இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று..இந்தியாவில் தெரியுமா? -என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது?
இந்த ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. பகுதியளவு தென்பட உள்ள இந்த கிரகணமானது 4 மணி நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சென்னை: இந்த ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் இன்று நிகழ இருக்கிறது. பகுதியளவு தென்பட உள்ள இந்த கிரகணமானது 4 மணி நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தெரிய வாய்ப்பில்லை. சிலி, அர்ஜெண்டினா, உருகுவே, மேற்கு பாராகுவே, தென்மேற்கு பொலிவியா, தென்கிழக்கு பெரு மற்றும் தென்மேற்கு பிரேசிலில் சிறு பகுதி ஆகிய இடங்களில் சூரிய கிரகணம் தென்படும் என்று நாசா கூறியுள்ளது.
தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தீபராஜன்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்... ரூ.5 லட்சம் நிவாரணம்
அண்டார்டிக்காவில் ஒரு சில பகுதிகளிலும், பாஃல்க்லாந்து தீவுகள் உள்ளிட்ட தென் அமெரிக்காவின் தென்கிழக்கு கடற்கரை பகுதிகளிலும், தெற்கு பசிஃபிக் மற்றும் தெற்கு கடல் ஆகிய பகுதிகளிலும் கிரகணம் தென்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ராகு சூரியன் சந்திரன் கூட்டணி
சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில், சூரியன்-சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதில் கிரகண நேரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கிரகண தோஷம் ஏற்படுகிறது என்பது, பொதுவான ஜோதிட கணிப்பாக இருக்கிறது. அதாவது, சூரியன்-சந்திரன் இரண்டிலிருந்தும் வெளிச்சம் வராமல், ராகு அல்லது கேது மறைப்பதையே கிரகணம் என்று சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. ராகு மறைக்கும்போது ராகு க்ரஷ்தம் என்றும், கேது மறைக்கும்போது கேது க்ரஷ்தம் என்றும் சாஸ்த்திரங்கள் கூறுகின்றன பொதுவாக கிரகண தோஷம் கெடு பலன்களைத் தான் தரும் என்பார்கள். சூரிய கிரகண தோஷம்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சொல்வதுண்டு.
கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதிப்பு
கிரகணம் நிகழும்பொழுது பொது ஜனங்களை விட, கர்ப்பிணி பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதே அவர்களுக்கு சிறப்பு. அப்படியே வெளியே வந்து வெளி வெளிச்சம் பட்டால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக்கூடிய சில கதிர் வீச்சுகள் தாக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறன. அதன் காரணமாக பிறக்ககூடிய குழந்தைகளுக்கு சில மாறுதல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
என்ன செய்யக்கூடாது
சூரியனின் ஒளி வீச்சு பூமி மீது பதியாமல் தடைபடுகிற பொழுது, இயற்கையில் சில மாற்றங்கள் தானாகவே நிகழ்ந்துவிடுகின்றன. இதில், நல்லதை விட கெடுதலே அதிகம் நடக்கிறது. சூரிய கிரகணத்தை நேரடியாக காணக்கூடாது. சமயல் செய்ய கூடாது. முக்கியமாக சாப்பிடக்கூடாது. தண்ணீர் அருந்தக்கூடாது. நகம் கிள்ளக் கூடாது. எந்த வேலையும் செய்யக்கூடாது.
இந்தியாவில் தெரியாது
ஒவ்வொரு ஆண்டும் சூரியன், சந்திர கிரகணங்கள் என ஏதாவது ஒரு கிரகணம் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது.
இன்றைய தினம் நிகழ உள்ள சூரிய கிரகணத்தில் மற்றொரு சிறப்பம்சமும் இருக்கிறது. சனிக்கிழமை அமாவாசை தினத்தில் நடைபெற உள்ளது. சூரிய கிரகண நிகழ்வு இந்தியாவில் தெரியாது என்றாலும் கூட, வானத்தில் நிகழும் அதிசய நிகழ்வை யூ டியூப் சானல்களில் இந்த கிரகணம் நேரலை செய்யப்பட உள்ளது என்பதால் நாம் இருக்கும் இடத்தில் ஸ்மார்ட்ஃபோன் மூலமாகக் கூட இதை பார்க்கலாம்.
நேரலையில் பார்க்கலாம்
இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.15 மணி முதல் ஞாயிறு அதிகாலை 04.08 மணி வரை பரணி நட்சத்திரத்தில் நிகழ உள்ளது. தற்போதைய தொழில்நுட்பத்தில் சூரிய கிரகணத்தை மிக நெருக்கமான அளவில் பார்க்கும் வசதிகள் உள்ளன. Timeanddate.com என்ற இணையதளம் சூரிய கிரகண நிகழ்வை நேரலையில் ஒளிபரப்பு செய்ய உள்ளது.
சந்திர கிரகணம்
இதேபோன்று மே மாதம் 16ஆம் தேதியன்று முழுமையான சந்திர கிரகண நிகழ்வு நடைபெற உள்ளது. ஆனால், அதுவும் இந்தியாவில் தெரியாது. இது விசாக நட்சத்திரத்தில் கேது கிரஹஸ்த சந்திர கிரகணம் ஆகும்.
இந்தியாவில் தெரியும் கிரகணங்கள்
இதற்கு அடுத்த கட்டமாக வரும் ஐப்பசி மாதம் 8ஆம் தேதியன்று அக்டோபர் 25ஆம் தேதியன்று பகுதியளவு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இது கேது கிரகஸ்த சூரிய கிரகணம் ஆகும். இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தென்படும். அக்டோபர் 25ஆம் தேதி நிகழும் சூரிய கிரகணத்தை இந்திய மக்கள், மாலையில் சூரியன் மறையும் போது சற்று நேரத்திற்கு பார்க்கலாம். அதே போல ஐப்பசி 22ஆம் தேதி நவம்பர் 8,2022 செவ்வாய்கிழமை பரணி நட்சத்திரத்தில் ராகு கிரஹஸ்த முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த கிரகணம் இந்தியாவில் பகுதி கிரகணமாகத் தெரியும் என பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.