பொன்னியின் செல்வன் வழிபட்ட வாராகி அம்மன்..எளிமையாக வணங்கினாலே வரங்களை வாரி தருவாள்
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவிலில் வாராகி அம்மன் வழிபாடு சிறப்பு வாய்ந்தது. இங்கு வாராகி அன்னை தனி சன்னதி கொண்டு வீற்றிருக்கிறார். வாழைப்பழம் படைக்கலாம். மாலை நேரத்தில் வாராகி அம்மனுக்கு கிழங்கு வகைகளை படைத்து வழிபாடு சிறப்பானது. பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜ ராஜசோழன் போருக்கு செல்லும் முன்பு வாராகி அம்மனை வணங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். மாமன்னர் ராஜ ராஜசோழன் இந்த அன்னையின் அருள் பெற்றுதான் எந்த செயலையும் தொடங்குவார்.
பொன்னியின் செல்வன் பற்றியும் தஞ்சாவூர் பெரிய கோவில் பற்றியும் உலக தமிழர்கள் தற்போது படித்துக்கொண்டிருக்கும் நிலையில் ராஜ ராஜசோழன் வழிபட்ட வராகி அம்மனைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்வோம்.
இப்படி பேசித்தான் மகாலட்சுமியை கவர்ந்தாரா ரவீந்தர்..!? இது தெரியாம போச்சே..புலம்பும் 90ஸ் கிட்ஸ்
சப்தகன்னியரில் ஒருவரான வராகி அம்மன். திருமாலின் வராக அம்சமாக கருதப்படுகிறார். இவர் வராகமெனும் பன்றி முகத்தையும், எட்டு கரங்களையும் உடையவர். பின் இருகரங்களில் தண்டத்தினையும் கலப்பையையும் கொண்டவர். இவர் கருப்பு நிற ஆடையுடுத்தி சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கிறார். கலியுகத்தில் கண்கண்ட தெய்வமான வாராகியை வணங்கினால் பகைவரை அழித்து பக்தரை காத்திடுவாள். கொடிய ஏவல், பில்லி சூனியத்தில் இருந்தும் காப்பாற்றுவாள். நினைத்த காரியம் நிறைவேறும். திருமணத்தடைகள் விலகும், புத்திரபாக்கியம் கிடைக்கும்.
வாராகியை எந்த நாளில் வழிபடலாம்
காசி நகரத்தில் வாராகி அன்னைக்கு மிகப்பெரிய கோவில் உள்ளது. இங்குள்ள வாராகியை நேரடியாக தரிசிக்க முடியாது துவாரங்களின் வழியாகத்தான் தரிசிக்க முடியும். ஞாயிற்றுக்கிழமைகளில் வாராகியை வழிபட்டால் நோய்கள் தீரும். திங்கட்கிழமைகளில் வழிபட்டால் மன நல பாதிப்புகள் நீங்கும். வீடு நிலம் தொடர்பான பிரச்சினைகள்தீர செவ்வாய்க்கிழமைகளில் வாராகியை வழிபடலாம். கடன் தொல்லைகள் தீர புதன்கிழமை வழிபடலாம். குழந்தை பேறு கிடைக்க வியாழக்கிழமை வழிபடலாம். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வியாழக்கிழமை வழிபடலாம். வெள்ளிக்கிழமை வழிபட நினைத்த காரியம் நிறைவேறும்.
அன்பான அன்னை வாராகி
சப்த மாதர்களில் வாராகி அம்மன் உக்கிரமான தெய்வமாக பார்க்கப்பட்டாலும் அன்பை பொழிவதில் அன்னைக்கு நிகரானவள். வாராகி காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வணங்கினால் கேட்ட வரங்களை கொடுப்பவள். வாராகி அம்மன் ராஜ ராஜேஸ்வரி அம்மனின் குதிரைப்படைத்தலைவியாகவும், பத்மாவதி அம்மனின் காவல் தெய்வமாகவும், சப்தகன்னியரில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.
அஷ்ட வாராகி
மகா வாராகி, ஆதி வாராகி, ஸ்வப்ன வாராகி, லகு வாராகி, உன்மத்த வாராகி, சிம்ஹாருடா வாராகி, மகிஷாருடா வாராகி, அச்வாருடா வாராகி என எட்டு வாராகிகள் அழைக்கப்படுகிறார்கள். இந்த எட்டு கோயிலையும் உள்ளடக்கிய அஷ்டவாராகி கோயில் சாலாமேட்டில் அமைந்துள்ளது. உலகிலேயே வாராகியம்மனுக்கு அமைக்கப்பட்ட முதல் கோயிலாக கருதப்படுகிறது. இதே போல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வழுவூர் வீரட்டேசுவரர் கோயில் வாராகி வழிபட்ட தலமாக அறியப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் எனும் ஊரில் சப்தமாதாக்கள் கோவில் உள்ளது. இங்கு வாராகி அம்மனுக்கு பஞ்சமி திதியில் பூஜை மற்றும் மஹா யாகம் நடைபெறும்.
