திருடனாக மாறிய என்ஜீனியர்!
சென்னை: பி.இ படித்து முடித்த வாலிபர் ஒருவர் திருட்டுத் தொழிலுக்கு மாறியுள்ளார். சென்னை கல்லூரிக்குள் கத்தியுடன் புகுந்து ரகளையில் ஈடுபட்ட அவரை அவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையின் பிரபலமான பிரசிடென்சி கல்லூரி வேதியியல் ஆய்வுக் கூடத்தில் நள்ளிரவில் ஒருவர் பூட்டை உடைத்து உள்ளே நுழைய முயன்றார்.
சத்தம் கேட்டு அங்கு விரைந்த கல்லூரிக் காவலாளி அந்த நபரைப் பிடிக்க முயற்சித்தார். அப்போது அந்த நபர் தனது பையில் வைத்திருந்த கத்தியைக் காட்டி காவலாளியை குத்தி விடுவேன் என மிரட்டினார்.
மேலும், காவலாளியிடம் அந்த நபர் ஆவேசமாக பேசியபோது, முதல் வகுப்பில் பி.இ முடித்தேன். ஆனால் வேலை கிடைக்கவில்லை. என்னை விட குறைந்த மார்க் வாங்கியவன் எல்லாம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்க்கிறான். ஆனால் எனக்குத்தான் வேலை இல்லை.
என்னை நிராகரித்த கம்பெனிகளை நான் சும்மா விட மாட்டேன். குண்டு வைக்கப் போகிறேன். அதற்குத் தேவையான ரசாயானப் பொருளைத் திருடவே இங்கு வந்தேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து காவலாளி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குப் போன் செய்தார். உடனடியாக போலீஸார் விரைந்து வந்தனர். அவர்கள் வருவதற்குள் அந்த நபர் ஓடி விட்டார்.
இருப்பினும் திருவல்லிக்கேணி பகுதயில் வைத்து அவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது அவரது சோகக் கதை தெரிய வந்தது.
அவரது பெயர் சந்திரசேகரன் (வயது 24). திருச்சி அருகே உள்ள சமயபுரத்தை அடுத்த நரசிம்மமங்கலம் என்ற ஊரைச் சேர்ந்தவர். எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படித்துள்ள இவர் கடந்த 4 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் அலைந்துள்ளார்.
சென்னை பூந்தமல்லியில் நண்பருடன் அறை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். மன உளைச்சலின் உச்சத்துக்குப் போன அவர் நேற்று முன்தினம் மாலையில் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். அங்கு காற்று வாங்கிவிட்டு திருவல்லிக்கேணி சென்று மது அருந்தி உள்ளார்.
போதை மயக்கத்தில் பிரசிடென்சி கல்லூரிக்குள் நுழைந்து ரசாயனத்தை திருட முயற்சித்து உள்ளார். தனது குடும்பச் சொத்தை தனது தந்தையை ஏமாற்றி, உறவினர்கள் அபகரித்து விட்டதாகவும், தந்தையை ஏமாற்றிய உறவினர்களை குளோராபாம் மயக்க மருந்து கொடுத்து கடத்த திட்டமிட்டதாகவும், குளோரோபாம் மயக்க மருந்து திருடவே, கல்லூரிக்குள் நுழைந்ததாகவும் கூறினார்.
மேலும் தனக்கு வேலை தராத நிறுவனங்களை தாக்க குண்டு தயாரிக்க தேவையான ரசாயனங்களை திருட வந்ததாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து அவரது அறைக்குச் சென்று சோதனை நடத்திய போலீசார் அவரை கைது செய்தனர்.
சந்திரசேகரின் தந்தை வெங்கடாசலபதி சொந்த ஊரில் நெசவுத் தொழில் செய்து வருகிறார். இவருக்கு தாயார் இல்லை. ஒரு அண்ணனும், தங்கையும் மட்டும் உள்ளனர்.
கிட்டத்தட்ட கற்றது தமிழ் படத்தில் வரும் ஜீவா கேரக்டரைப் போவே சந்திரசேகரனும் நடந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.