எருமேலி பேட்டை துள்ளல்: சாமி திந்தகத் தோம் தோம் ஐயப்ப திந்தகத் தோம் தோம் - ஆடிய ஐயப்ப பக்தர்கள்
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள எருமேலியில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்ற சந்தனக்கூடு விழாவில் இஸ்லாமியர்களுடன் ஐயப்ப பக்தர்களும் கலந்துகொண்டனர்.
எருமேலி: சபரிமலையில் பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் இன்று நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 50 பேருக்கு மட்டுமே ஒரு குழுவில் அனுமதி. முதலில் அம்பலப்புழ சங்கமும் தொடர்ந்து ஆலங்காட்டு சங்கமும் பேட்டை துள்ளலில் பங்கேற்றனர்.
சபரிமலை வரும் பக்தர்கள் எருமேலியில் உள்ள சாஸ்தா கோவிலில் பேட்டை துள்ளல் வழிபாடு நடத்துவது பாரம்பரிய வழக்கம். அதேபோல அங்குள்ள வாவர் சுவாமி கோவிலில் முதற்கட்டமாக சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட யானையில் செண்டை மேளம் முழங்க வாவர் சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் சாஸ்தா கோவில் நோக்கி சென்றது.
சாஸ்தா கோவிலில் ஊர்வலம் நிறைவடைந்த நிலையில், அங்கு காத்திருந்த ஐயப்ப பக்தர்கள், சந்தனக்கூடு நடத்தி வந்த இஸ்லாமியர்களை ஆரத்தழுவி அன்பை பரிமாறி கொண்டனர். அங்கு செண்டை மேளம் முழங்க வழிபாடும் நடைபெற்றது.
எருமேலியில் மண்டல சீசன் துவக்கம் முதல் பேட்டை துள்ளல் நடந்தாலும் மகரஜோதிக்கு 3 நாட்களுக்கு முன்னதாக நடக்கும் பேட்டை துள்ளல் பிரசித்தி பெற்றது. அம்பலக்குழா, ஆலங்காடு என இரண்டு பக்தர்கள் குழுவினர் நடத்தும் பேட்டை துள்ளலுக்கு பின் இங்கு பேட்டை துள்ளல் இருக்காது. இதையொட்டி இன்று காலை சுமார் 11 மணியளவில் எருமேலியில் பேட்டை துள்ளல் நடைபெற்றது.
ஐயப்ப பக்தர்கள் உடலில் வர்ணங்களைப் பூசிக்கொண்டு சாமி திந்தகத் தோம் தோம் ஐயப்ப திந்தகத் தோம் தோம்
என்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர். முதன் முதலாக சபரிமலை செல்லும் கன்னிசாமிகள் எருமேலி வந்து செல்கின்றனர். எருமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி தினமும் நடந்தாலும், ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கிற்கு முந்தைய 12ஆம் தேதி நடக்கும் அம்பலப்புழா குழுவினரின் பேட்டை துள்ளல் சிறப்பு பெற்றதாகும்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 50 பேருக்கு மட்டுமே ஒரு குழுவில் அனுமதி. முதலில் அம்பலப்புழ சங்கமும் தொடர்ந்து ஆலங்காட்டு சங்கமும் பேட்டை துள்ளலில் பங்கேற்றனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 14ஆம் தேதியன்று மகர விளக்கு பூஜையும் மகர ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது.