திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக பிரமோற்சவ விழா.. 9ல் தேரோட்டம்
திருநள்ளாறில் உலக புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடைபெற்றது.
திருநள்ளாறு: சனிபகவானுக்கு தனி சன்னதியுடன் கூடிய திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பிரம்மேற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.
காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலக புகழ்மிக்க தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது.
சனி பகவான் நவகிரகங்களுக்குள் எல்லா கோவிலிலும் இருக்கும் என்றாலும் திருநள்ளாறுக்கு எப்போதும் ஒரு தனி இடமுண்டு. சனியால் ஏற்படும் தோஷங்கள் நீங்க திருநள்ளாறுக்குச் சென்று பரிகாரங்கள் செய்வார்கள். திருநள்ளாறுக்குப் போனால் அங்குள்ள நள தீர்த்தத்தில் நீராடி, கரையில் இருக்கும் நள விநாயகரையும் பைரவரையும் வழிபட வேண்டும்.

கோயிலில் உள்ள கங்காதீர்த்த கிணறை தரிசிப்பது மிக முக்கியம். பின்பு கோபுர வாசலுக்கு வநது ராஜ கோபுரத்தைத் தரிசிக்க வேண்டும்.
அடுத்ததாக, பக்தியோடு முதல் படிக்கட்டை வணங்கிக் கொண்டே, முதல் பிரகாரத்திற்குள் நுழைய வேண்டும். அங்கு சுவர்களில் நள சரித்திரங்கள் முழுவதும் வரையப்பட்டிருக்கும். அதை பார்த்துக் கொண்டே காளத்திநாதரை வழிபட வேண்டும்.
இங்கு இருக்கின்ற இறைவனைப் பார்த்த பிறகு, சனி பகவானைச் சென்று வழிபட்டால் தான் சனிதோஷம் முற்றிலும் நீங்கப் பெறுவீர்கள். சுவாமி சன்னதிக்குள் நுழைந்ததும் மூலவரான தர்ப்பாரண்யேஸ்வரரை மனமுருக வணங்குங்கள். பின்பு தியானவிடங்ககரர் சன்னதிக்கு சென்று அங்குள்ள மரகத லிங்கத்தை மறக்காமல் வழிபடுங்கள்.
அடுத்ததாக அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு சென்று வழிபட்ட பின் கட்டை கோபுர வாசல் என்று ஒரு வாயில் உண்டு. அதன்வழியே வர வேண்டும். அங்கு வந்தபின் அம்பாள் பிராணேஸ்வரி ஆலயம் இருக்கும். அங்கு சென்று வணங்கிக் கொள்ள வேண்டும்.
சனிபகவானை வழிபட சனியால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும். கோவிலில் எப்போதுமே கூட்டம் அதிகமாக இருப்பதால் சனிபகவானை வழிபடவே மக்கள் அனைவரும் விரும்புகின்றனர்.
சனிபகவானுக்கு தனி சன்னதியுடன் கூடிய இக்கோயிலில், ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கொடிமரத்து விநாயகர், கொடி மரத்துக்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைக் காட்டப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்து வேத மந்திரங்கள் முழங்க பிரகார உலாவாக ரிஷபக் கொடி எடுத்து வரப்பட்டு கொடி மரத்தில் ஏற்றப்பட்டு மகா தீபாராதனைக் காட்டப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடந்தது.
விழாவில் கோவில் அறக்கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமி, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் வருகிற 7ஆம் தேதி பஞ்சமூர்த்திகள் வாகனரூடராய் சகோபுர வீதியுலா, 9ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 10ஆம தேதி சனீஸ்வரர் தங்ககாக வாகனத்தில் சகோபுர வீதியுலா, 11ஆம் தேதி தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications