராகு உடன் இணைந்துள்ளார். குரு சனி சேர்ந்திருந்தாலும் குரு சண்டாள யோகம் உண்டாகும். குரு பகவானை சனி பார்த்தாலும் குரு சண்டாள யோகம் உண்டாகும். குரு தோஷம் உள்ளவர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
குருபகவான் நவகிரகங்களில் சுப கிரகம். செல்வம், செல்வாக்கு, கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம் என மனிதர்களுக்குத் தேவையான அத்தனை நன்மைகளையும் செய்பவர். எனவேதான் குரு ஒருவரின் ஜாதகத்தில் வலிமையாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். குரு ஒருவரின் ராசி அல்லது லக்னத்தைப் பார்த்தால் அது வலிமையானதாக இருக்கும். குருபகவான் வலிமையானவராக இருந்தால் அது கோடீஸ்வர யோகத்தை தரும்.

எந்த ஒரு யோக ஜாதகத்திலும் லக்னத்தையோ, ராசியையோ, குறைந்த பட்சம் லக்னாதிபதியையோ குரு பார்த்தே தீருவார். அல்லது வலுப்பெற்று இருப்பார். குரு வலிமை பெற்றிருந்தால், ஒரு மனிதனை மிகப் பெரிய கோடீஸ்வரனாக்குவார். ஒருவருடைய ஜாதகத்தில் இவர் நல்ல அமைப்பில் அமர்ந்து குருவின் தசையும் நடக்குமானால் அவர் அளவுக்கு அதிகமான பணத்தை சம்பாதிப்பார்.
ஜாதகத்தில் எந்த கிரகம் வலுவிழந்து காணப்பட்டாலும், குரு மட்டும் வலுவிழக்கக் கூடாது. குரு பகவானை சனி பகவான் எங்கிருந்து பார்த்தாலும், குருவின் சாரத்தில் சனியும் சனியின் சாரத்தில் குருவும் இருத்தாலும், குரு மற்றும் சனி கோள்கள் ஒன்றையொன்று பார்த்தாலும் குரு தோஷம் உள்ள ஜாதகம் ஆகும். இவர்கள் வாழ்வில் உயர்வு அடையாமல் இருந்தாலும் பிறர் உயர ஏணியாக மட்டும் செயல்படுவார்கள். இப்போது குரு பகவான் மேஷ ராசியில் ராகு உடன் இணைந்திருக்க கும்ப ராசியில் இருந்து சனி பகவான் பார்வையிடுகிறார். இது குரு சண்டாள யோகம் என்ற அமைப்பை தருகிறது.
குரு பகவான் ஒருவரின் ஜாதகத்தில் வலிமை இழந்து இருந்தாலோ ஜாதகத்தில், குரு நீச்சமாகவோ, பகை பெற்றோ இருந்தால், அத்தகைய ஜாதகர்கள் பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. காரணம் குரு பாதிக்கப்பட்டால் கல்வியில் பாதிப்பு ஏற்படும், திருமணம், குழந்தை பாக்கியத்தில் தடை ஏற்படும்.
ஜாதகத்தில் குருபகவான் வலிமை குன்றியிருந்தாலோ களத்திர ஸ்தானம், புத்திர ஸ்தானத்தில் பாம்பு கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலோ திருமணம், குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தடை தாமதம் எற்படும். தடைகள் விலக குரு பரிகார தலங்களுக்கு சென்று அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபடலாம். அதே போல ஆலங்குடி குருபகவான், திட்டை குருபகவான், பாடி திருவலிதாயம் குருபகவான், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் மேதா தட்சிணாமூர்த்தி ஆகியோரை வணங்கலாம்.
வியாழக்கிழமைகளில், பெரியவர்கள், துறவிகள், சாதுக்கள் ஆகியோரை வணங்கி, அவர்களது ஆசியைப் பெற வேண்டும். மிகக் கடுமையான குரு தோஷம் உடையவர்கள் வியாழக்கிழமையில் புனித ஆறுகள், நதிகளில் குளித்து சிவ ஆலயம் சென்று வணங்க வேண்டும்.

குரு தோஷம் இருப்பவர்கள் வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து, மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இது மிகவும் சக்தி உள்ள பரிகாரம் ஆகும். இந்த பரிகாரத்தை குறைந்தபட்சம் 9 வாரங்கள் முதல் அதிகபட்சம் 27 வாரங்கள் வரை செய்தால் மட்டுமே குருபகவானின் முழுமையான அருளை பெற முடியும். கோயில் யானைகளுக்கு வாழைப்பழங்கள் மற்றும் கரும்பு போன்றவற்றை உண்ணக் கொடுப்பது உங்களுக்கு குருவின் முழுமையான அருள் கிடைக்கும்.
முழுமையான சுப கிரகமான குரு பகவானின் அருளைப் பெறுவதற்கு உங்கள் வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் நவக்கிரக சந்நிதிக்கு வியாழக்கிழமை தினத்தில் காலை 7 மணிக்குள்ளாக சென்று, 27 கொண்டைக்கடலை கோர்த்த மாலையை குருபகவானுக்கு அணிவித்து, மஞ்சள் நிற பூக்கள் சமர்ப்பித்து, மஞ்சள் நிற இனிப்பு வகையை நைவேத்தியம் செய்து, குரு காயத்ரி மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்யலாம். இதனால் குரு பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, உங்கள் வாழ்வில் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications