சனி பெயர்ச்சி 2022: ஏழரை பிடிச்சிக்கா...பயப்பட வேண்டாம்..சனியை குளிர்விக்க பரிகாரம் இருக்கு
ஏழரைச் சனி உங்களைப் பிடிக்கப் போகிறது என்றாலே அதைக் கேட்பவருக்கு சர்வ அங்கமும் ஆடிப் போய்விடும். பயப்பட வேண்டாம் பரிகாரம் உள்ளது.
சென்னை: ஏழரை சனி பிடித்தவர்களுக்கு எல்லாமே ஏழரையாக இருக்கும். வாழ்க்கையே வெறுத்துப்போகும் அளவிற்கு சோதனைகள் வரும். ஏழரை ஆண்டு காலம் கிடைக்கும் அனுபவங்களை கொண்டு அடுத்த முப்பது ஆண்டு காலம் உங்கள் வாழ்க்கையை திறம்பட நடத்திச் செல்வதற்காகவே சனி உங்களுக்கு ஏழரை சனி காலத்தல் சில படிப்பினைகளைத் தருகிறார்.
சனிபகவான் இப்போது கும்ப ராசியில் அமர்ந்திருப்பதால் மகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியாகும். ஏழரைச் சனி ஒருவருடைய வாழ்வில் முதல்முறை வரும் போது அவர் பள்ளி, கல்லூரிப் பருவத்தில் இருப்பார். சிலருக்கு பிறக்கும் போதே ஏழரை இருக்கும். அவர்களுக்கு முப்பது வயதுகளில் இரண்டாம் சனியாக வரும். அச்சமயத்தில் படிப்பில் கவனம் குறையும். பரீட்சை ஹாலுக்குள் போனதும் படித்தது மறந்து போகும். சோம்பல் வரும். தேவையற்ற பழக்க வழக்கங்கள் வந்து சேரும்.
ஏழரைச்சனி காலத்தில் படிப்பில் கவனம் குறைவது என்பது பிற்பாடு நீங்கள் அதை உணர்ந்து, படிப்பு முடிந்ததும் சேரும் வேலையில் திறம்பட செயல்பட்டு பெயர்வாங்க வேண்டும் என்பதற்காகவே. காதல் தோல்வி என்பது எதிர் பாலினத்தைப் பற்றி நன்கு புரிந்து கொண்டு அந்த அனுபவத்தைக் கொண்டு திருமண வாழ்வை மிகச் சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே.

கூடா நட்பு கேடாய் முடியும்
கூடா நட்பும் அப்படித்தான். பணத் திண்டாட்டம் வருவது எதற்காக என்றால், பிற்பாடு நீங்கள் ஏராளமாய் சம்பாதிக்க போகும் பணத்தை உருப்படியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே சனி, ஏழரைச்சனி காலத்தில் உங்களை திண்டாடச் செய்கிறார். ஏழரைச் சனிக்காலத்தில் முதலில் பனிரெண்டாமிடத்தில் விரயச் சனியாக வரும் சனி 2, 9, 6மிடங்களான தன ஸ்தானத்தையும், பாக்ய ஸ்தானத்தையும், ருண ஸ்தானத்தையும் பார்வையிட்டு பணத்தால் பிரச்சனைகளையும், அலைச்சல்களையும் உண்டு பண்ணுவார்.

விரைய சனி
விரைய சனி கட்டத்தில் சிலருக்கு தொழில் மூலம் நல்ல பணவரவு இருக்கும். ஆனால் அந்தப் பணத்தை சேமிக்க முடியாமல் விரையங்கள் இருக்கும். பின்னாளில் பணக்கஷ்டம் வரும்போது இவ்வளவு பணம் வந்தும் அதை சேர்த்து வைக்காது விட்டுவிட்டோமே என்ற மன அழுத்தம் வரும். அடுத்து ஜென்மச் சனியாக ராசியில் அமர்பவர் ஜாதகரின் மனதை ஆளுவார். மன உளைச்சல் தந்து தடுமாற வைப்பார். துவள வைப்பார். வாய் விட்டு கதற வைப்பார். அதிலும் ஜென்ம நட்சத்திரத்தில் சனி செல்லும் போது மிகவும் கஷ்டப்படுத்துவார். கடுமையான பலன்களைத் தருவார்.

தூக்கம் தொலையும்
ஜென்மச் சனி காலத்தில் ஒருவருக்கு தூக்கம் வராத நிலை இருக்கும். அதிலும் ஜென்ம நட்சத்திரத்தில் சனி செல்லும் காலத்தில் ஒருவர் எதன் மேல் அதிக விருப்பம் அல்லது பாசம் கொண்டிருக்கிறாரோ அந்த நிலை பாதிக்கப்படும். இந்த காலகட்டத்தில்தான் ஒருவருக்கு நெருங்கிய உறவினர் இழப்பு, வேலை போகுதல் அல்லது கிடைக்காமல் இருத்தல், வாழ்வின் ஆதார நிலை குறைதல், நம்பிக்கைத் துரோகம், காதல் தோல்வி, கடுமையான தொழில் நஷ்டம், கடன், ஆரோக்கியக் குறைவு, வீட்டை விட்டு வெளியே போக இயலாத அளவிற்கு மன அழுத்தம், சோம்பல், அதிகமான தூக்கம் போன்றவை நடக்கின்றன.