இழந்த செல்வம் திரும்ப வரும்
வாராகி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6 மணியில் இருந்து முதல் 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள், மண் அகலில் கருநீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முடிந்து, அதில் நல்லெண்ணெய் விட்டு தீபமிட்டு மனதார வேண்டினால் இழந்த அனைத்தையும் திரும்ப பெறலாம். கோவிலுக்கு செல்ல முடியாதோர் வீட்டிலேயே வராகி அம்மனின் படத்தை வைத்து தனி பரிகார தீபமாக ஏற்றி வந்தாலும் இழந்த செல்வங்களை பெறலாம்.
வேண்டிய வரம் கிடைக்கும்
ஆனி மாதத்தில் ஆஷாட நவராத்திரி வழிபாட்டின் போது பஞ்சமி திதியில் வாராகி தேவியை வழிபடலாம். மாத பெளர்ணமி, அமாவாசை மிகவும் மிகவும் சிறப்பானது. வாராகி மாலை படித்தால் அனைத்து துன்பங்களும் நம்மை விட்டு அகலும். இரவு 10 அல்லது 11 மணியளவில் மந்திர உச்சாடனம் செய்ய வேண்டும் வாராகியை மனம் உருகி வேண்டினால் கேட்பவை அனைத்தும் கொடுக்கும் தெய்வமாக நின்று துணை நிற்கும்
வெற்றி தரும் நாயகி வாராகி
அம்மன் வீரநாரி, மகாசேனா, பஞ்சமி என பல பெயர்களை கொண்ட இவள் துர்க்கையின் படை சேனாதிபதியாக இருந்து வெற்றியை மட்டுமே ஈட்டியவள். வாராக முகம், மூன்று கண்கள் மற்றும் எட்டு திருக்கரங்களுடன் திகழ்பவள் ஸ்ரீ வாராஹி. தன் திருக்கரங்களில் சங்கு, சக்கரம், கட்கம் (கத்தி), உலக்கை, கலப்பை, உடுக்கை மற்றும் அபய - வரத முத்திரைகளுடன் காட்சி தருபவள். நீல நிற மேனியளான இந்த தேவி சிவப்பு நிற ஆடை உடுத்தி, சந்திர கலை தரித்த நவரத்தினக் கிரீடம் அணிந்துகொண்டு, சிம்ம வாகனத்தில் வீற்றிருக்கிறாள் என புராணங்கள் விவரிக்கின்றன. இந்த அன்னைக்குரிய காயத்ரி மந்திரத்தை ஜெபிப்போருக்கு கேட்ட வரங்களை தரக்ககூடியவள். " ஓம் ச்யாமளாயை விக்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத்" இந்த மத்திரத்தை தினந்தோறும் 108 முறை ஜபிப்பது சிறந்தது. இந்த மத்திரத்தை ஜெபிப்போருக்கு எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும். மனதில் தைரியம் பிறக்கும். கேட்ட வரங்கள் கிடைக்கும்.
காவல் தெய்வங்கள்
தஞ்சாவூர் கோவிலில் வாராகி அம்மன் காவலாக இருப்பது போல தஞ்சாவூர் பெரிய கோவிலை பாதுகாக்கவும் நகரத்தை பாதுகாக்கவும் நகரின் எட்டு திசைகளிலும் உக்ர காளியம்மன், வடபத்ரகாளியம்மன், கவுரியம்மன், கோடியம்மன், காளிகா பரமேஸ்வரி, மகிஷாசுரமர்த்தினி, நிசபசூதனி, காளியம்மன் என எட்டு கோவில்களை எட்டு திசைகளுக்கு உரிய அதிபதியாக படைத்துள்ளார் ராஜ ராஜ சோழன். இதே போல பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் ராஜ ராஜ வழிபட்ட ஆலயம். போருக்கு புறப்படும் முன்னர் ராஜ ராஜ சோழன் பட்டீஸ்வரம் துர்க்கையை வணங்கி செல்வார். தஞ்சைக்கு செல்பவர்கள் மறக்காமல் வாராகி அம்மனையும் பட்டீஸ்வரம் துர்க்கை அம்மனையும் வணங்கி வர காரிய வெற்றி உண்டாகும்.