சனி பெயர்ச்சி: 30ஆண்டுகளுக்குப் பின் கும்பத்தில் சூரியனுடன் கூட்டணி..அஸ்தங்க சனியால் திடீர் மாற்றம்
கும்பத்தில் இருக்கும் சனிக்கு அருகில் வரும் சூரியனால், சனி ஜனவரி 31ம் தேதி முதல் மார்ச் 5 வரை அஸ்தங்க நிலை அடைவார்.
சென்னை: கும்ப ராசியில் சூரியன் சனி கூட்டணி 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ உள்ளது. இந்த கூட்டணி சேரும் அதே நேரத்தில் சனிபகவான் அஸ்தங்கமடைகிறார். சனி பெயர்ச்சி நிகழ்ந்த சில நாட்களிலேயே சனி அஸ்தங்கமும் நிகழ்கிறது. சூரியன் சனி கூட்டணியின் நேரடி பார்வை சிம்ம ராசிக்கு கிடைக்கிறது. இந்த கிரக மாற்றங்களினால் அரசியல் உலகில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 2023ஆம் ஆண்டில் யாருடைய வாழ்க்கையில் திடீர் மாற்றம் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.
சூரியனுக்கு அருகில் வரும் கிரகங்கள் அஸ்தங்கம் அடைகிறது என்பது ஜோதிட விதி. செவ்வாய் சூரியனுக்கு 17 டிகிரி முன் பின் சஞ்சாரங்களில் அஸ்தங்கம் அடைகிறது. குரு 11டிகிரி இடைவெளியில் சூரியனுக்கு முன் பின் சஞ்சாரங்களில் அஸ்தங்கம் அடைகிறது. சனி 15டிகிரியில் சூரியனுக்கு முன்பின் சஞ்சாரங்களில் அஸ்தங்கம் அடைகிறது. புதன் நேர்கதியில் 14டிகிரி வித்தியாசத்திலும்,வக்ர கதியில் 12டிகிரி வித்தியாசத்திலும் சூரியனுக்கு முன்பின் ராசிகளில் அஸ்தங்கம் அடைவார். சுக்கிரன் நேர்கதியில் 10டிகிரி முன்பின்னும், வக்கிர கதியில் 8 டிகிரியில் சூரியனுக்கு முன்பின் சஞ்சாரங்களில் அஸ்தங்கம் அடைவார்.

சுக்கிரனும் புதனும் சூரியனுடனேயே பயணிப்பதால் இவர்களுக்கு இந்த தோஷம் கிடையாது. ராகு கேதுக்கள் அனைத்து கிரகங்களை விட பலமானது எனவே அனைத்து கிரகங்களையும் சூரியனையும் சேர்த்து கிரகணம் அடைய செய்யும் இவற்றிற்கு அருகில் சென்றால் சந்திரனை பொறுத்த அளவில் சூரியனோடு சேர்ந்தால் அது அமாவாசை என்கிற ரீதியில் சென்று விடும் அப்படி எனில் இந்த அஸ்தங்கம் என்பது சனி, குரு, செவ்வாய் இந்த மூன்று கிரகங்களுக்கு மட்டுமே முழுவீச்சில் செயல்படும்.
சூரியனோடு மிக நெருங்கி அஸ்தங்கம் ஆன கிரகத்தின் பலனை சூரியன் தன் திசையில் செய்வார் என்பதே ஆனாலும் அஸ்தங்கம் அடைந்த கிரகம் தன்னுடைய காராக பாதிப்பை அடையும். சூரியனுக்கு ஒரு குறிப்பிட்ட டிகிரியில் சனி அமரும் போது அவர் அஸ்தங்க நிலையை அடைவார். அவர் சனியை கடந்து செல்லும் போது அந்த குறிப்பிட்ட டிகிரியிலிருந்து விலகும் போது அஸ்தங்க நிலை முடியும். அந்த வகையில் கும்பத்தில் இருக்கும் சனிக்கு அருகில் வரும் சூரியனால், சனி ஜனவரி 31ம் தேதி முதல் மார்ச் 5 வரை அஸ்தங்க நிலையில் பயணம் செய்வதால் இந்த கால கட்டத்தில் சனிபகவானால் பெரிய அளவில் கெடுபலன்கள் எதுவும் ஏற்படாது.
