பிள்ளைகள் கொண்டாடும் பிள்ளையார் சதுர்த்தி - களைகட்டிய கணபதி ஊர்வலம்
விநாயகர் சதுர்த்தி விழா கிராமங்களில் களைகட்டியுள்ளது. சிறுவர்கள் அனைவரும் களிமண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை அலங்கரித்து வீடு வீடாக சென்று விநாயகர் பாடல்களை பாடி வழிபாடு நடத்தினார்.
மதுரை: விநாயகர் சதுர்த்தி வந்தாலே கிராமங்களில் சிறுவர்களுக்கு கொண்டாட்டதான். புத்தம் புது களிமண்ணால் செய்த பிள்ளையார்களை அலங்கரித்து எடுத்துக் கொண்டு தட்டில் பிள்ளையார் பாடல்களைப் பாடி உற்சாகத்துடன் வலம் வந்தனர். கணபதி ஜே... ஜே... என்ற பாடல்கள் வீதிகள் தோறும் எதிரொலித்தன.
விநாயகர் சதுர்த்தியை இப்போது கிராமங்களிலும் நகரங்களிலும் பிரம்மாண்டமாகக் கொண்டாடி வருகின்றனர். பிரம்மாண்டமான விநாயகர் சிலைகளை வைத்து அலங்கரித்து மூன்று நாட்கள், ஐந்து நாட்கள் என பூஜை செய்து வித விதமான நைவேத்தியங்களை படைத்து கொண்டாடுவது ஒருவகை.
களிமண், காகிகத்தில் செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகளை வீதி விதியாக எடுத்துக்கொண்டு போய் பாடல்களைப் பாடி பணம் வசூல் செய்து தேங்காய் பழம் வாங்கி அர்ச்சனை செய்வது இன்றைக்கும் கிராமங்களில் நடைபெறுகிறது.
விநாயகர் சதுர்த்தி
பிள்ளையார் சதுர்த்தியான இன்றைய தினம் அதிகாலை முதலே சிறுவர்கள் பிள்ளையாரை எடுத்துக்கொண்டு வந்து தொந்திக்கணபதி ஜே.. ஜே... என்ற பாடல்களை பாடியபடி வலம் வந்தனர். தட்டில் விழும் ஒரு ரூபாய் 2 ரூபாயை சேகரித்து வைத்துக்கொண்டனர்.
களிமண் பிள்ளையார்கள்
களிமண்ணில் செய்யப்பட்ட சின்னச் சின்ன பிள்ளையார்களை எடுத்துக்கொண்டு பாடல்களைப் பாடியபடி பிள்ளைகள் வலம் வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
பிள்ளைகளின் பிள்ளையார்
ஊர்வலமாக சென்று பாடல்கள் பாடி வசூல் செய்த பணத்தில் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்தனர். வீடுகளில் செய்யப்பட்ட கொழுக்கட்டைகள், கடைகளில் வாங்கிய கடலை பொரி, தேங்காய் பழம் வைத்து வழிபட்டனர்.
ஒரே நாளில் விசர்ஜனம்
நகரங்களில் விநாயகரை ஒருவாரம் வரை பூஜை செய்து பின்னர் விசர்ஜனர் செய்கின்றனர். ஆனால் விநாயகர் சதுர்த்தி நாளில் ஊர்வலமாக எடுத்து வந்து வழிபட்ட பின்னர் விசர்ஜனம் செய்வது வழக்கமாக நடைபெறுகிறது. நகரத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதை விட கிராமங்களில் விநாயகர் சதுர்த்தி விழா வித்தியாசமாகவே கொண்டாடப்படுகிறது.