உடல் நலம், மனநலம் காக்கும் சந்திரன் -சந்திரதோஷம் நீக்கும் பரிகாரத்தலங்கள்
தோஷங்களில் பலவகையான தோஷங்கள் உள்ளன. அவற்றில் சந்திர தோஷமும் முக்கியமானது. வளர்பிறை துவிதியை திதியில் அம்பிகையை வழிபட தோஷங்கள் நீங்கும்.
மதுரை: ஜாதகத்தில் சந்திரதோஷம் இருப்பவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய வளர்பிறை துவிதியை திதியில் விரதம் இருந்து மாலையில் சந்திர தரிசனம் செய்யவேண்டும். சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூர்ண அருளைப் பெறலாம். இன்று மாலை சந்திர தரிசனம் செய்ய ஏற்ற நாள் என்பதால் சந்திர தோஷம் இருப்பவர்கள் தரிசனம் செய்யலாம்.
வாழ்க்கையில் வரக்கூடிய இன்ப துன்பங்கள் அனைத்தும், நவக்கிரக அமைப்பால் நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது பரவலான ஆன்மிக நம்பிக்கையாக இருந்து வருகிறது. மனிதர்களின் உடல், மனம், புத்தி போன்ற முக்கியமானவைகளுக்கு காரக கிரகமாக அமைவது சந்திரன். சந்திரனின் தோற்றத்தில் ஏற்படும் நாளில்தான். எனவேதான் எண்ண அலைகள் எழுவதும் வீழ்வதும் சந்திரனின் ஆதிக்கத்தைப் பொறுத்தது என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

சந்திரன் நல்ல நிலைமையில் ஜாதகத்தில் இருந்தால் கவலையில்லை. பலம் குன்றிய சந்திரன்,கிரகண தோஷம், சந்திரனோடு சர்ப்பக் கிரகங்கள் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள அமைப்பு இருப்பவர்கள் சந்திர வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். ஜாதகத்தில் சந்திரனுடன் ராகு, கேதுக்கள் இணைந்து தோஷம் அடைந்தவர்கள் இவர்களும் மூன்றாம் பிறை தரிசனம் செய்தால் தோஷங்கள் படிப்படியாக விலகும். சந்திர தோஷம் இருப்பவர்கள் தெற்கு நோக்கிய அம்மனை வழிபடுவதுடன், திருவோண நட்சத்திரமன்று திருவோண விரதம் இருந்தால் சந்திரதோஷம் விலகி மகிழ்ச்சிகரமான வாழ்வு அமையும். ஆண்டுக்கு ஒருமுறையாவது சந்திர பரிகாரத்தலங்களுக்கு சென்று இறைவனை தரிசிக்க நன்மைகள் நடைபெறும்.
சந்திர தரிசனம்
சந்திரனின் ஆட்சி வீடு, கடகம், உச்சவீடு- ரிஷபம், நீச வீடு விருச்சிகம். ஒருவருக்கு ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துவிதியை திதியில் விரதம் இருந்து அம்பிகையை வழிபாடு செய்ய வேண்டும். துவிதியை திதியில் தெரியும் நிலவு,வெட்டி போடும் குட்டி நகம் போல் அழகாகவும்,பிரகாசமாக இருக்கும். மூன்றாம் பிறைச்சந்திரனை நாம் வானத்தில் சற்று சிரமப்பட்டு தேடிக்கண்டுபிடித்து தரிஸிக்கும் படியாக இருக்கும். மெல்லிய தங்கக் கம்பியில் செய்த மோதிரம் போல அழகாக வளைவாகக் காட்சி தரும். அதனை தரிசிப்பது நன்மை.

