வாஸ்து நாள் டிப்ஸ் : உங்கள் வீட்டில் ஈசான்ய மூலை எப்படி இருக்கு...அதிர்ஷ்டம் தேடி வர அதை கவனிங்க
மேடும் பள்ளமும் நம் வாழ்க்கையை உயர்த்தும் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும். வீடு கட்டும் போது சரியான மேடு பள்ளம் பார்த்துக்கட்டினால் அது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.
சென்னை: நமது வீட்டில் வாஸ்து சரியாக இருந்தால் வெற்றியும் தேடி வரும். ஒருவரை கோடீஸ்வரர் ஆக மாற்றுவதே மேடுபள்ளங்கள் என்கின்றன. ஈசான்யம் தாழ்ந்து இருந்தால் வாழ்க்கை உயரமாகும் என்பது வாஸ்து சொல்லும் சூட்சுமம். வாஸ்து தினமான இன்றைய தினம் நம்முடைய வீட்டில் எந்த பக்கம் மேடு பள்ளங்கள் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும் என்றும் சொந்த வீடு கட்ட என்ன செய்ய வேண்டும் என்றும் பார்க்கலாம்.
வாஸ்து என்றால் வாழும் இடம் என்று பொருள். மிகச்சரியான வாஸ்து உள்ள வீட்டில் பிரச்சனைகள் இருக்காது. நிம்மதி மகிழ்ச்சி பெருகும். இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில் நான்காவது வேதமான அதர்வண வேதத்தில் வாஸ்து பற்றி சொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கிப் பல நூல்கள் பழைய காலத்திலேயே எழுதப்பட்டுள்ளன.
மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங்
ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ள பலரும் அடுத்ததாக அதிகம் நம்புவது வாஸ்துதான். வீடு, அலுவலகம் என அனைத்திலும் வாஸ்து பார்க்கின்றனர். வாஸ்து பகவானைப் பற்றி முதலில் அறிந்து கொள்வோம்
வாஸ்து பகவான் யார்
அண்டகாசுரன் என்ற அரக்கன், தன்னை வெற்றிகாண எவரும் இல்லை என்ற மமதையில் சிவபெருமானை போருக்கு அழைத்து போரிட்டான். அப்போது சிவபெருமானுடன் போரிட்ட அசுரனின் நெற்றியில் வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் தோன்றியது. மிகவும் கரிய நிறம் கொண்ட அந்த பூதத்திற்கு அகோரப் பசி ஏற்பட்டது. அதனால் கண்ணில் கண்ட அனைத்தையும் விழுங்கியது. கொடிய அசுரன் அண்டகாசுரனின் உடலையும் விழுங்கியது. தீராத பசியில் இருந்த பூதம் தன் பசியை தீர்த்து வைக்குமாறு சிவபெருமானிடம் வேண்டியது. சிவபெருமான் அந்த பூதத்திற்கு அனைத்தையும் உண்ணும் வரத்தை அளித்தார்.
நன்மை தீமைகள்
இதனால் அந்த பூதத்திற்கு இந்த பூமியையே அளிக்கும் சக்தி உண்டானது. உடனே தேவர்கள் அனைவரும் பிரம்மாவிடம் முறையிட்டனர். பிறகு பிரம்மதேவன் அந்த பூதத்திடம் பூமியில் மக்கள் வீடு கட்டும் போது அவர்கள் படைக்கும் உணவை உண் என்றும், சாஸ்திரப்படி வீடு கட்டவில்லை என்றால் அந்த வீட்டில் வசிப்பவரை வாட்டு என்றும் வரம் அளித்தார். அந்த பூதமே வாஸ்து பகவான் என்றும் வாஸ்துப்படி வீடு கட்டுபவர்களுக்கு நன்மைகளையும், மற்றவர்களுக்கு தீமையையும் அளித்து வருகிறார்.
எட்டு திசை அதிபர்கள்
வாஸ்து புருஷ மண்டலத்தில் எட்டுத் திசைகளுக்கும் அதிபதியான தேவர்கள் அட்டதிக்குப் பாலர்கள் எனப்படுகின்றார்கள். வடக்குத் திசைக்குப் குபேரனும், கிழக்குத் திசைக்கு ஆதித்தனும், தெற்குத் திசைக்கு இயமனும், மேற்குத் திசைக்கு வருணனும் அதிபதிகளெனக் குறிப்பிடப்படுகிறார்கள். வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளுக்கு முறையே வாயு, ஈசன், அக்னி, பித்ரு ஆகியோர் அதிபதிகள். இந்து தத்துவங்களின்படி நிலம் உயிர்ப்புள்ள ஒன்றாகவே கருதப்படுகின்றது. ஒவ்வொரு கட்டிட மனையிலும் உள்ள இந்த உயிர்ப்புச் சக்தியையே வாஸ்து புருஷன் என வாஸ்து சாஸ்திரம் உருவகப்படுத்துகின்றது.
வீடு நில அமைப்பு
நாம் வாங்கும் நிலம் எப்படி இருந்தாலும் அதை சதுரமாகவோ, செவ்வகமான வடிவத்திலோ மாற்ற வேண்டும். ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது. வீட்டுக்கு வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசையில் ஓடை, கால்வாய், ஏரி, ஆறு இருப்பது நல்லது. வீட்டுக்கு தெற்கு, தென்மேற்கு, மேற்கு திசையில் மலை, குன்று இருப்பது நல்லது.
தண்ணீர் தொட்டி
வீடு கட்ட கடைக்கால் தோண்டும் போது முதலில் ஈசானியத்தில் ஆரம்பித்து கடைசியில் தென்மேற்கே தோண்டி முடிக்க வேண்டும். வீடு கட்டுமானப் பணியின் போது முதலில் தென்மேற்கில் ஆரம்பித்து ஈசானியத்தில் முடிக்க வேண்டும். மனையில் வீடு கட்டும் போது வடக்கு, வடகிழக்கு, கிழக்கு பகுதியில் கிணறு அல்லது பம்ப் அமைத்து நீர் எடுத்து பயன்படுத்த வேண்டும். வீட்டின் மத்தியிலும் மற்ற திசைகளில் அமையும் கிணறு, பம்ப் தீய பலன்களைத் தரும்.
வீடு அமைப்பு
வீட்டின் தெற்கு, மேற்கு பகுதிகளில் குறைந்த இடமும், வடக்கு, கிழக்கில் அதிக இடமும் விட்டு கட்ட வேண்டும். வீட்டின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு உயர்ந்தும் வடக்கு, கிழக்கு, வடகிழக்குப் பகுதி தாழ்ந்தும் இருக்க வேண்டும். வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் பால்கனி அமையலாம். மழைநீர் ஈசானிய மூலை வழியாக வெளியேற வேண்டும். ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது. அலமாரிகள் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் அமைவது நல்லது.
சமையல் அறை
பஞ்சபூத ஆற்றல் கிடைக்க ஈசானிய மூலை காலியாக இருக்க வேண்டும். ஈசானிய மூலையில் மாடிப்படி கட்டக்கூடாது. ஈசானிய மூலையில் சமையல் அறை கூடாது. ஈசானிய மூலையில் குப்பைகளைக் கொட்டி வைக்கக் கூடாது. ஈசான்ய மூலையில் விளக்கேற்ற சுபிட்சமுண்டாகும். வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக கதவுகள், ஜன்னல்கள் அமைய வேண்டும். வீட்டிற்கு ஜன்னல், கதவுகள் இரட்டைப்படையில் இருப்பதே நல்லது. வடகிழக்கில் குடிநீர் குழாய் இருத்தல் வேண்டும். ஈசானிய மூலையில் மண் அமைத்து அருகம்புல், துளசி வளர்ப்பது நல்லது. வீட்டின் ஈசான்ய மூலையை சரியாக பயன்படுத்தினாலே விரைவில் கோடீஸ்வரர் ஆகலாம்.
வீட்டில் எங்கே பள்ளம்
ஈசான்யம் உயரமாகவும், கன்னி மூலை பள்ளமாகவும் இருந்தால் பல துயரங்களில் ஆழ்த்தி விடும். சந்ததிகளுக்குக் கண்டங்கள் உண்டாகும். அக்னி மூலை மேடாகவும், வாயு மூலை பள்ளமாகவும் இருந்தால், நல்லவை நடக்கும். பெண்களுக்கு ஆரோக்கியம் ஏற்படும். வாயு மூலை மேடாகவும், அக்னி மூலை பள்ளமாகவும் இருந்தால், அவ்வீட்டில் தீ விபத்து, திருட்டு போன்றவை ஏற்படும். கன்னி மூலை உயரமாகவும்,ஈசான்யம் பள்ளமாகவும் இருந்தால், மிக்க செல்வ வளர்ச்சியும், புகழும் உண்டாகும். ஆரோக்கியம் கூடும். வாஸ்து குறைபாடு உள்ள வீட்டில் வசிப்பவர்கள் தோஷங்கள் நீங்க வாஸ்து பரிகார ஹோமங்கள் செய்யலாம்.
வீடு கட்டும் யோகம் தரும் முருகன்
சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உள்ளது. சொந்த வீடு கட்ட விரும்பினாலும் இடம் வாங்கிப் போட்டு பல வருடங்கள் ஆனாலும் பணம் கையில் இருந்தாலும் வீடு கட்ட முடியாமல் தவித்து வருவார்கள். செவ்வாய்கிழமையான இன்றைய தினம் வாஸ்து நாளும் வந்திருப்பது சிறப்பு. எனவே இன்றைய தினம் வாஸ்து பகவானையும் முருகப்பெருமானையும் வணங்க சொந்த வீடு கட்டும் யோகம் ஏற்படும். ஒன்பது செவ்வாய்க்கிழமைகள், தொடர்ந்து முருகன் கோயிலுக்குச் சென்று, அவரை வணங்குவதால் ஜாதக ரீதியான கோளாறுகள் நிவர்த்தியாகி சொந்த வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம்.