ரசாயன ஆயுதங்களை சிரியா ஒப்படைத்தால் தாக்குதல் கைவிடப்படும்: ஒபாமா
இது தொடர்பாக ஒபாமா கூறுகையில், நாட்டின் தேசிய பாதுகாப்பைக் கருதிதான் சிரியா மீது ராணுவத் தாக்குதல் நடத்தத் தீர்மானித்தோம். ஆனால் ராணுவ நடவடிக்கை இல்லாமலேயே தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்படுமானால் அதை முதலில் வரவேற்போம்.
ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளில் நாம் இவ்வளவு மும்முரமாக இறங்கியிருக்காவிட்டால், சர்வதேச கட்டுப்பாட்டுக்குள் சிரியாவின் ரசாயன ஆயுதங்களைக் கொண்டுவரும் பேச்சே எழுந்திருக்காது.
சிரியா தமது ரசாயன ஆயுதங்களை அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிட்டால் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்துவது கைவிடப்படும். மேலும் சிரியா மீதான தாக்குதலுக்கு ஒப்புதல் கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இருவார காலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்துக் கணிப்பு எதிரொலியா?
ஒபாமாவின் இந்த திடீர் அறிவிப்புக்கு அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளே காரணம் என்று கூறப்படுகிறது. சிரியா மீதான தாக்குதல் தொடர்பாக சி.என்.என்/ஓ.ஆர்.சி நடத்திய கருத்துக் கணிப்பில், ஒபாமாவுக்கு 40% மக்களே ஆதரவு தெரிவித்துள்ளனர். அவரது வெளியுறவுக் கொள்கை குறித்த முடிவுக்கு இவ்வளவு குறைவான மக்கள் ஆதரவு கிடைத்திருப்பதாலேயே அவர் தாக்குதல் திட்டத்தைக் கைவிட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்தியா ஆதரவு
இதனிடையே சிரியாவிடமுள்ள ரசாயன ஆயுதங்களை சர்வதேசக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ரஷ்யாவின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று இந்தியாவும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ரசாயன ஆயுதங்கள் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. அவற்றை ஒழிப்பதற்கு முன் அவற்றை பாதுகாப்பான இடத்தில் சேர்ப்பது முக்கியம். இதற்கு வழி செய்யும் எந்த ஒரு நடவடிக்கையையும் இந்தியா மகிழ்ச்சியுடன் வரவேற்கும். சிரியாவின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதை இந்தியா ஆதரிக்கவில்லை. சிரியா விவகாரத்தில் அரசியல் தீர்வை மட்டுமே இந்தியா ஆதரிக்கிறது என்றார்.