கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினையா? சனிபகவானை சரணடையுங்க #சனிப்பெயர்ச்சி
கடன் பிரச்சினையில் சிக்கி குடும்பத்தோடு பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்குக் காரணம் ஜாதக அமைப்புதான்.
Recommended Video
சென்னை: தன்னுடைய சந்தோசத்திற்காக கடன் வாங்கவில்லை என்றாலும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கடன் வாங்கிக் கொடுத்து அதை கட்ட வழியின்றி உயிரை மாய்த்துக்கொண்டவர்கள் பலர் இருக்கின்றனர். இதற்கு காரணம் ஜாதக அமைப்புதான். கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்றெல்லாம் கடனாளியை வர்ணித்துள்ளனர்.
இதே போல ஜாமீன் கையெழுத்து போட்டவரும் கூட கடன் நெருக்கடியில் சிக்குகின்றனர். எல்லாம் கிரகங்களின் சேர்க்கை, பார்வைதான். ஒருவர் எப்போதும் கடனாளியாக இருப்பதில்லை. சூழ்நிலை கடனாளியாக்கிவிடுகிறது. அந்த சூழ்நிலை ஜோதிடத்தில் எப்படி அமைகிறது என பார்ப்போம்.
ஜோதிடத்தில் ஆறாம் பாவத்தை கடன் பற்றி கூறும் பாவகமாக கூறப்பட்டிருக்கிறது. காலபுருஷனுக்கு ஆறாமிடமாக கன்னி அமைந்துள்ளதால் கன்னி ராசியில் அமர்ந்த கிரகமும் புதனோடு சேர்ந்த கிரகமும் புதனின் வீட்டில் நிற்கும் கிரகமும் கடனின் தன்மையை பற்றி கூறும் அமைப்பாகும்.
கிரகங்களின் சேர்க்கையும் பார்வையும்
அவன் என்ன செய்வான் அவனுக்கு சேர்க்கை சரியில்லை. எல்லாம் கிரக அமைப்பு என்று கூறுவார்கள்.
ஜாதகப்படி லக்னாதிபதி 6ம் இடத்தில் பகைபெற்றோ தீயகிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்றோ அல்லது தனித்தோ அமர்ந்து திசை/புத்தி நடைபெற்றால் அவருக்கு அந்த காலகட்டம் முழுவதும் கடன் தொல்லைகள் ஏற்பட்டு வாழ்கையில் நிம்மதி சீர்குலையும்.
கடனில் கழியும் வாழ்க்கை
லக்னாதிபதி 6ம் வீட்டிலும் 6ம் வீட்டின் அதிபதி லக்னத்திலும் பரிவர்த்தனை பெற்று அமர்ந்தாலும் அவர்களுக்கு கடன் பிரச்சனைகள் வாழ்நாள் முழுவதும் இருந்துகொண்டே இருக்கும். ஜெனன ஜாதகத்தில் இரண்டாம் பாவாதிபதி ஆறாம் வீட்டில் நின்றால் அவருடைய வாழ்க்கை கடனிலேயே கழியும்.
லோன் கட்டியே ஓய்ந்து போவார்கள்
ஆறாம் பாவாதிதி லக்னத்தில் நின்றால் ஜாதகர் கேட்காமலே கடனை கொடுத்து கடனாளியாக்கிடுவர். லக்னாதிபதி பலமற்ற நிலையில் இரண்டாம் வீட்டின் அதிபதி குருபகவான் பார்வையின்றி 6ம் இடத்தில் அமர்ந்து திசை நடைபெற்றால் அவர் சம்பாத்தியம் முழுவதும் கடன்/வட்டி கட்டியே வீணாகும். இவர் யாருக்கும் கடன் ஜாமீன் போடகூடாது.மீறி வாக்குறுதி கொடுத்தால் அந்த கடன் இவர் தலையில் வந்துதான் விடியும்.
பலமான லக்னாதிபதி
லக்னாதிபதி பலமாக இருந்து ஜனன ஜாதகத்தில் ஆறாம் பாவாதிபதி தசா புத்தி நடைபெற்றால் திருமணம் போன்ற ஏதோ ஒரு காரணத்திற்க்காக கடன் வாங்கி திரும்ப அடைத்திடுவார். ஜனன ஜாதகத்தில் லக்னாதிபதி பலமற்று இரண்டாம் வீட்டின் அதிபதி குருபகவான் பார்வையின்றி பன்னிரெண்டாம் பாவத்தில் அமர்ந்து திசை நடைபெற்றால் அவர் சம்பாத்தியம் முழுவதும் கடன்/வட்டி கட்டியே வீணாகும். சம்பாதிக்கும் எதுவும் மிஞ்சாது.