திங்களூர் - கைலாசநாதர்
பிரம்மனின் புத்திரர்களின் ஒருவர் அத்திரி மகரிஷிக்கும் அவர் மனைவி அனுசுயாவிற்கும் பிறந்த மூன்று புத்திரர்களில் முதல் புத்திரன் சந்திரன் ஆவார். தோற்றத்தில் மிகவும் வசீகரம் உடையவரான சந்திரன், மகாவிஷ்ணுவை நோக்கி தவமியற்றி நவக்கிரக அந்தஸ்து பெற்றார். சந்திர திசை மற்றும் சந்திர புத்தி நடைபெறும் போது ஏற்படும் தீங்குகளில் இருந்து நிவர்த்திக்காக செல்ல வேண்டிய சந்திர பரிகார ஸ்தலங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது திங்களூர் கைலாசநாதர் திருக்கோவில். திருவையாற்றில் இருந்து சுமார் 3 கி.மீ.தொலைவிலும் கும்பகோணத்தில் இருந்து சுமார் 33 கி.மீ.தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் அம்பாள் பெரிய நாயகியுடன் ,திருக்கைலாசநாதர் அருள் பாலிக்கிறார்.
சந்திரன் சாபம்
தட்சன் தனது 27 மகள்களையும் சுந்தரரான சந்திரனுக்கு மனம் முடித்துக் கொடுத்தான். சந்திரனுக்கு மற்ற மனைவியர்களை விட ரோகிணியின் மேல் காதல் கசிந்துருக, கோபமானான் தட்சன்.சந்திரனின் அழகு குறையவும்,கலைகள் தேயவும் சாபமிட்டான்.தனது சாபம் நீங்க சந்திரன் இந்த திருத்தலத்தில்,நீண்ட காலம் சர்வேஸ்வரனைக் குறித்து தவம் இருந்தான்.தனது பெயரிலேயே சந்திர புஷ்கரணம் என்ற தீர்த்தத்தை உருவாக்கி இறைவனை பூஜித்தான். இறைவனும் அவனது தவத்திற்கு மனமிரங்கி ஒரு பங்குனி மாதப் பௌர்ணமியில் காட்சிக் கொடுத்து சந்திரனின் சாபம் போக்கியருளினார்.சந்திரனின் சாபம் நீங்கப் பெற்றதால் இத்தலம் சந்திரனுக்குரிய பரிகார தலமாகப் போற்றப்படுகிறது.

சோமநாத சுவாமி ஆலயம்
தஞ்சாவூர் மாவட்டம், பெருமகளூர் என்ற கிராமத்திலுள்ள சோமநாத சுவாமி கோயிலில்தான் லிங்க ரூபம் தாமரைத் தண்டாக அமைந்துள்ளது. இந்தத் தலத்தில் சந்திர தரிசனம் மிகவும் சிறப்பாக ஒரு விழாவாக மாதந்தோறும் கொண்டாடப்படுகிறது. திருக்குளத்தின் கரையில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் கூடி நிற்க மூன்றாம் பிறை சந்திரனுக்கு அர்ச்சகர் தீபாராதனை காட்ட சந்திர தரிசனம் விழா நிறைவு பெறுகிறது. பெருமள்ளுர் என்ற அந்தக் கிராமத்தின் பெயர் காலப் போக்கில் மருவி பெருமகளூர் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் சோமநாத சுவாமி. இறைவி குந்தளாம்பிகை. இறைவியின் இன்னொரு பெயர் சுந்தராம்பிகை என்பதாகும்.
சென்னை - சந்திர பரிகார தலம்
சென்னையில் உள்ளவர்களுக்கு குன்றத்தூருக்கு அருகில் உள்ள சதுர்வேதிமங்கலம் எனப்படும் சோமங்களம் சோமநாதீஸ்வரர் கோவில், சந்திரனுக்குரிய பரிகார தலமாக விளங்குகிறது. மூலவர் சோமநாதேஸ்வரர். அம்பிகையின் பெயர் காமாட்சி. சந்திரன் வழிபட்டு பேறு பெற்றதால் சோமங்களம் என்ற பெயர் வழங்கப் படுகிறது. சோமன் என்றால் சந்திரன் என்று பொருள். கோவில் கோபுரமானது கஜப் பிருஷ்ட அமைப்பில் இருப்பதும், சதுர தாண்டவ மூர்த்தியாக நடராஜர் விளங்குவதும் இங்குள்ள சிறப்பு களாகும். இத்தல இறைவனை வழிபட்டால் சந்திர தோஷம் நீங்கும்.

திருமலை ஏழுமலையான்
சந்திரன் வந்து வழிபட்ட திருமலைக்கு வந்து ஸ்ரீநிவாசப் பெருமாளை வழிபடும் அன்பர்கள்,தங்கள் ஜாதகத்தில் சந்திரனால் ஏற்படும் தோசங்கள் மற்றும் அசுப பலங்களிலிருந்து விடுபட்டு, நற்பலன் பெறுவார்கள் என்பது உறுதி. சந்திர தோசத்தைப் போக்கிக் கொள்ள வேண்டி ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளைத் தரிசிக்க உகந்த கிழமை திங்கள் ஏற்ற நேரம் காலை மணி 6-7 மணிமுதல் பிற்பகல் 1-2 மற்றும் இரவு 8-9 மணி வரை சிறந்தது.
மன நோய் அகற்றும் திருவிடைமருதூர்
சிவ பெருமான் தன்னை தானே பூஜித்து, வழிபட்ட லிங்கமானதால் இவர் " மகாலிங்கமானார்". இவரை தரிசிப்போர் மன நோய் நீங்கப் பெறுவர். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இத் தல நாயகனை வழிபட்டு வந்தால் குணம் அடைவர். மன நோய் கொண்டுள்ளோர், இத் திருக் கோயிலின் வெளிச் சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர். கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது இத் திருத் தலம்.

திருந்துதேவன்குடி
குடந்தைக்கு அருகிலுள்ளது திருவிசநல்லூர். இவ்வூரிலுள்ள சிவாலயத்தின் பின்புறம் ஒரு கி.மீ தூரத்தில் இருக்கும் திருக்கோயில் திருந்துதேவங்குடி எனப்படும். பாடல் பெற்ற தலம். நண்டாங்கோயில் என்றும் சொல்வார்கள். கடக ராசியைச் சேர்ந்தவர்கள் வழிபட வேண்டிய திருகோயில். அவர்கள் வழிபட்டால் எல்லா வகையான தோசங்களும் நீங்கும். எல்லாக் கோயில்களிலும் சந்திரன் நின்ற நிலையில் இருப்பவர். இந்தக் கோயிலில் அமர்ந்நிலையில் இருக்கிறார். அதுவும் யோக நிலையில் இருக்கிறார். எனவே, எல்லா இராசிக்காரர்களும் இங்கு வந்து இறைவனையும், இறைவியையும், சந்திரனையும் வணங்கினால் சந்திரனால் விளையும் ஜாதக தோசங்கள் நீங்கும். சந்திராஷ்டம் தடை கூட தகர்ந்து போகும். இது உமாதேவி நண்டு வடிவில் சிவபெருமாணை வழிபட்ட தலம்.

சேரன் மகாதேவி - சந்திரன்
நவ கைலாயத் தலங்களில் இரண்டாவது தலம் சேரன்மகாதேவி. அகத்திய மாமுனி காட்டிய நவகிரகத் தலங்களில் இத்தலம் சந்திரனைக் குறிப்பதாக அமைந்துள்ளது. ஆவுடைய நாயகி அம்மையாகவும். ஸ்ரீஅம்மநாதன் சுவாமியாகவும் விளங்கும் சேரன்மகாதேவி திருக்கோயில் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கும் புண்ணியத் தலமாகும். இத்திருக்கோயிலில் உள்ள ஸ்ரீஅம்மநாதர் சுயம்புத் திருமேனி. இங்கு சிவகாமி சமேத நடராஜ சுவாமி காரைக்கால் அம்மை வழிபட சன்னிதி கொண்டுள்ளார். இத்திருக்கோயிலை ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் கட்டியதாகக் கல்வெட்டுச் சான்று உள்ளது. சேரன்மகாதேவி மங்கலம் என்ற இவ்வூரின் பெயர் கோயில் கல்வெட்டில் காணப்படுகிறது. சேர மன்னன் மகளின் பெயர் மகாதேவி என்றும், சேரன் என்ற குலப்பெயரைச் சேர்த்து, இவ்வூரின் பெயர் சேரன்மகாதேவி ஆயிற்று என்கின்றனர்.
நத்தம் - சந்திரன்
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள திருவரகுணமங்கை என்ற நத்தம் திருக்கோயில் உள்ளது. இந்த கோவிலில் பெருமாள் விஜயாசனர் என்றழைக்கப்படுகிறார். தாயார் வரகுணமங்கை என்ற வரகுணவல்லி. பெருமாளின் பார்வை நம்மீது பட்டாலேயே நம் மனக் குழப்பங்கள் எல்லாம் தெளிவடையும். சந்திரன் தோஷத்தால் ஏற்படக்கூடிய மன பாதிப்புகள் எல்லாம் நீங்கும். இதனாலேயே இது சந்திர தோஷப் பரிகாரத் தலமாகவும் கருதப்படுகிறது. இதற்காகவே இந்தப் பெருமாள் உற்சவரை 'எம் இடர் களைவான்' என்று போற்றுகின்றனர்.

திருஇந்தளூர் - பரிமள ரங்கநாதர்
திருஇந்தளூர் பரிமள ரங்கநாதப் பெருமாளை தரிசித்தால், சந்திர தோஷங்கள் நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள். 108 திவ்ய தேசங்களில் ஒன்று! பாஞ்சராத்திர ஆகமப்படி பூஜை நடக்கும் இந்தத் தலத்தில், ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாக பெரிய பள்ளிகொண்ட பெருமாளை தரிசிக்கலாம். தட்சனின் சாபத்தால், க்ஷயரோக நோய்க்கு ஆளான சந்திரன், இங்கே தவம் இருந்து பெருமாள் அருளால் விமோசனம் அடைந்தானாம். இதனால் இந்த ஊருக்கு, இந்துபுரி என்று பெயர். இதுவே இந்தளூர் என்று மருவியதாம். சந்திரன் நீராடிய திருக்குளம்- இந்து புஷ்கரணி. இதில் நீராடி ஸ்ரீபரிமள ரங்கநாதரை வழிபட சந்திர தோஷம் நீங்கும்.












Click it and Unblock the Notifications