சனி அமாவாசையில் நிகழும் சூரிய கிரகணம் - எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு - பரிகாரம் என்ன?
சனி அமாவாசை நாளில் நிகழ உள்ள சூரிய கிரகணம் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
சென்னை: சூரியன், சந்திரன் பூமி ஆகியவை ஒரே நேர் கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.. இது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும் போது ஏற்படும் வானியல் நிகழ்வாகும். இந்த நேரத்தில் பூமியின் குறிப்பிட்ட சில பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படும். சனிக்கிழமை அமாவாசை நாளில் நிகழப்போகும் சூரிய கிரகணம் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த கிரகணம் இந்தியாவில் தெரிய வாய்ப்பில்லை என வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
2022ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30ஆம் தேதி நிகழவுள்ளது. சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியன் முழுமையாகவோ, பகுதி அளவிலோ மறைக்கப்பட்டிருக்கும் நிகழ்வு சூரிய கிரகணம் என்றழைப்படுகிறது. இந்த கிரகணம் சனி அமாவாசை அன்று நடைபெறுகிறது. சனிப்பெயர்ச்சி முடிந்த பிறகு நிகழப்போகும் இந்திய சூரிய கிரகணம் கவனத்தைப் பெற்றுள்ளது.
கிரகங்களின் நிலை காரணமாக குறிப்பிட்ட ராசிக்காரர்கள் சூரிய கிரகணம் மற்றும் சனி அமாவாசை தினங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ராகு க்ரஷ்த சூரிய கிரகணம்
ஜோதிட ரீதியாக பார்த்தால் சூரியன்-சந்திரன் இரண்டிலிருந்தும் வெளிச்சம் வராமல், ராகு அல்லது கேது மறைப்பதையே கிரகணம் என்று கூறப்படுகிறது. ராகு மறைக்கும்போது ராகு க்ரஷ்தம் என்றும், கேது மறைக்கும்போது கேது க்ரஷ்தம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன பொதுவாக கிரகண தோஷம் கெடு பலன்களைத் தான் தரும் என்று தெரிவித்துள்ளன. மேஷராசியில் பரணி நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. மேஷ ராசியில் ராகு அமர்ந்திருக்க கூடவே சூரியனும் சந்திரனும் இணைந்துள்ளனர்.

சனி அமாவாசை நாளில் சூரிய கிரகணம்
பஞ்சாங்கத்தின்படி, ஏப்ரல் 30, சனிக்கிழமை அமாவாசை ஆகும். இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது. ஆனால் அட்லாண்டிக், அண்டார்டிகா, தென் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதி மற்றும் பசிபிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் இருந்து காணலாம்.

சனிபகவானை வழிபடலாம்
சனி அமாவாசை அன்று புனித நதிகளில் நீராடுவது, தானம் செய்வது, த்யானம் செய்வது வழக்கம். இவ்வாறு செய்வதன் மூலம் புண்ணிய பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். அமாவாசை திதியில் முன்னோர்களுக்கு தவச சடங்குகளும் செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு சனி அமாவாசை அன்று சனிபகவானை வழிபட சிறப்பு பலன் கிடைக்கும். இந்த நாளில் சனிபகவானை வழிபடுவது ஏழரை சனி மற்றும் சனி தசையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கும்.

மேஷ ராசிக்காரர்கள்
மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. மேஷ ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கிரகணத்தின் போது இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்த்து விடவும். அதிக கவனமாகவும் இருக்கவும்.

பரிகாரம் என்ன?
கடக ராசியின் ஆட்சி நாதன் சந்திரன் சந்திரன் ராகுவுடன் மேஷ ராசியில் பயணம் செய்யும் போது கிரகணம் ஏற்படுகிறது. எனவே இந்த ராசிக்காரர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாக வாய்ப்புள்ளது. செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கும் சூரிய கிரகணத்தின் போது தோஷம் ஏற்படும். எனவே இன்றைய தினம் நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். இந்த மூன்று ராசிக்காரர்கள் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கலாம். இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும்.

இறை வழிபாட்டில் கவனம்
கிரகணத்தின் போது, கடவுள் வழிபாட்டில் அதிகபட்ச நேரத்தை செலவிடுங்கள். வீட்டின் பூஜை அறை கதவை மூடி வைக்கவும். அப்போது கோவில்களின் கதவுகளும் மூடப்பட்டிருக்கும். கிரகணம் முடிந்ததும் குளித்து விட்டு தான் பிற வேலைகளை தொடங்க வேண்டும். கிரகண காலத்தில், மந்திரங்களைச் சொல்வதனால் கிடைக்கும் பலன்கள் பன்மடங்காகும். சூரிய கிரகணத்தின் போது எதிர்மறை சிந்தனைகள் வேண்டாம். நேர்மறை சிந்தனைகளுடன் இயன்ற அளவு தானம் செய்யுங்கள். தர்ப்பை அல்லது துளசி இலைகளை உணவு மற்றும் தண்ணீரில் போடவும். அதனால் கிரகணத்தின் எதிர்மறை தாக்கம் அதில் ஏற்படாமல் இருக்கும்.












Click it and Unblock the Notifications