ஜோதிட ரீதியாக சனி மற்றும் சூரியன் ஆகிய இரண்டு கிரகங்களும் பகை கிரகங்கள். புராணங்களின்படி சூரியனின் மகன் தான் சனி. சூரியன் பிரபஞ்சத்திற்கு ஒளி அளிக்கும் ஒரு கிரகம், ஆனால் சனி கருமை நிறத்தில் இருளை குறிக்கும் கிரகம். எனவே இந்த இரண்டு எதிர்மறை குணங்கள் கொண்ட கிரகங்கள் ஒரே ராசியில் சஞ்சரிக்கும்போது ஏற்கனவே ஒளிப்பொருந்திய சூரியனால் சனி அஸ்தங்கதம் ஆகி, இந்த இரண்டின் காரகத்துவமும் குறிப்பிட்ட அளவுக்கு பாதிக்கப்படும். அந்த அடிப்படையில் தந்தை-மகன் உறவில் சிக்கல்கள் ஏற்படும்.
இன்னும் சில நாட்களில் அதாவது பிப்ரவரி 13ஆம் தேதியன்று கும்ப ராசிக்கு சூரியன் இடப்பெயர்ச்சியாகி சனியுடன் கூட்டணி சேரப்போகிறார். சூரியனும் சனியும் எந்த ராசியில், அல்லது எந்த ராசி கட்டத்தில் கூட்டாக இணைந்து சஞ்சரிக்கின்றன என்பதன் அடிப்படையில், அதன் காரகத்துவம் பாதிக்கப்படும். தற்பொழுது, கும்ப ராசியில் சனி அஸ்தங்கமாக இருப்பதால், கும்ப ராசி பதினோராவது வீடு எனவே தொழில்துறையில் பிரச்சனைகள் ஏற்படும். அதோடு மூத்த சகோதரர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கூடவே அரசியல் தலைவர்கள் கவனமாக செயல்பட வேண்டும்.
சனி அஸ்தங்கமடைவதால் இந்த சனிபெயர்ச்சியால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த சில ராசிக்காரர்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம். கடக ராசியில் பிறந்தவர்களுக்கு அஷ்டம சனியின் தாக்கம் சற்று குறையும். சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் தாமதங்கள் நீங்கி, இந்த கால கட்டத்தில் நிம்மதியாக உணர்வீர்கள். புதிதாக ஏதேனும் செய்ய வேண்டும் என்றால், மார்ச் 5 ஆம் தேதிக்குள் தொடங்கலாம். இருப்பினும், குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளில் கணவன் மனைவி தவிர வேறு யாரையும் தலையிட அனுமதிக்க வேண்டாம்.
விருச்சிக ராசிக்காரர்களே..உங்களுக்கு அர்த்தாஷ்டம சனியால் ஏற்படும் பாதிப்பு சற்றே குறையும், அம்மாவின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் புது வீடு வாங்கும் யோகம் வரும் வண்டி, வாகனம் வாங்கலாம். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு நல்ல யோகமான கால கட்டமாகும்.
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு ஏழரை சனியில் பாத சனி காலமாகும். நிதி நிலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். ஏழரை சனியின் கடைசி கால கட்டத்தில் இருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு அஸ்தங்கமாகும் சனியால் கூடுதல் பலன்கள் கிடைக்கப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் திடீர் புரமோசன் கிடைக்கும். பண வருமானம் அதிகரிக்கும் நிதி நிலைமை மேம்படும்.
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு ஜென்ம சனியால் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும் என்றாலும் சுப விரைய செலவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் கவனமாக இருப்பது அவசியம். பணத்தால் எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்து இருப்பீர்கள் சில காலம் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு ஏழரை சனியால் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். சனி அஸ்தங்கமாவதால் வரும் மார்ச் மாதம் வரைக்கும் பண விரயம் குறையும் நிதி நிலைமை மேம்படும் பண வருமானம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நோய், கடன், வழக்கு பிரச்சினைகள் நீங்கப்போகிறது. மன மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications