சிவராஜயோகம், குருச்சந்திர யோகம் - அரசாளும் யோகங்கள் யாருக்கு இருக்கும்
சிவராஜ யோகம் கொண்டவர்கள் சிவ வழிபாடு செய்வதன் மூலம் பல சிறப்புகளைப் பெறமுடியும். சிவராஜ யோகம் அரசு பதவியைத் தேடித்தரும் அதிகாரம் செய்ய வைக்கும்.
சென்னை: சிவராஜயோகம் அமையப்பெற்றவர்கள் அதிகாரம் செய்யும் பதவியில் அமரக்கூடிய வாய்ப்பு தேடி வரும். அரசாங்கத்தில் உயர் பதவி தேடி வரும். அரசியலில் சிறப்பான பதவியைத் தரும். அமைச்சர் முதல் பிரதமர் வரை பதவி வகிக்கும் வாய்ப்பையும் பெற வாய்ப்புள்ளதாக ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜாதகத்தில் குரு சந்திர யோகம் உள்ளவர்களுக்கு புகழும் செல்வாக்கும் தேடி வரும்.
ஒருவரின் ஜாதகத்தில் யோக அமைப்புகள் இருந்தால் அவர்களின் வாழ்க்கையில் செழிப்பு தேடி வரும். குருபகவான் பலவித யோகங்களையும் அதிர்ஷ்டத்தையும் ஒருவரின் வாழ்க்கையில் கொடுப்பார். குரு பார்வை கோடி நன்மையைக் கொடுக்கும். குருவின் பார்வை சூரியன் மீது விழும் போதும் சூரியன் பார்வை குருவின் மீது நேரடியாக விழும் போதும் சிவராஜயோகம் என்னும் அமைப்பு கிடைக்கிறது.
இன்றைய தினம் சிம்ம ராசியில் சூரியன், சந்திரன் சேர்ந்திருக்க கும்ப ராசியில் உள்ள குருவின் பார்வை கிடைக்கிறது. அதே போல சூரியன், சந்திரன் பார்வை கும்ப ராசியில் உள்ள குருவின் மீது விழுகிறது. இது குரு சந்திர யோகம், சிவ ராஜயோகம் என்றும் அமைப்பை கொடுக்கிறது. இன்றைய தினத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அரச பதவியில் அமரக்கூடிய வாய்ப்பு தேடி வரும் அமைப்பு உள்ளது.
பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டு அதிபதி சூரியன் மற்றும் பூர்வ புண்ணிய காரகன் குரு ஆகியோரது சுப அம்சங்களை பொறுத்து, மேற்கண்ட பதவிகள் அமையும். ஒருவரது சுய ஜாதகத்தில் ஐந்தாம் வீடு, அதன் அதிபதி மற்றும் குரு ஆகியவை பலம் பெற்றிருக்கும் நிலையில் சிவராஜ யோகம் அளிக்கும் பூர்வ புண்ணிய பலனை அனுபவிப்பதற்காக அவரது பிறப்பு ஏற்பட்டதாக ஜோதிட ரீதியாக கருத்து உள்ளது.
சூரியனின் கதிர்வீச்சை திரும்பவும், அவருக்கே பிரதிபலிப்பதன் மூலம் சூரியனை புனிதப்படுத்தி, உச்ச பதவியை அளிக்கும் தன்மையை குறிப்பிடும் சுய ஜாதக அமைப்பாக சிவராஜ யோகம் குறிப்பிடப்படுகிறது. இந்த யோக அமைப்பில் குருவும், சூரியனும் பலவீனம், பகை, நீசம் போன்ற நிலைகளை அடையாமலும், பாவக்கிரகங்களின் தொடர்புகள் ஏதுவுமில்லாமல், வலுவாக இருப்பதன் அடிப்படையில், ஒருவருக்கு அரசாங்கத்தில் சாதாரண அதிகாரி முதல் உயர் அதிகாரி வரையிலும், அரசியலில் சிறப்பான பதவியைத் தரும். அமைச்சர் முதல் பிரதமர் வரை பதவி வகிக்கும் வாய்ப்பையும் பெற வாய்ப்புள்ளதாக ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவராஜ யோகம் கொண்டவர்கள் சிவ வழிபாடு செய்வதன் மூலம் பல சிறப்புகளைப் பெறமுடியும். செவ்வாய் தற்போது கன்னி ராசியில் உச்சம் பெற்ற புதனுடன் இணைந்துள்ளார். குரு கும்ப ராசியிலும், சூரியன் சிம்ம ராசியிலும் அமர்ந்து ஒருவருக்கொருவர் நேரடியாக பார்வையிடுவதால் இந்த யோக அமைப்பு தேடி வருகிறது.
குரு சந்திர யோகம்
குரு சந்திர யோக அமைப்புள்ள ஜாதகர்களுக்கு புகழ், செல்வம், செல்வாக்கு தேடி வரும். ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தில் குரு சேர்ந்திருந்தாலோ அல்லது குரு இருக்கக்கூடிய இடத்திலிருந்து குருவின் பார்வை விழக்கூடிய 5, 7, 9 ஆகிய இடங்களில் சந்திரன் இருந்தாலும் இந்த குரு சந்திர யோகம் உண்டாகும். இந்த யோகத்தால் மக்கள் செல்வாக்கு கிடைக்கும்.
குருசந்திரயோகம் உள்ள ஜாதகரின் வாழ்க்கை சீரும் சிறப்பாக இருக்கும். இவர்களின் வாழ்க்கையில் பெரிய துன்பங்கள், துயரங்கள் ஏற்படாது. கல்வியில் சிறந்தவர்களாக இவர்கள் விளங்குவதோடு, ஒழுக்கப் பண்புகளும் நிறைந்திருக்கும். இவர்கள் மற்றவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்வதோடு, இவர்கள் வாழ்வில் மன நிம்மதி நிறைந்ததாகவும், இவர்களுக்குப் பிடித்த வகையில் வாழ்க்கை அமையும். திறமைசாலிகளான இந்த யோகம் பெற்றவர்கள் சட்ட நுணுக்க முறைகளை நன்றாக தெரிந்து வைத்திருப்பார்கள். செய்யும் தொழிலில் வல்லுனர்களாக இருப்பார்கள்.