கெட்டி மேளம் கொட்ட..குரு பார்வை கிடைக்க வேண்டுமா? வியாழக்கிழமை இப்படி விரதம் இருங்க
ஒரு வருடத்தில் தொடர்ந்து 16 வளர்பிறை வியாழக்கிழமைகளில் இந்த வியாழ விரதம் மேற்கொள்வது மிகுந்த நன்மைகளை தரும். 3 ஆண்டு காலம் இந்த விரதத்தை சரியான படி அனுஷ்டிப்பவர்களுக்கு குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்
சென்னை: வியாழக்கிழமை பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. ஒரு வருடத்தில் தொடர்ந்து 16 வளர்பிறை வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது மிகுந்த நன்மைகளை தரும்.
வியாழக்கிழமை விரதம் இருந்தால் திருமண தடை நீங்கும் என்ற ஐதீகம் உண்டு. எப்படி விரதம் இருக்க வேண்டும்? என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
கல்யாணம் ஆகவில்லையே என்று 90 கிட்ஸ் பலரும் இன்றைக்கும் ஏங்கித் தவிக்கின்றனர். கல்யாண தடை எப்போது நீங்கும்.. ஜோடியாக வலம் வரலாம் என்று கோவில் கோவிலாக ஏறி இறங்கி பரிகாரம் செய்கின்றனர். திருமண தடை நீங்க குரு பகவானின் அருள் அவசியம்.
சுக்ல பட்சம் எனப்படும் வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் விரதத்தை மேற்கொள்ளலாம். இந்த விரதத்தை சரியான படி கடைபிடித்தால் குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

குரு பகவான் விரதம்
ஆங்கில மாதத்தில் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், புனர்பூசம். பூரட்டாதி, விசாகம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், தனுசு, மீன ராசிகளில் பிறந்தவர்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் பிறந்தவர்களும் குரு பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் வியாழக்கிழமைகளில் குரு பகவான் விரதம் இருப்பது நல்லது.

வியாழக்கிழமை விரதம்
வியாழக்கிழமை விரத தினத்தன்று அதிகாலையிலே எழுந்து குளித்து முடித்து விட வேண்டும். பிறகு மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொண்டு, அருகிலுள்ள கோயிலின் நவகிரக சந்நிதிக்கு சென்று குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்கள் சாற்றி, சந்தனம், மஞ்சள் போன்றவற்றை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பின்பு குங்குமப்பூ கலந்த பசும்பாலை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி இனிப்புகள் நைவேத்தியம் செய்து வழிபடுவது நல்லது.

விரத முறை
அன்றைய தினம் குரு பகவானுக்குரிய மந்திரங்களைப் படிப்பது நல்லது. விரதம் இருக்கும் நாள் முழுவதும் சாப்பிடாமல் இருப்பது விரதத்தின் முழுமையான பலன்களை தரும். மாலையில் மஞ்சள் நிற இனிப்புகள், ஆடைகள் போன்றவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமளிப்பது நல்லது. இரவில் உப்பு சேர்க்காத உணவை சமைத்து சாப்பிட்டு வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்யலாம்.

திருமண தடை நீங்கும்
இந்த வியாழக்கிழமை விரதத்தை குரு தோஷம் இருப்பவர்கள் முறையாக அனுஷ்டித்தால் அவை நீங்கும். வாழ்வில் பல யோகங்கள் ஏற்படும். திருமண தடைகள் நீங்கும் கல்யாண யோகம் கைகூடி வரும். குழந்தை இல்லாதவர்களுக்கு தடை நீங்கி புத்திரபாக்கியம் கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் சரியான வருமானம் இல்லாதவர்கள், குடும்ப பொருளாதார நிலை சிறப்பாக இல்லாதவர்கள் இந்த விரதம் மேற்கொள்வதால் குரு பகவானின் அருள் கிடைக்கப்பெற்று தொழில், வியாபாரங்களில் சிறந்து செல்வ வளம் பெறுவர்.

குரு பகவான் அருள் கிடைக்க
ஜாதகத்தில் குரு பகவானின் நிலை சரியில்லாமல் இருப்பவர்கள், குரு பகவான் அருளால் சிறந்த பலன்களை பெறுவதற்கு திருவாரூர் மாவட்டத்தில் குரு பகவானின் தலமான ஆலங்குடி குரு பகவான் கோவிலுக்கு குரு பெயர்ச்சி தினத்தில் குரு பகவானுக்கு செய்யப்படும் பூஜைகள், யாகங்களில் கலந்து கொண்டு குரு பகவானை வழிபடுவது நல்லது. குரு பகவானின் அம்சம் கொண்ட திருச்செந்தூர் முருகப்பெருமானையும் வழிபடலாம். குரு பகவானின் வாகனம் யானை ஆகும். உங்கள் அருகாமையிலுள்ள கோவிலில் யானைகள் இருக்கும் பட்சத்தில், வியாழக்கிழமைகள் தோறும் யானைகளுக்கு பழங்களை உணவாக கொடுப்பது குரு பகவானின் தோஷத்தை போக்கி நன்மையைத் தரும்.

ராகவேந்திரர் விரதம்
மகான் ஸ்ரீ ராகவேந்திரர் விரதத்துக்கு உகந்த நாள் வியாழக்கிழமை. ஆறு வியாழக்கிழமைகள் தொடர்ந்து நம்பிக்கையுடன் விரதம் இருந்து வேண்டினால் நினைத்த காரியம் கைகூடும். விரதம் தொடங்கும் முதல் வியாழக்கிழமை காலையில் குளித்து, தூய ஆடை அணிந்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பூஜைக்கு முன் மஞ்சள் தூளினால் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து வணங்க வேண்டும். நிவேத்தியமாக மங்களப் பொருட்களான வெற்றிலை, பாக்கு, பழம்,தேங்காய் முதலியவைகளை படத்தின் முன் வைத்த பின் பூஜையைத் தொடங்க வேண்டும்.












Click it and Unblock the Notifications