ஜென்ம சனி காலம்
அதிலும் ஒருவரின் ஜென்ம நட்சத்திர பாதத்திற்கு அருகே சுமார் நான்கு மாதங்கள் சனி செல்லும்போது கடுமையான கெடுபலன்கள் இருக்கும். இந்த காலகட்டத்தில் ஒருவர் செய்யும் எத்தகைய முயற்சியும் வெற்றி பெறாது. ஜென்ம ராசியில் சனி இருக்கும்போது அவரது கொடிய பார்வை ஏழாமிடத்தில் பதியும். ஏழாமிடம் என்பது எதிர்பாலினத்தின் இடம். கணவன் - மனைவி அல்லது காதலர்- காதலி பற்றிய இடம். இந்த நிலையால் ஜென்ம ராசியில் இருக்கும்போது சனி காதலின் இன்னொரு பரிமாணத்தை உணர வைப்பார். அதாவது காதலிப்பவரின் உண்மையான முகத்தைப் புரிய வைப்பார். அடுத்து அவரது பார்வை பத்தாமிடத்திலும் இருக்கும் என்பதால் தொழிலில் அல்லது வேலையில் புதுப்புது பிரச்சனைகளை உருவாக்குவார். அல்லது வேலையை விட்டு நீக்குவார். தொழில் முடக்கம், தொழிலை நடத்த முடியாத நிலை போன்றவை இருக்கும்.

பாத சனி காலம்
ஏழரைச் சனியின் இறுதி நிலையில் பாதச் சனியாக, ராசிக்கு இரண்டாமிடத்தில் அமருபவர் எட்டாமிடத்தையும், நான்காமிடத்தையும் பார்வையிட்டு இதுவரை கொடுத்த அனுபவங்களின் கடுமையை சற்றுக் குறைப்பார்.
எட்டாமிடத்தை தனது பார்வையால் கெடுத்து இதுவரை இருந்து வந்த தலைகுனிவை தடுத்து நிறுத்துவார். மீண்டும் மனிதனாக மாறத் துணை புரிவார். பறிபோன கௌரவத்தையும் அந்தஸ்தையும் ஏழரைச்சனி முடிவில் திரும்பக் கிடைக்கச் செய்வார்.

கெடுதல்கள் இருக்காது
பிறந்த ஜாதக அமைப்பின்படி ஆறு அல்லது எட்டுக்குடையவர்களின் தசா, புக்திகள் நடக்கும்போது ஒருவருக்கு ஏழரைச் சனி, கோட்சாரத்தில் குறுக்கிடுமானால் மிகவும் கடுமையான பலன்கள் நடக்கும். இந்த நிலையில் ஒருவரது வாழ்க்கை தலைகீழாக மாறி அவரை சனி தெருவிற்கு கொண்டு வந்துவிடுவார். அதேநேரத்தில் ஏழரைச்சனி நடக்கும்போது பிறப்பு ஜாதகத்தின்படி யோக தசைகள் எனப்படும் லக்னாதிபதி அல்லது 5 மற்றும் 9 க்குடையவர்களின் தசை நடக்கும்போது சனியின் கடுமை குறைந்து இருக்கும். பெரிய கெடுதல்கள் இருக்காது. வாழ்க்கையைப் பற்றிய சில படிப்பினைகள் மட்டுமே இருக்கும்.

சனியை எப்படி சாந்தப் படுத்தலாம்?
ஏழரைச்சனி முடியும்வரை சனிக்கிழமை இரவில் படுக்கும் போது கைப்பிடி அளவு சனியின் தானியமான எள்ளை தலைக்கு கீழே வைத்து உறங்கி, காலை எழுந்து அந்த எள்ளை புதிதாக வடித்த சாதத்துடன் கலந்து சனியின் வாகனமான காகத்திற்கு அன்னமிடலாம். சனியை திருப்திப்படுத்த மாற்றுத் திறனாளிகள், பார்வை இழந்தவர்கள், நடக்க இயலாதவர்கள் வயதானவர், ஆதரவற்றவர்களுக்கு உதவலாம். காலில்லாதவர்களுக்கு ஊன்றுகோல் தானம் தருவது நல்ல பரிகாரம்.

பெருமாளுக்கு விளக்கேற்றலாம்
சைவர்கள் சனிக்கிழமைகளில் காலபைரவருக்கு வெள்ளைப் புதுத்துணியில் மிளகை முடிச்சிட்டு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். வைணவர்கள் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி தொல்லைகளில் இருந்து விடுவிக்கும்படி மனமுருக வேண்டி வழிபடலாம். பெருமாளுக்கு விளக்கு ஏற்றி வழிபடலாம்.

சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம்
ஏழரைச் சனி என்பது அனுபவங்களின் தொகுப்பே. அக்காலத்தில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்று நீங்கள் தெரிந்து கொள்ளும்படி உங்கள் கண்களை திறக்கிறார் சனி. அந்த அனுபவங்களை ஏற்றுக் கொண்டு, அதன் துணை கொண்டு அதன்பின் வரும் வாழ்க்கையை ஜெயிப்பதற்கே அதனை சனி தருகிறார். திருநள்ளாறு, குச்சானுர், சென்னை பொழிச்சலூரில் உள்ள அகத்தீஸ்வரர் திருக்கோவில் போன்ற சனியின் திருத்தலங்களுக்குச் சென்று சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யலாம்.












Click it and Unblock the Notifications