வீட்டுப் பாடத்தால் பலன் இல்லை-யு.எஸ் ஆய்வு
வடக்கு கலிபோர்னியாவில் உள்ள டியூக் பல்கலைக்கழகம், 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களிடையே ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில்தான் குழந்தைகளுக்கு ஹோம்ஒர்க் கொடுப்பதால் அவர்களின் அடிப்படை திறன் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
உயர்நிலை பள்ளி மாணவர்களும், தொடக்கப் பள்ளி மாணவர்களும் இந்த ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய அளவிலான தேர்வை இருதரப்பு மாணவர்களும் எப்படி எதிர் கொள்கின்றனர், அதற்காக வீட்டில் எப்படி பயிற்சி பெறுகின்றனர் என்பது கண்காணிக்கப்பட்டது.
இதில், வீட்டுப்பாடம் செய்வதால் உயர்நிலை பள்ளி மாணவர்களின் படிப்பின் தரம் உயருகிறது. ஆனால் தொடக்கப்பள்ளி குழந்தைகளால் முழுமையாக கவனம் செலுத்தி படிக்க முடிவதில்லை. பள்ளியிலும் படித்து விட்டு, வீட்டிலும் ஹோம் ஒர்க் செய்வதால் குழந்தைகள் சோர்வடைந்து விடுகின்றனர் என்று ஆய்வில் கண்டறியப்பட்டது.
வீட்டுப்பாடம் என்ற பயிற்சி தோல்வியைதான் தரும் என்றும் அந்த ஆராய்ச்சி கூறியுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து பெற்றோர் - ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்த மார்கரெட் மொரிசே கூறுகையில், பள்ளியில் குழந்தைகள் மனதளவிலும், உடலளவிலும் மிகவும் சோர்ந்து விடுகின்றனர். வீட்டுக்கு வந்த பிறகும் அதையே செய்கின்றனர். அவர்களை வீட்டுப்பாடம் செய்ய சொல்லி நிர்பந்திப்பது எதிர்வினையைத்தான் தரும். எந்த மாற்றம் ஏற்படுத்த முடியாது என்கிறார்.