ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பவித்ரோத்சவம்: நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பவித்ரோத்சவத்தை முன்னிட்டு நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார்.
ஸ்ரீரங்கம்: ரங்கநாதர் ஆலயத்தில் பவித்ரோத்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார். தாயார் சன்னதியில் திருவந்திக காப்பு கண்டருளிய நம்பெருமாள். உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு இரவு 9 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைந்தார்.
பவித்ரோத்சவம் என்பது புனிதப்படுத்துதல் என்ற பொருளில் வரும் பெருமாளையே பவித்ரன் என அழைப்பார்கள். ஒவ்வொரு திருக்கோயில்களும் ஆண்டுதோறும் ஆவணி அல்லது புரட்டாசி மாதங்களில் பவித்ரோத்ஸவம் 3 அல்லது 5 அல்லது 7 அல்லது 9 நாட்களுக்குக் கொண்டாடப்படும். எம்பெருமானுக்குத் திருவாராதனம் சமர்பிக்கப்படும் போதும் மற்றைய திருவிழா காலங்களில் மந்த்ர லோபம் ஏற்படக்கூடும். அதனால் எம்பெருமானுடைய ஸாந்நித்யம் குறைய வாய்ப்பு உண்டு. அவ்வாறு ஏற்படும் குறைகளைப் போக்குவதற்காகப் பவித்ரோத்சவம் கொண்டாடப்படுகிறது.

கோயிலுக்குப் பலதரப்பட்ட மக்களும் வருவார்கள். அதே போல் பூஜை செய்யும்போதும் சில சமயங்களில் தவறுகள் நடைபெறலாம் மந்திர உச்சரிப்புக்களிலும் தவறுகள் நேரிடலாம். இவைகளினால் ஏற்படும் தோஷங்களை நீக்கிப் பரிசுத்தம் அடையும் வண்ணம் செய்யப்படுவதே பவித்ரோத்சவம் ஆகும்.
ஆலயங்கள் தொடர்பான பிராயச்சித்தம் என்றும் சொல்லலாம். இந்த உற்சவத்தில் உற்சவ விக்கிரகங்கள் மட்டுமில்லாமல் மூலவருக்கும் சேர்த்தே விசேஷமான பவித்ர மாலைகள் அணிவிக்கப்படும். திருவாராதனம் சமர்ப்பிப்பதில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் மந்திர லோபம் ஆகியவற்றை நீக்குவதற்காகப் பவித்ரோத்சவம் கொண்டாடப் படுகிறது.

கோயிலுக்கு வரும் மகான்கள் துதிக்கும் துதிகளால் இறை சக்தி, புனிதம் ஆகியவை பெருகும். அதே சமயம் அங்கே வரும் பக்தர்களின் குணங்கள், மாறுபட்ட நடத்தைகள், அவர்களால் ஏற்படும் தீட்டுக்கள் போன்றவைகளால் மூர்த்திகளின் இறை அம்சங்களில் மாறுபாடு ஏற்படும். அவைகளை சரி செய்து மூர்த்திகளின் சாந்நித்யம் குறையாமல் இருக்க பவித்ரோத்ஸவம் கொண்டாடப் படுகிறது.
ஸ்ரீரங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி புரட்டாசி மாதத்தில் பவித்ரோற்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பவித்ரோத்சவம் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. இதனை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலை வேளையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்தின் மேல்புறம் உள்ள பவித்ரோத்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
பவித்ரோத்சவத்தின் 7ஆம் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசல் அருகே உள்ள நாலுகால் மண்டபத்திற்கு இரவு 7.30 மணியளவில் வந்தடைந்தார். அங்கிருந்தவாறு உபய நாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். அதன் பின்னர் தாயார் சன்னதியில் திருவந்திக காப்பு கண்டருளினார். பின்னர் அங்கிருந்து உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு இரவு 9 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

விழாவின் நிறைவு நாளான இன்று காலை 9.30 மணியளவில் நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார். நாளைய தினம் பெரிய பெருமாள் ரங்கநாதர் திருமேனிக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலக்காப்பிடப்படும்.
கள்ளழகர் கோவிலில் திருப்பவுத்திர திருவிழா
கள்ளழகர் கோவிலில் திருப்பவுத்திர திருவிழா நடந்தது. இதில் 108 கலசங்களில் நூபுர கங்கை தீர்த்தத்தில் சாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்ற பெருமை உடையது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் நடைபெறும் திருப்பவுத்திர திருவிழா தனி சிறப்புடையதாகும். இந்த திருவிழா கடந்த 18ஆம் தேதி அங்குள்ள சுந்தரபாண்டியன் கொறடு மண்டப வளாகத்தில் மேளதாளம் முழங்க தொடங்கியது.
இங்குள்ள மண்டபத்தில் உற்சவர் கள்ளழகர் சுந்தரராச பெருமாள் எழுந்தருளினார். அப்போது கீழே தானியங்கள் விரிக்கப்பட்டு அதன்மீது அபூர்வ மூலிகைகள் அடங்கிய 108 கலசங்கள் தனித்தனியே வைக்கப் பட்டது. அதில் தேங்காய், வாழை பழங்கள், மாவிலைகள், பூ மாலைகள் இணைக்கப்பட்டு இருந்தன.

தொடர்ந்து 135 அபூர்வ மூலிகைகள், திரவியங்கள், அழகர் மலை உச்சியில் பிரத்தியேகமாக கொண்டு வரப்பட்ட நூபுர கங்கை தீர்த்தத்துடன் சேர்க்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அப்போது திருப்பட்டு நூல்களால் ஆன வண்ணப்பட்டு நூல் மாலைகள் வைத்து பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சர விளக்கு பூஜைகளும், திருமஞ்சனமும், அலங்காரம், அபிஷேகங்கள் நடந்தது. அதன்பின்னர் பூஜையில் வைக்கப்பட்டு இருந்த பட்டு நூல் மாலைகள் மூலவர் சுவாமி, தேவியர்களுக்கும், உற்சவர் கள்ளழகர், தேவியர்களுக்கும் மற்றும் சுந்தரவல்லி தாயார், ஆண்டாள், சுவாமிகளுக்கும் அணிவிக்கப்பட்டது. அதன் பின்னர் தினமும் விசேஷ பூஜைகள் நடைபெற்றது. அரசு வழிகாட்டுதல்படி நடைபெற்ற இந்த விழாவில் பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதே போல கும்பகோணம் சாரங்கபாணி கோவில் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள மிக முக்கிய ஆலயங்களில் பவித்ரோத்சவம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications