பாலக்காடு ரயில் கோட்டம் மீண்டும் பிரிப்பு
பாலக்காடு: பாலக்காடு ரயில்வே கோட்டத்தை மீண்டும் பிரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் மங்களாபுரத்தை தலைமையிடமாகக் கொண்ட புதிய கோட்டத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழக பகுதிகளை உள்ளடக்கிய பாலக்காடு ரயில்வே கோட்டத்திலிருந்து இந்தப் பகுதிகளைப் பிரித்து புதிய சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டது.
இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக போராட்டங்களும் நடந்தன. இறுதியில் பொள்ளாச்சியை கேரளாவுக்குக் கொடுத்து விட்டு திட்டமிட்டபடி சேலம் கோட்டம் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், பாலக்காடு ரயில்வே கோட்டம் மீண்டும் பிரிக்கப்படவுள்ளது.
கேரளாவின் கண்ணணனூர் மாவட்டத்திற்குள் அடங்கியுள்ள செருவத்தூரிலிருந்து மங்களாபுரம் ரயில் நிலையம் வரையுள்ள 80 கிலோமீட்டர் பகுதியை பாலக்காட்டிலிருந்து பிரித்து மங்களாபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்ட கோட்டம் அமையவுள்ளது.
இந்தப் புதிய கோட்டத்துடன், கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் ஹசன் மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளும் இணைக்கப்படவுள்ளன.
இந்தப் புதிய கோட்டம் குறித்து சமீபத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், முன்னாள் கர்நாடக முதல்வர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
மத்திய அரசு இந்தப் புதிய கோட்டத்திற்கு அனுமதி அளித்து விட்டதாம். இருப்பினும், கர்நாடகப் பகுதிகளை மங்களாபுரம் கோட்டத்துடன் இணைக்க கர்நாடகத் தரப்பிலிருந்து ஏதாவது எதிர்ப்பு வரலாம் என்று தெரிகிறது. மேலும் பாலக்காடு கோட்டத்தினரும், மேலும், சில பகுதிகளை இழக்க முன் வருவார்களா என்றும் தெரியவில்லை.