வட மாநில பயணிகளை கண்டித்து குழித்துறையில் ரயில் மறியல்
மார்த்தாண்டம்: ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு செய்யப்படாதோர் பயணிக்கும் பெட்டியின் கதவைத் திறந்து விடாமல் வட மாநில பயணிகள் பூட்டிக் கொண்டதால், பிற பயணிகள் ரயிலைக் கிளம்ப விடாமல் மறித்துப் போராட்டம் நடத்தினர்.
கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்லும் ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 5.30 மணிக்கு புறப்பட்டது. பொதுப் பெட்டியில் ஏராளமான வடமாநில பயணிகள் இருந்தனர். வழியில் கூட்டம் ஏறினால் இடநெருக்கடி ஏற்படும் என நினைத்த அவர்கள் பெட்டியின் கதவுகளை உள்பக்கமாக பூட்டி விட்டனர்.
இந்த நிலையில், இரணியல் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தது. அங்கு காத்திருந்த பயணிகள் பொதுபெட்டியின் கதவுகளை திறக்கமுடியாததால் ஏமாற்றம் அடைந்தனர். அந்த ரயில் காலை 6.30 மணிக்கு குழித்துறை வந்தது. அங்கும் ஏராளமான பயணிகளும், பொதுமக்களும் ஏற முண்டியடித்து சென்றனர். கதவு உள்பக்கமாக பூட்டபட்டிருந்ததால் அவர்கள் உள்ளே இருந்த வடமாநில பயணிகளிடம் கதவை திறக்குமாறு கூறினர். எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் கதவை திறக்கவில்லை.
அதற்குள் சிக்னல் கிடைத்து ரயில் புறப்பட தாயாரானது. ஆத்திரமடைந்த பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி ரயிலை மறித்தனர். ரயில் நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதிகாரிகள் கூறியும் கதவை திறக்க வடமாநில பயணிகள் மறுத்துவிட்டனர்.
இதையடுத்து அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். கைது செய்வோம் என போலீசார் எச்சரித்ததால் வேறு வழியின்றி கதவை திறந்துவிட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வட மாநிலத்தவர்களால் ஏற்பட்ட இந்த அடாவடியால் ரயில் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
வட மாநில பயணிகள் ரயில் பயணங்களின்போது செய்யும் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. டிக்கெட்டே எடுக்காமல் பயணிப்பது, முன்பதிவு செய்த பெட்டிகளுக்குள் புகுந்து சீட்டுகளை ஆக்கிரமிப்பது, இப்போது பொதுப்பெட்டியை பூட்டிக் கொண்டு பயணித்தது என அவர்களின் தொல்லை அதிகரித்து வருவதற்கு அதிகாரிகள் முடிவு கட்ட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.