நெல்லை பிரம்மலோகம் பிரம்மா கோவில் வருஷாபிஷேகம் - பொங்கல் வைத்து வழிபாடு
படைப்புக்கடவுளான பிரம்மாவிற்கு தென்காசியில் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் வருஷாபிஷேகம் ஏப்ரல் 3 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நெல்லை: சுந்தர பாண்டியபுரம் அருகே அமைந்துள்ளது பிரம்மா திருக்கோவில்
இந்த கோவில் கட்டபட்டு ஒரு வருடங்கள் நிறைவடைந்த நிலையில் திருக்கோவிலின் பிரமோற்சவ வருஷாபிஷேக விழா தொடங்கியுள்ளது.
தென்காசி சுந்தரபாண்டியபுரம் சாலையில் அமைந்துள்ளது கீழபாட்டாக்குறிச்சி ஸ்ரீபிரம்மா திருக்கோவில். சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்து இத்திருத்தலத்தில் பிரம்மா மற்றும் பரிவார மூர்த்திகள் படைசூழ மஹா பிரம்மதேவர் சிருஷ்டிக்கப்பட்டுள்ளார்.
இந்த கோவில் கடந்த ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு இந்த ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.
சிறப்பு பூஜைகள்
சுற்று வட்டாரத்தில் இருந்து பொது மக்கள் வருகை தந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். வரும் பனிரெண்டாம் தேதி அன்று பிரம்மா சிலைக்கு சிறப்பு அலங்காரமும் அபிஷேகமும் பூஜைகளும் நடைபெற உள்ளது.
படைப்பு கடவுள்
படைப்புக் கடவுள் பிரம்மா உயிரினங்களை படைக்கும்போதே அவரவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்பத் தலை எழுத்தை எழுதி அனுப்புகிறார் எனப் புராணங்கள் கூறுகின்றன. சிவனின் அடி முடி காணும் போட்டியில் இவர் பொய் சொன்னதால், இவரது தலையெழுத்தை சிவன் தீர்மானித்தார். கோயில் இல்லாக் கடவுளாக இருக்கும்படி சபித்தார். ஆனாலும் பிரம்மாவுக்குப் சிவன் கோயில்களில் சிறிய அளவில் சன்னிதிகள் உண்டு. தமிழகத்தில் திருப்பட்டூரில் பிரம்மாவிற்கு தனி கோவில் உள்ளது.
பிரம்மன் சன்னிதி
தென்காசி அருகே பிரம்மலோகத்தில் தனியாக கோவில் கட்டப்பட்டுள்ளது. கேரள மாநிலம் பந்தளத்தை சேர்ந்தவர் சாரசந்திரபோஸ் என்பவர் கடந்த 2008ம் ஆண்டு முதல் இவர் ஜாதிகள் ஒழிக்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் யாத்திரை சென்று வருகிறார். இதன் ஒருபகுதியாக தென்காசியை அடுத்த கீழபாட்டாக்குறிச்சியில் பிரம்மாவுக்கு கோயில் எழுப்பியுள்ளார்.
ஐந்து முக பிரம்மா
இந்தியாவிலேயே முதன்முறையாக 5 முகத்துடன் கூடிய பிரம்மா சிலை இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் 9 அடி உயரத்தில் 900 கிலோ எடையில் பிரம்மா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
சிவனுக்கும், பிரம்மனுக்கும் ஆதி காலத்தில் ஐந்து தலை இருந்தனவாம். தானும் சிவனும் சமம் என்ற மமதையில் இருந்திருக்கிறார் பிரம்மன். இதனை அறிந்த சிவன், பிரம்மனின் ஐந்தாம் தலையை கிள்ளி எடுத்துவிட்டார். இதனால் அவரது படைப்பாற்றல் நின்று போனது.
பிரம்மன் சாப விமோசனம்
பூலோகத்திற்கு வந்த பிரம்மன், திருப்பத்தூரில் பன்னிரு லிங்கங்களை நிறுவி வழிபட்டார் பிரம்மா.
பிரம்மனின் பூஜையால் மகிழ்ந்த சிவன் படைக்கும் ஆற்றலைத் திருப்பித் தந்தார். அதோடு வரம் ஒன்றையும் வழங்கினார். பிரம்மன் எழுதிய தலையெழுத்தை அவரே நினைத்தாலும் மாற்ற முடியாது என்பதுதான் அதுவரையிலான விதி. ஆனால், தான் எழுதிய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றக்கூடிய வல்லமையைத் திருப்பட்டூரில் பிரம்மன் சிவனருளால் பெற்றார். விதியை மாற்றிக்கொள்ளும் விதியிருப்பின் விதி கூட்டி அருள்க என்று சிவன் வரமளித்ததாகத் தல புராணம் தெரிவிக்கிறது.
நன்மைகள் நடக்கும்
நவக்கிரகங்களில் உள்ள குருவுக்கு அதிதேவதை பிரம்மா. இவரது அருட்பார்வை பெற்றால், குரு பார்க்கக் கோடி நன்மை விளையும் என்பதற்கு ஏற்பக் கோடி நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரம்மலோகம் ஸ்ரீபிரம்மாவை நேரில் வந்து தரிசித்தால் போதும். நலம் பல வழங்கி நல்வாழ்வு நல்குவார். திங்கள், வியாழன், திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் நமது பிறந்த நட்சத்திரத்தன்று இங்கு வந்து வழிபடலாம்.