குருவின் பயணம்
ஆறாம்பாவத்தோடு தொடர்பு கொள்ளும் கிரகங்களையும் ஆறாம் பாவாதிபதி நிற்கும் வீட்டினையும் கொண்டு ஒருவர் எந்தகாரணத்திற்க்காக கடன் வாங்குகிறார்கள் என்பதை அறியமுடியும். ஒருவர் ஜாதகத்தில் குரு கால புருஷனுக்கு ஆறாம் பாவமான கன்னியில் அல்லது ஜாதக ஆறாம் பாவத்தில் கோச்சார ரீதியாக பயணம் செய்யும்போது கடன் வாங்க கூடாது.
ஏழரை சனி காலம்
குரு தான் இருக்கும் வீட்டை வளர்ப்பார். எனவே ஆறாம் பாவத்தில் நிற்க்கும் போது கடனை வளர்த்திடுவார். குரு ஸர்ப கிரகங்களுடன் சேர்ந்து நிற்க்கும் போது புதிய கடன்கள் வாங்கவோ அல்லது கடன அடைக்கவோ முயற்சி செய்ய கூடாது. ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வாங்க முயற்சி செய்ய கூடாது. சந்திரபலமற்ற நாளில் கடன் வாங்கும் முயற்சியில் இறங்க கூடாது. முக்கியமாக செவ்வாய் கிழமையில் கடன் வாங்கவே கூடாது. மாற்றாக கடன் அடைப்பது சிறந்ததாகும்.
கடன் தீர்க்கும் சிவன்
கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில் அமைந்துள்ளது திருச்சேறை உடையார் கோவில். இங்கு தனி சந்நதியில் ருண விமோச்சனராய் அருள்பாளிக்கிறார் பரமேஸ்வரன். இது கடன் நிவர்த்தி ஆகும் திருத்தலம் ஆகும். வறுமையை நீக்கி செம்மையான வாழ்வளிக்கும் இறைவன் ருண விமோசன லிங்கேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
ஸ்வாதியில் நரசிம்மர் தரிசனம்
ருணம் எனில் கடன் என்று பொருள். லட்சுமி நரசிம்மரைக் குறித்த ருண விமோசன ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து வந்தால் எல்லாவித கடன்களும் அடைபடும். லட்சுமி நரசிம்மரின் திருவருள் கிட்டும். ஸ்வாதி நக்ஷத்திரத்தில் பாணக நிவேதனம் செய்வித்தாலும் கடன் விரைவில் அடையும்.
விநாயகரை வணங்குங்கள்
மேலும் கடன் தீர்ப்பதில் கேது பகவானும் செவ்வாய் பகவானும் மிகவும் பெருபங்காற்றுகின்றனர். கேதுவின் அதிதேவதை வினாயகரை வணங்குவது, செவ்வாயின் அதிதேவதை முருகனை வணங்குவது, கேது செவ்வாய் சேர்க்கை பெற்ற மைத்ர முகூர்த்தத்தில் கடன் அடைப்பது விரைவில் கடன் அடைய சிறந்த வழிகளாகும்.
எந்த காரணத்திற்க்காக கடன் வாங்கினாலும் அது அடைய சனீஸ்வர பகவானின் அருள் தேவை. அவர் அனுக்ரகம் செய்தால்தான் கடன் அடைக்கமுடியும்.
காப்பாற்றும் சனிபகவான்
கடனிலிருந்து விடுபட தொடர்ந்து சனீஸ்வர பகவானை வழிபடுவது அவசியமாகும். அவ்வப்போது திருநள்ளாறு, குச்சனூர், சனிசிங்கனாபூர், சென்னை பொழிச்சலூரில் உள்ள வடதிருநள்ளாறு எனும் ஸ்தலம் ஆகிய ஒன்றிற்கு அவ்வபோது சென்று வரவேண்டும். சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பொழிச்சலூரில் உள்ளது அகஸ்தீஸ்வரர் ஆலயம். சென்னையில் உள்ள நவக்கிரகக் கோவில்களுள் சனிபகவான் அம்சத்துக்குரிய கோவிலாக விளங்குகிறது. அகஸ்தியர் பல வருடங்கள் பூஜித்த லிங்கம் இத்தலத்தில் உள்ளது.
கடன் தீர்க்கும் மைத்ர முகூர்த்தம்
மைத்ர முகூர்த்தம் என்பது எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். செவ்வாய்க்கிழமையும் அசுவனி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ரேய முகூர்த்தம் எனப்படும். செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரமும் மைத்ரேய முகூர்த்தமாகின்றது.